ADS 468x60

13 January 2013

மட்டக்களப்பில் தை பிறந்தால் இவ்வளவு சந்தோசமா?

ஆகா, ஓகோ என்று களைகட்டியிருக்கும் மட்டக்களப்பு மாநிலத்தின் பொங்கல், மிகவும் சந்தோசமாகக் கொண்டாடப்படுகிறது. அனைவரும் ஆநந்தமாக மழைக்கு பின்னர் வெளித்திருக்கும் இந்த தருணத்தினை பயன்படுத்தி வீதிகள், சந்தைகள், கடைத்தெருக்கள் எல்லாம் குவிந்து நிற்க்கும் மக்கள் மகிழ்ச்சியோடு தயாராகி வருவதனை அவதானிக்க முடிகிறது.



தைப்பொங்கல் தை 1 அன்று தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. தமிழர் திருநாளாக தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. இவ்விழா சமயங்கள் கடந்து அனேக தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாக கொண்டாடப்படுகிறது.


மட்டக்களப்பு மக்கள் நன்றி செலுத்தும் உழைத்து வாழும் விவசாயிகள் இந்த வீடியோவில் இணைக்கப்பட்டுள்ளனர்.
(மறக்காமல் உங்களது கருத்தை comment இல் தெரிவியுங்கள் & பேஷ்பூக்கில் பகிர்ந்துகொள்ளுங்கள் ..)
பொங்கல் விழா, மக்களால் இயல்பாகக் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழா. உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல்.

இக்காலத்தில் வயல் வெளியில் தை மாதத்தில் கதிர்கள் அறுவடைக்குத் தயாராகி, தலை சாய்த்து, வரப்புகளின் மேல் படர்ந்து,  நடந்து செல்ல வழி இல்லாமல், பாதைகளை மறைத்து இருக்கும். தையில் அறுவடை முடிந்த பிறகே மேற்கொண்டு தொடர்ந்து செல்ல வழி பிறக்கும்.

மேலும் அறுவடை முடிந்த பின்புதான் கடனில் மூழ்கி இருக்கும் விவசாயின் வாழ்க்கையிலும் நல்ல வழி பிறக்கும். புதிய தொழில் முலம் நிறையவே சம்பாதிக்க தொடங்கும் காலமாகும். தமிழர்கள் மாத்திரமல்ல உலகத்தின் பல பாகத்திலும் உள்ள மக்கள் இக்காலத்தினைத்தான் இளவேனிற் காலம் எனக் கொண்டாடுகின்றனர். இந்த இனிய காலத்தினை அனேகம் கவிஞ்ஞர்கள் பாடல் புனைந்தமை இதன் பெருமையை பறை சாற்றுகின்றது.

பூப்பூக்கும் மாசம் தை மாசம்
ஊரெங்கும் வீசும் பூவாசம்
சின்னக் கிளிகல் பறந்து ஆட
சிந்துக் கவிகள் குயில்கள் பாட
ஒரு ராகம் ஒரு தாளம்
வந்து சேரும் நேரம் இன்னேரம்

இவ்வாறான காலத்தில் தான் எமது மக்கள், தமிழாண்டின் தொடக்கக் காலகட்டம், உழைப்பின் பயனைப் பெற்று மகிழும் காலகட்டமாகவும் கொண்டாடுகின்றனர். புத்தொளி வழங்கிய கதிரவனைப் போற்றிய தமிழ் நெஞ்சம் உழைப்பையும், தனக்குத் துணை நின்ற உயிரையும் போற்றியது. கதிரவனின் சுழற்சியைக் கொண்ட காலக்கணிப்பைக் காட்டும் அறிவியலும், நன்றியுணர்வை வெளிப்படுத்தும் முதிர்ந்த பண்பாடும் தை மாசத்தில் விழாவில் போற்றப்படுவதை நாம் காணலாம்.

'தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற முதுமொழியை 'புத்தாண்டு வந்தால் புதுவாழ்வு மலரும்' -என்ற கருத்தோடு ஒப்பு நோக்கிப் பார்ப்பதும் உண்டு.

இயற்கையின் நன்றிக்கடன்.
தமிழன் நிலத்தை உழுதான். அந்த நிலத்தையும் ஆண்டான். அதனூடே தன் பண்பாட்டையும், நாகரீகத்தையும் உயர்த்தினான். இயற்கையோடு ஒன்றி, இயற்கையை வழிபட்டான். இயற்கைக்கு நன்றியும் தெரிவித்தான். அவனது மாண்பு மிகு வாழ்வில் எந்த ஓர் அங்கத்திலும் மண்ணின் மாண்பு மிளிர்ந்தது. அது மண்ணை ஒட்டியே மலர்ந்தது.  ஆனால் இப்போது   நமது பண்பாட்டுப் பெருமையும் நம்மை விட்டு மறைந்து வருகின்றது.

