ADS 468x60

02 June 2017

சிலப்பதிகார பாட்டுடைத் தலைவிக்கு மட்டக்களிப்பில் மண்மணக்கும் சடங்கு..

கோடை மழை பெய்ய வேண்டும், கொடும்பாவம் அகல வேண்டும், நாடிவரும் அடியவர்கள் துன்ப துயரம் அறவேண்டும். பாடி ஓடி ஆடி வரும் அடியவர்கள் தேடி தேடி கண்ட பொருள், உன்மை, அறம், ஒழுக்கம் என பல உன்மைகளை இந்த சடங்கு விழாக்களுக்குள் புதைத்து மக்களை ஒன்றுபடுத்தி,  சகோதரத்துவம், ஒத்தாசை, விட்டுக்கொடுப்பு, விருந்தோம்பல், கொல்லாமை போன்ற நல்ல பண்புகளை புகட்டும் இந்த பண்பாட்டு மரபுகள் அன்று மட்டமல்ல இன்றும் நின்று நிலைப்பதை மீன் பாடும் தேனாட்டில் எங்கும் காணலாம்.
மின்னல் ஒளிபரப்ப சென்நெல் கதிர் இசைக்க 
சோவெனத் தருக்கள் பூத்து சொரிந்து மணம் வீசிநிற்க்க 
ஆவெல்லாம் பால் சொரிந்து அழும் பிள்ளை பசிதீர்க்க 
தென்னகத்தே கண்ணகித்தாய் வண்ணமதாய் பிறக்கின்றாள். 

மதுரை மானகரம் மங்களமாய் அருள் பரப்ப 
எதிரே நின்றபகை எல்லாம் ஒளிந்துவிட 
உதிரும் புன்னகை உதட்டினில் ஜொலிக்க 
உதித்தாள் பூம்புகார் மண்ணில் உத்தமி 
தெய்வக் குழந்தையாய் உதித்த தேவி மானாக்கன் 
கையில் மகளாய் மலர்ந்து நின்றாள் 
வையகத்தே ஆயிரங்கண்ணாள் அம்பிகை வடிவில் 
உய்யவைக்க வந்துதித்தாள் ஊரெல்லாம் நமக்காக 

எனப் பெருமை கொண்ட கண்ணகி வழிபாடானது, வங்கக் கடல் மாலையிட சங்கத்தமிழ் எதிரொலிக்கும், மங்களத் திருநாடாம் இலங்காபுரியிலே, நீர்த்தாய் குளிர்ப்பரப்ப நிலத்தாய் வளங்கொளிக்கும் பார்த்தால் பசி தீரும் பசும் சோலை பட்டினமாம், மீனினம் பாட்டிசைக்க, வானகம் கறுக்கக் கண்டு மயில்கள் கோலாகலிக்கும். மட்டுமா நகரின் தெற்கே, தாமரை மலர்கள் எல்லாம் வாவெனக் கையசைக்க, மாமதுரை பூத்து நின்று வாசம் பரப்புகின்ற செட்டியார் குல மக்கள் செறிந்திலங்கு செட்டியூரில் வந்தமாந்த மாதுக்கு; கையில் தீச்சுடரும், மடியில் மடிப்பிச்சையும், தோழில் காவடியும், சொண்டில் அலகும் குத்தி, வசந்தன் வைத்து கும்மி கரகம் ஆட, பசிந்தாள் இலையில் பசி ஆற்றி குளிர்த்தில் வைத்து கொண்டாடும் வைகாசிச் சடங்கிது. இது வந்து விட்டால் அனைவருக்கும் கைராசி தான்.

