எத்தனையோ பொங்கல்
எங்கள் தமிழ் பண்பாட்டில்
சர்க்கரைப் பொங்கல்
சந்தணப் பொங்கல்
பால்ப் பொங்கல்
பழப் பொங்கல
மாட்டுப் பொங்கல்
காணும் பொஙகல்
இன்னும் எத்தனையோ
எம்மிடத்தில் இருந்தும்.....
மணப்பாற மாடு கட்டி
மாயவரம் ஏரு பூட்டி
வயல் காட்டை உழுது
பச்சை வயலாக்கி
பருவத்தோடு கதிர்பறிய
போடியார் வட்டைக்குள்
வேளாமை வெட்டப்போய்
ஊரெல்லாம் சிதேவி
உணவளிக்க உதவிய
ஞாயிற்றுக்கு நன்றி சொல்லும்
தமிழ் பொங்கலே
தைப் பொங்கல்
பகலவன் கோலம்போட
பறவைகள் பண்ணிசைக்க
மலர்கள் மணம் பரப்ப
மரங்கள் தலையசைக்க
மட்டக்களப்பு கரும்புசேர்த்து
யாழ்ப்பாண வெல்லமிட்டு
திருமலை அரிசி சேர்து
வவுனியா வாழைப்பழமிட்டு
அம்பாரை பசும்பால்
அனைத்தையும் ஒன்றுசேர்த்து
பொங்குவோம் பொங்கல்
வெள்ளம் மடைதிறந்து
வேகமாய்ப் போவதுபோல்
நம் உள்ளத்து
வேதனைகள்
இல்லாது பொங்குவோம்
இன்னும் எனது நாட்டில்
எனது மண்ணில்
தூர விரட்டப்பட்டு
தூங்கக்கூட இடமில்லாத
துணியைத் தொட்டிலாக்கி
பனியிலும் மழையிலும்
படுத்துறங்கும்
எம் இனத்தின்
சாந்தி வேண்டிப் பொங்குவோம்.
பண்பாடு பறித்தெறியப்பட்டு
சமயம் சபைக்காகாமல்
விழுமியம் வெறுக்கப்பட்டு
வெட்கத்தினை விலைகேட்கும்
அநாகரிகம் அழியப் பொங்குவோம்.
இமைமூடிய பொழுதிலும்
உன் நினைவுகளை
மூடாமல் மனக்கதிரையில்
சிம்மாசனம் தந்து
மரணத்தின் கடைசி மூச்சிலும்
உன் உயிரையே
சுவாசிக்கும் காதலரை
வாழ்த்திப் பொங்குவோம்.
பசிபோக்கப் பொங்குவோம்
பாவம் அழியப் பொங்குவோம்
அநாதைகள் இல்லையென
அறைகூவிப் பொங்குவோம்
அன்பை பகிரப் பொங்குவோம்
அறிவை ஊட்டப் பொங்குவோம்
துயரில் கைகொடுக்கப் பொங்குவோம்
துட்டரை விரட்டப் பொங்குவோம்
பொங்கலோ பொங்கல் எங்கும் அன்புப் பொங்கல்.....
0 comments:
Post a Comment