எமது மட்டு மாநில மக்கள் உழைப்பை இறுக்கி பிடித்த நிலை சற்று விலகி இருந்தாலும், அவை யுத்தத்தின் பிடியில் இருந்து விடுபட்ட பின்னர், மீண்டும் துளிர்விடத்துடங்கியுள்ளது. தொழில் நிலையில் ஆர்வம் இருந்தாலும் போட்டித்தன்மையான உலகத்துள் நுழைந்துகொள்ள முடியாத, புதிய நுட்பங்களை அறியாத பின்தங்கிய நிலையில் காணப்படும்இ எமது உயிர்வாழ்க்கைக்கு காரணமான விவசாயிகளை முன்னுக்கு கொண்டுவர வேண்டிய சவாலை இந்த மாநிலத்தின் பொறுப்பதிகாரிகள் கருசனையில் கொள்வார்களா? என்ற கேள்விக்கு கிடைக்கும் சாதகமான பதிலில்தான் ஒரு பொலிவான பொங்கலை பொங்கி மகிழும் நிலை உருவாகும் அந்த கனவு நனவாக இறைவனை வேண்டி அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்.

சர்க்கரைப் பொங்கல் சந்தணப் பொங்கல்
பால்ப் பொங்கல் பழப் பொங்கல் 
மாட்டுப் பொங்கல் காணும் பொங்கல் 
இன்னும் எத்தனையோ எம்மிடத்தில் இருந்தும்.....  

மணப்பாற மாடு கட்டி மாயவரம் ஏரு பூட்டி 
வயல் காட்டை உழுது பச்சை வயலாக்கி 
பருவத்தோடு கதிர்பறிய போடியார் வட்டைக்குள் 
வேளாமை வெட்டப்போய் ஊரெல்லாம் சீதேவி 
உணவளிக்க உதவிய ஞாயிற்றுக்கு நன்றி சொல்லும் 
தமிழ் பொங்கலே...  தைப் பொங்கல்  

பகலவன் கோலம்போட பறவைகள் பண்ணிசைக்க 
மலர்கள் மணம் பரப்ப மரங்கள் தலையசைக்க 
மட்டக்களப்பு பால்சேத்து யாழ்ப்பாண வெல்லமிட்டு 
திருமலை அறுசுவை சேர்து வவுனியா பழமிட்டு 
அம்பாரை அரிசு அனைத்தையும் ஒன்றுசேர்த்து  
பொங்குவோம் பொங்கல்

வெள்ளம் மடைதிறந்து வேகமாய்ப் போவதுபோல் 
நம் உள்ளத்து வேதனைகள் இல்லாது பொங்குவோம்..  
இன்னும் எனது நாட்டில் எனது மண்ணில் 
தூர விரட்டப்பட்டு தூங்கக்கூட இடமில்லாத 
துணியைத் தொட்டிலாக்கி பனியிலும் மழையிலும் 
படுத்துறங்கும் எம் இனத்தின் சாந்தி வேண்டிப் பொங்குவோம்.

பண்பாடு பறித்தெறியப்பட்டு சமயம் சபைக்காகாமல் 
விழுமியம் வெறுக்கப்பட்டு வெட்கத்தினை விலைகேட்கும் 
அநாகரிகம் அழியப் பொங்குவோம்.

இமைமூடிய பொழுதிலும் உன் நினைவுகளை 
மூடாமல் மனக்கதிரையில் சிம்மாசனம் தந்து 
மரணத்தின் கடைசி மூச்சிலும் உயிரையே 
சுவாசிக்கும் காதலரை வாழ்த்திப் பொங்குவோம்.

பசிபோக்கப் பொங்குவோம் பாவம் அழியப் பொங்குவோம் 
அநாதைகள் இல்லையென அறைகூவிப் பொங்குவோம் 
அன்பை பகிரப் பொங்குவோம் அறிவை ஊட்டப் பொங்குவோம் 
துயரில் கைகொடுக்கப் பொங்குவோம் துட்டரை விரட்டப் பொங்குவோம் 
பொங்கலோ பொங்கல் எங்கும் அன்புப் பொங்கல்.....

0 comments:

Post a Comment