'திருமேவு கயிலாய மீதினிலிருந்து
செப்பரிய மட்டுமா நகரத்திலிருந்து
தருமேவு கழனி சூழ் செட்டிநகர்தனிலே
திருமேவு அருள்வரைக் குடி கொண்ட அம்மையே'

'உரைசார் பத்தினியை உயர்ந்தோர் ஏற்றுவர்' என்று சிலப்பதிகாரம் உணர்த்தும் முழு உண்மைக்கமைவாக தமிழர்கள் ஒழுக்கத்துக் முதன்மை கொடுக்கும் பாங்கினை இந்த வழிபாடு எடுத்தியம்புகின்றது. தமிழர்களின் நெறிமுறைஇ கலாசாரம், நாகரீகம் போன்ற வரம்புகளுக்கு உள் நின்று பக்தி, பயம், சித்தி இவற்றை அடி நாதமாகக் கொண்டு, உருக்கமாகவும் நெருக்கமாகவும் கொண்டாடப்படும் பத்தினி தெய்வமான கண்ணகைக்கு எடுக்கின்ற சடங்கு மட்டக்களப்பு பூராகவும் ஒரு வருடப் பிறப்பாகவே தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

மட்டக்களப்பில் தோன்றியுள்ள 7 பிரசித்தி பெற்ற கண்ணகை அம்மன் ஆலயங்களுள் விசேடமானதும், அற்புதம் நிறைந்ததும் 6 ஊர்களை ஒன்று கூடி பூசை செய்கின்ற செட்டியூர் கண்ணகியம்மன் சடங்கு வழா பற்றியும், இது தமிழர்களுடன் கொண்டுள்ள தொடர்பு முறை, பாரம்பரியம் என்பன பற்றியும் எடுத்துரைக்க இக்கட்டுரை எழுதப்படுகிறது.

சிலப்பதிகாரமும் கண்ணகையும்
கண்ணகை என்கின்ற கதாப்பாத்திரம் தமிழில் எழுதப்பட்ட ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான இளங்கோவடிகளால் இயற்றப் பெற்ற சிலப்பதிகாரத்தில் பெருமைப்படுத்தப்பட்ட ஒன்றாகும். இவர் கண்ணகையின் கற்பொழுக்கம், அரசியல் முறைமை மற்றும் ஆடற்கலை என்பனவற்றை வைத்து பின்னியுள்ள காப்பியமாகும்.

இதில் கண்ணகி பாட்டுடைத் தலைவி, கோவலவனது மனைவி மற்றும் களங்கமற்ற பெண்ணொழுக்கத்தின் எடுத்துக்காட்டாகவும், கற்பு நெறியின் அளவு கோலாகவும் படைக்கப்பட்டவள். 'தெய்வம் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள்' என வள்ளுவர் உரைத்த மங்கை, கணவன் போற்றா ஒழுக்கம் உள்ள போதும் அதை மாற்றா உள்ள வாழ்க்கையே ஆனவள். கணவனுக்காக மதுரையை அழித்தவள் என கண்ணகை தெய்வத்தின் சிறப்பினை சிலப்பதிகாரம் முழக்கமிடுகிறது.

இலங்கையில் கண்ணகை அம்மன் வழிபாடு

ஓவ்வொரு வழிபாட்டு முறைக்கும் பின்னணியில் கதைகள், சான்றுகள் உண்மையை எடுத்துரைக்கின்றன. அதன் அடிப்படையில் பத்தினி தெய்வமாகிய கண்ணகை அம்மன் வழிபாடு கி.பி 171 முதல் கி.பி 193 வரை அனுராதபுரத்தில் இருந்து ஆட்சி புரிந்த கஜபாகு என்ற அரசனால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதென 'இராசவானி' என்ற சிங்கள நூல் கூறுகின்றது.

 கஜபாகு ஆட்சிக்காலத்தில் சேரன்இ செங்குட்டுவன் தனது தலை நகராகிய வஞ்சியில், இமைய மலையில் இருந்து கொண்டு வந்த கல்லில் கண்ணகைக்கு சிலை செய்து கோயில் அமைத்து பெருவிழா எடுத்தான். கி.பி 178 இல் நடந்த இவ்விழாவிற்கு செங்குட்டுவன் தனது நண்பனாகிய கஜபாகுவினை அழைத்ததாகவும், அதனை ஏற்று விழாவில் கலந்து கொண்டதாகவும் சான்றுகள் கூறுகின்றன.

