ADS 468x60

26 September 2011

யாழ் இசை வாணி.

பெரிய சமுத்திரத்தினை கிழித்து வரும் வெள்ளலைபோல் மனதில் பிரபாகித்த மகிழ்சிகள் ஒன்றா! இரண்டா! நெடு நாள் ஆசையின் நிறைவேற்றமாய் கூழாங் கற்களுக்கிடையே மாணிக்கம் போல் பாடும் சின்னக் குயில், நாதங்களின் பள்ளிக் கூடம், வேதங்களின் இசை கோலம், கீதங்களின் சொந்தக்காறி, வடக்கின் இசை வசந்தம், யாழ் வாணி 'ஆதித்தியா' பழிச்சென என்னை பார்த்து சிரிக்கிறாள். 

கண்டேன் கலை முகத்தினை ஆச்சரியத்தோடே, முழுசாய் இருந்த நான் தலை கால் புரியாமால் முக்காலாய் போனேன். 'நீங்கள் ஆதித்யாவா மா' என்றேன.
அவளின் வாய் மட்டும் அசைந்தது. வெள்ளவத்தயின் கடற் காற்றுகளிடையே அவளின் அந்த மெல்லிய இசை மொழி மறைந்து கொண்டதோ என்னவோ, இருந்தும் தகப்பன் முகத்தினை மலர வைத்தவராய் 'ஆமாம் தம்பி' என்றார். 
மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்திய மகிழ்சியில் அவளின் இசைக்கு அடிமையான என் மனம், பாடி ஓயாத ஆதித்யா குழந்தையின் முன்னால், ஒரு கணம் ஆசையில் ஊஞ்சல்போல் ஆடி ஓய்ந்தது.

இசை, கட்டுக்கடங்காத காட்டாறு போல் கல்லான மனங்களையும் அடித்துச் சென்று விடுகிறது. இசைக்கு இறைவனும் அடிமை. நாமெல்லாம் எம்மாத்திரம்!. 

நான் என்னை மறந்த நிமிடங்கள், தமிழின் மொத்தத்தினையும் தரிசித்த வேளைகள், ஆதித்தியாவின் அரங்கேற்றத்தில் மட்டும்தான். 

கனகாம்பரம் கூந்தலில் அணிந்து, நெற்றியில் நெற்றிச் சுட்டியுடன் அழகான பாவாடை சட்டையுடன் என் முன்னே நின்று சிரித்தாள் அந்த குழந்தை தெய்வம். தலையை தடவி விட்டு 'யாரம்மா உங்களுக்கு இந்த ஆடை அலங்காரங்களை செய்து உதவியது' என்றேன். மெதுவாக வெட்கப்பட்டு தலை குனிந்து சிரிக்கிறாள். அதற்கு அப்பா அருணகிரி 'அவள்தான் எல்லாம் யாரும் ஒன்னும் பண்ணவில்லை' என்றார். ஆச்சரியமாக இருந்தது.

ஆதித்யாவின் தாயாரால் வீட்டுப் பொறுப்பு, வேலைப் பழு அத்துடன் குழந்தையை பராமரித்தல் போன்ற இன்னோரன்ன இடைஞசல்கள் அவரை அங்கேயே இருத்தி விடுகின்றது. 

சரியாகவும், சவாலாகவும் இசையை நன்கு கற்று பாடுகின்ற ஆதித்யாவுக்கு இந்த பொப், கிப்கொப், றப் எல்லாம் எப்பவும் முடியும். முடியும் என்பதற்க்காய் எம்போன்ற ரசிகர்களை மடியவைக்கலாமா??? என்பதனால்தான் ஆதித்யா குட்டி நல்ல பாடல்களையே தெரிவு செய்கிறார். 

ஏன் இதனைச் சொல்லுகிறேன் என்றால், கலைஞ்ஞன் தனிப்பட்ட நபருக்கு சொந்தமானவன் இல்லை. அவன் ஒரு பொதுச் சொத்து. அதனை ஆதித்தியா குழந்தை நன்கு மதிக்கிறது.

'ஒரு போட்டோ எடுத்து கொள்ளட்டுமா என்றேன்' 'அதற்கென்ன' என்று அருகிரி ஐயா கூற நான் எனது கையடக்க தொலை பேசியிலேயே எடுத்துக் கொள்கிறேன். 

ஆசையில் பாதி தீர்ந்தும் அடங்காதவனாய் எப்போ திரும்புகிறீங்க என்று ஏக்கத்துடன், விடிய விடிய பிரயாணித்த தூக்கத்துடன் நிற்கும் குழந்தையை நோக்கி நான், அதற்கு அவர்கள் 'அது சொல்ல முடியாது, அவர்கள் எத்தனை மணிக்கு பாடல் பதிவினை முடிக்கிறார்களோ அப்போ வருவோம்' என்று கூறினார்.

பூக்களை கையில் அள்ளி ஆராதிக்கும் பூசகர்போல் அன்பினை என்மீது அள்ளிச் சொரிந்தவராய் வஞ்சகமில்லாத நெஞ்சினன், இசை மொட்டுக்கு சொந்தக்காரன் ஐயா அருனகிரி அவர்கள் 'நீங்கள் எங்கே போகின்றீர்கள்' என வினவ 'நான் றத்மலானை' என்று பிரிவுத்துயரில் கூறுகிறேன். அதற்கு அவர் 'ஆகா நல்லதாய்போச்சே நாங்களும் அங்கேதான்' என்று முச்சக்கர வண்டியில் என் மூச்செல்லாம் இசை வாசத்தோடு மறக்கமுடியாத பயணம் பதிவாகியது. 

யாழில் இருந்து மிகவும் சிரமத்தின் மத்தியில் வந்திருக்கும் இவர்போன்ற இன்னும் எத்தனையோ எங்கள் தமிழ் குழந்தைகள் எடுக்கும் முயற்சிகளை சொல்லிக் கொண்டே போகிறார். 

எங்களில் உதவி செய்யும் மனப்பாங்கினர், பரோபாரிகள் எவ்வளவு பேர் இருந்தும், அவற்றை கொண்டு சென்று கூறவும், கொண்டு வந்து சேர்க்கவும் யாரும் இல்லை என ஆதங்கப்படுகிறார். யாழ் நதிபோல் இன்னும் எங்கள் தழிம் மணக்கும் ஊரெங்கும் இருந்து உலகமெல்லாம் செம்மொழியாம் செந்தமிழ் இசை அருவி பெருக்கெடுத்து பாயவேணும் என்று பிரார்த்திக்கிறேன்.

3 comments:

ம.தி.சுதா said...

இசையில் மயங்காத இதயமுண்டுடோ..

நன்றி நன்றி..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
7 ம் அறிவு பாடலில் ஹரிஷ் ஜெயராஜ் அரைத்தமாவும், சுட்ட வடையும்

Unknown said...

நானும் இவங்க பாடல்களில் மயங்கி இருக்கிறேன்!
ஆடாமல் அசையாமல் ஆலாபனைகள் கொட்டும்!

S.T.Seelan (S.Thanigaseelan) said...

நன்றி சகோதரங்களே, ஆதித்யாவை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும், அந்த குழந்தையை சந்தித்தது நான் செய்த பாக்கியம்தான்.

Post a Comment