(வந்தாறுமூலையில் வந்திறங்கும் வெள்ளத்தில் அகப்பட்ட மக்கள்)
ஆட வைத்திருக்கும் ஓடும் வெள்ளத்தில் பாடுமீன் வாவி பரவி பரிதவிக்கும் மக்கள் லெட்சோப லெட்சம். இரண்டாம் தடவையும் பெய்து வரும் அடைமழையில் மாவட்டச் செயலாளர் அறிக்கைப்படி 58,000 குடும்பம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 177 நலன்புரி முகாங்களில் 21,000 குடும்பங்கள் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப் பிரிவுகளும் வெள்ளத்தில் மூழ்கி கிடக்கிறது. குறிப்பாக கோடைமேடு, சித்தாண்டி, செங்கலடி, தன்னாமுனை, கல்லாறு, ஏறாவூர், வாகரை, பிள்ளையாரடி போன்ற எழுவான்கரைப்பிரதேசங்கள் மற்றும் படுவான்கரைப் பிரதேசத்தின் அனைத்துப் போக்குவரத்துகளும் துண்டிக்கப்பட்ட நிலையில் இலங்கை கடற்ப்படையின் உதவியுடன் இவர்களுக்கான படகு சேவை நடைபெற்று வருவதுடன், பொதுமக்களின் தோணிகள் மூலமான சேவைகளும் செய்யப்பட்டு வருகின்றது.
இவைதவிர நான் சித்தாண்டி பக்கம் 03.02.2011 அன்று செய்தி சேகரிக்க சென்றபோது இந்தப்பக்கம் பிரயாணம் செய்ய முடியாமல் கிழக்குப் பல்கலைக்கழகத்தினில் இருந்து நிலைமைகளை அவதானிக்க முடிந்தது. அங்கு அநேகமான மக்கள் நடையிலும், உழவு இயந்நிரங்களிலும், வகை தொகையில்லாமல் வந்திறங்கினர். அவர்களில் குழந்தைகள், பெண்கள் வயோதிபர்கள் என பலர் மிகவும் சிரமப்பட்டு வருவதை காணும்போது மிகவும் பரிதாபமாக இருந்தது. இவர்கள் அநேகமாக தீவுப் பகுதி, வந்தாறுமூலை வடக்கு, மற்றும் மேற்கு அதேபோல் கொம்மாதுறை மேற்கு மற்றும் வடக்கு கிராம சேவகர் பிரிவுகளில் இருந்து வருகை தந்தனர். 03.02.2011 அன்று இரவு வரைக்குமான கணக்கெடுப்பின்படி சுமார் 211 குடும்பம் தற்க்காலிகமாக தஞ்சம் புகுந்திருந்தனர். அநேகமான மக்கள் நாளாந்தம் கூலிவேலை செய்யும் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மக்களாகவே இருந்தனர். இவர்கள் குறித்த நேரம் வரைக்கும் அநாதரவாகவே விடப்பட்டிருந்தனர்.
(மூழ்கிகொண்டிருக்கும் கிழக்குப் பல்கலைக்களகம்)
இருப்பினும் கி.ப.கழகத்தின் சமுகவியல் துறையில் மூத்த விரிவுரையாளரும், சமூக சேவகருமான தில்லைநாதன் அவர்களின் பரோபகார சிந்தையில் இந்த பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கான உடனடி உணவு உறைவிட வசதிகள் அங்கு கடமைபுரியும் சக ஊழியர்களின் உதவியுடன் செய்து கொடுக்கப்பட்டமையை இங்கு நான் பாராட்டாமல் இருக்க முடியாது. அத்துடன் இன்னும் உதவக்கூடிய பெரியவர்களிடமும் உதவிகள் பெற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கிறார். குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் அவர்களும் சிறியளவில் கொடுத்து உதவியதுடன். பிரதி அமைச்சர் வி.முரளிதரன் அவர்களும் அம்மக்களின் அவல நிலையை பார்த்துச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இம்மக்கள் போன்று மாவட்டம் பூராகவும் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிலமையும் மிக மோசமாகவே இருப்பதனைக் காணக்கூடியதாக உள்ளது. சுமார் நான்கு அடி அளவில் வெள்ளம் வேகமாக பரவி ஓடுவதனை என்னால் உணரக்கூடியதாக இருந்தது. அநேகமான சொத்துக்கள் சிதைவடைந்துள்ளது. குறிப்பாக அவர்களது விவசாயப்பண்ணைகள் முற்றுமுழுதாக நீரில் மூழ்கி இருப்பதனை காணக்கூடியதாக இருந்தது. அது போன்று இன்னும் நிறைய இழப்புகள் நேர்ந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது. அதற்கிடையில் இங்கு மாணவர்கள் அனைவரும் வீடு சென்றுள்ள நிலையில் பல்கலைக்கழகத்தின் அனைத்து கற்பித்தல் செயற்பாடுகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
ஆகவே திரும்ப திரும்ப அடிக்கும் வெள்ளம் மக்களை அடியோடு குன்றவைத்துள்ளது. அவர்களது வாழ்வாதாரம், வாழ்விடம், கல்வி, வீடுகள் என அனைத்தையும் அழித்துள்ளது. சுனாமி அனர்த்தத்துடன் ஒப்பிடும்போது இது பன்மடங்கு அழிவினை மக்களுக்கு ஏற்ப்படுத்தியுள்ளது.
2 comments:
Hola: Muy buen blog. ¡Felicitaciones! Soy educador y tengo un blog de carácter educativo sobre filosofía, literatura y cine. Lo invito a conocerlo. La dirección es:
http://alvarogomezcastro.over-blog.es
Saludos desde Santa Marta, Colombia
Hi Ok Thanks to your comments but I could not get your language....
Post a Comment