விழாவில் கலந்து கொண்ட கஜபாகு பத்தினியாகிய கண்ணகியின் அற்புதங்களைக் கண்டு வியந்தான். பின்னர் இலங்கையிலும் கண்ணகி வழிபாட்டை பரப்ப செங்குட்டுவன் சந்தன மரத்தினால் செய்த கண்ணகி சிலையும்இ ஒரு கால் சிலம்பினையும் சந்தன மரப்பேலையில் வைத்து கஜபாகுவிடம் கையளித்தான்.

கஜபாகு கண்ணகி விக்கிரகத்துடன் மாதக்கல்லுக்கருகே உள்ள ஜம்பு கோணத்துறைமுகத்தில் வந்திறங்கி யானை மேல் சிலையை வைத்து பல யானைகள் பின்னே வர ஊர்வலமாய் சென்ற இடம் எல்லாம் கண்ணகி வழிபாடு தோன்றியது என்ற ஒரு வரலாற்று கூறுகின்றது.

சிங்கள மக்களிடையே கண்ணகி வழிபாடு
பத்தினி வழிபாடு வடகிழக்கில் மட்டுமல்லாது சிங்கள மக்களாலும் இவ்வழிபாடு தொடரப்பட்டு வருகின்றது. கஜபாகு நடாத்தி வந்த கண்ணகி அம்மன் வழிபாட்டின் தொடர்ச்சியே கண்டியில் நடக்கும் 'எசல பெரகராவாகும்'. தலதா மாளிகை எசல பெரகராவில் தலதா மாளிகை பெரகராஇ நாக தேவாலயப் பெரகராஇ பத்தினி தேவாலயப் பெரகரா என்பன நடப்பது குறிப்பிடத்தக்கது. சிங்களவர்கள் கண்ணகியை 'பத்தினி தெய்யோ' என்று வணங்குகின்றனர். பத்தினிக்கு உடகம, கண்டிப் பகுதியில் 2ம் இராஜ சிங்கனால் கட்டப்பட்ட புராதன கோயிலில் இன்றும் 15 நாள் திருவிழா நடாத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. தவிரவும் ஹங்குரன் கெட்ட, கதிர்காமம் போன்ற இடங்களிலும் வழிபாடியற்றப்படுகிறது. இங்கு பத்தினி தெய்வம் பயபக்தியுடன் தெய்வமாக வழிப்படுகின்றது.

கிழக்கிலங்கையில் கண்ணகி வழிபாடு

நகரிலுயர் பட்டி நகர் தம்பிலுவிலெருவில்
நாவலர்கள் துதிபாடும் பரவுகாரேறு தீவு 
பகரரிய மகிழூர் மகிழடித்தீவு
பண்பு செறி தாழை நகர் கொக்கடிச் சோலை
நிகரான தாண்ட நகர் வந்தாறு மூலை 
நிதியமிகு கல்முனை புதுக்குடியிறுப்பு
தகதிகென நடனமிடு செட்டி நகர் குடி கொண்ட 
தையலே உனது அருள் தந்துதவுமம்மா!

சடங்கு காலங்களில் பக்திக்கும் பயத்துக்குமான முள் காவடி


இந்த கண்ணகி அம்மன் காவியத்தில் கோடிட்டுக் காட்டப்படும் இடங்களில் கிழக்கில் பிரசித்தமான கண்ணகி ஆலயங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக மட்டக்களப்பில் இவ்வழிபாடு கி.பி 16ம் நூற்றாண்டில் தான் தோன்றியதுஇ வளர்ந்தது என மட்டக்களப்பு மான்மியம் உணர்த்துகிறது. தவிரவும் 'கந்தப்பர் என்பவர் தலைமையில் யாழ்ப்பாணத்தில் இருந்து புலம் பெயர்ந்தவர்கள் தங்களுடன் கொண்டு வந்த 07 கண்ணகை அம்மன் சிலைகளை ஏழு கிராமங்களில் பிரதிஸ்டை செய்து கோயில் கட்டி வணங்கியதாகவும்' மட்டக்களப்பு மான்மியத்தில் இன்னொரு கதை கூறப்படுகின்றது.

செட்டிபாளையத்தில் கண்ணகி வழிபாடு

 'செட்டிநகர் அமர்ந்துலவும் தேவி கண்ணகையை நித்தம் தேடியே நினைத்து மனம் கூவாய் குயிலே' என்று வசந்தன் பாடல் கூறுவதற்கிணங்க, மட்டக்களப்பில் குன்றில் இட்ட விளக்கு போல் குவலயம் எல்லாம் ஒளி வீச அருள் ஆட்சி பொழிந்துகொண்டு செட்டிபாளையத்தில் அமர்ந்து ஸ்ரீலஸ்ரீ கண்ணகி அம்மனாக தெய்வ தரிசனம் கொடுத்துக் கொண்டிருப்பது பலராலும் பயபக்தியுடன் பேசப்படுகின்றது.

கண்ணகி அம்மன் சடங்கு வருடந்தோறும் வைகாசிப் பூரனைத் திங்கள் அன்று திருக்குளிர்த்தில் இடம் பெறுவதும் அதற்கு முன் வெள்ளிக்கிழமை இரவு கதவு திறப்புச் சடங்கு நடைபெறுவதும் தற்போதைய வழக்காகும். தற்போது இது 'வைகாசிச் சடங்கு' என்று பேசப்படுகிறது.

இவ்வாலயம் மீன்பாடும் தேனாடாம் மட்டுமா நகரிற்கு தெற்கே 12 மைல் தொலைவில் அமைந்துள்ளது. இது ஆறு கிராமங்களான கிரான் குளம், குருக்கள் மடம், செப்டிபாளையம், மாங்காடு, தேற்றாத்தீவு, குடியிருப்பு மற்றும் களுதாவளை போன்றவை ஒன்றுகூடி இந்த இங்கு சடங்குவிழாவினை ஒழுங்கு செய்வது குறிப்பிடத்தக்கது. புராதன வரலாறு, தொன்மைச் சான்றுகள், ஏடுகள், கல்வெட்டுகள் என்பனவற்றில் இல்லையெனினும் வரலாற்றுக் குறிப்புகள் அதிசயங்கள் செவி வழி வாயிலாக கிடைக்கும் தகவலைக் கொண்டு இவ்வாலயம் பற்றி அறியக் கிடக்கன்றது. 

இங்கு காணப்படும் பூசை முறைகளும் பாரம்பரிய நடைமுறைகளும் 


கண்ணகை அம்மன் சடங்கின்போது ஆடப்படும் வசந்தன்

'மலர் வேள்வி கண்டு நீ மன மகிழ வேண்டும் 
உறைபதியாம் செட்டிநகர் குடி கொண்ட தாயே
உன் கிருபை அல்லாது ஒளி வேறு உண்டோ'

என்று கண்ணகை அம்மனை பூசை செய்யும் முறை இந்த காவியத்தில் காணலாம். வைகாசிச் சடங்கு என்றால் ஆறு ஊர்கள் என்ன மட்டக்களப்பே பக்தி பூண்டிருக்கும். இங்கு பூசை செய்யும் பூசகர் 'கட்டாடியார்' என அழைக்கப்படுவார். இவர் கையில் சிலம்பும்இ இடுப்பில் வேம்பு இலையும் அணிந்து பட்டாடை உடுத்து அன்னையின் உருவமாகவே மாறியிருப்பார்.

'திறமான கஸ்தூரி, சந்தனம் பன்னீர் 
சிந்தை மகிழ் வாடையது வீசி வர வேணும்'

என்பதற்கு அமைவாக பூசையில் பல நிற மலர்கள், பல வகைப் பழங்கள், கமுகம் பாளை, வெற்றிலை, பாக்கு, மஞ்சள், இளநீர், தேன், வேப்பம் இலை இன்னும் பல வாசனைத் திரவியங்கள், அலங்காரப் பொருட்கள் கொண்டு விதிமுறை தவறாமல் கண்ணகி தெய்வத்திற்கு மடை பரவி, காவியம் ராகம் ஒலிக்கி, உடுக்கை தாளம் முழங்கி, பிறை மேளம் வானைப் பிளக்க, கிரவை ஒலிஇ அரோகரா ஒலி என்பன நிறைந்து ஒலிக்க அம்மனுக்கு சடங்கு பூசை கணிதே நடைபெறுவது வழக்காகும். 

இச்சடங்கு கண்ணகி வழக்குரை கதவு திறந்த நாளில் இருந்து பாராயணம் செய்யப்படுவதனைப் போலவே இக்காலத்தில் வசந்தன் கும்மி, கரகம், நாடகக்கூத்து, காவியம் பாடுதல், காவடி எடுத்தல், பஜனை பாராயணம் என்பன அரங்கேற்றப்படுவது மரபாகும்.

வைகாசிச் சடங்கு வெள்ளிக்கிழமை கதவு திறந்து குளிர்த்தில் நிறையுறும் அன்றைய பகற் பொழுது செவ்வாய்க்கிழமை வரைக்கும் கிராமத்தில் மச்சம் மாமிசம் எடுத்தல் கிடையாது. வீடு வழவு, தெரு வீதி சகல இடங்களும் கூட்டி துப்பரவு செய்யப்பட்டு காணப்படும். இக்காலத்தில் மஞ்சள் இடிப்பதோ, மாவிடிப்பதோ, முந்திரியம் பருப்பு சுட்டுத் தட்டுவது, பலகார வகை சுடுவது என்பன தவிர்க்கப்பட்டு அம்மனுக்கு சடங்கு நடப்பது மரபாகும்.

சடங்குகளில் மரபுமாறாது வாசிக்கப்படும் பறை

இக்காலங்களில் ஆறு ஊரும் பேரின்பத்தில் களித்திருப்பர். ஒரே சனங்களின் ஆரவாரம் தெருவெங்கும் கேட்ட வண்ணம் இருக்கும். இது மட்டுமன்றி இக்காலங்களில் இந்த ஊர்களில் உள்ள பிள்ளையார் கோயில்களில் அன்பர்கள் பக்தியுடன் பழி கிடந்து அடுத்த நாள் காலை நீராடி உடுத்த புடவையுடன்காவடிஇ அழகு குத்துதல், தீர்ப்பு எடுத்தல் என்கின்ற பயமும் பக்தியும் நிறைந்த நேர்த்திகளை அரோகரா கோசம், காவடிச் சிந்து என்பன இசைக்க செட்டீயூர் செல்வியின் ஆலயம் நோக்கி ஊர் ஊராக சென்று கொண்டிருப்பர். இது மெய்சிலிர்க்க வைக்கும் காட்சியாக இருக்கும்.

மடிப்பிச்சை எடுத்தல்
இன்னும் சொல்லப் போனால் தமிழர்கள் தங்களை விரும்பி உட்படுத்தும் கலாசாரஇ நாகரீக முறைகளையும் காணலாம். குறிப்பாக பெண்களில் சிறுமியர்இ மங்கையர்இ மாதர்கள்இ வயோதிபர்கள் என்று எல்லோரும் தங்களை அம்மன் சிலை போல அழகாக புதுச்சேலை அணிந்து தலையிலே தீவப்பம் பூச்சூடிஇ கையிலே வேப்பம் இலை எடுத்து அழகழகான வர்ணங்களில் விதவிதமான சேலைகள் அணிந்துஇ உடுத்த சீலையிலே படி செய்துஇ அதிலே தங்கள் வீட்டில் இருந்து கொஞ்சம் நெல் மற்றும் பக்திரம் போட்டெடுத்து வீடுவீடாக சென்று 'கண்ணகி அம்மன் பேராலே மடிப்பிச்சை போடுங்கோ' என ஒவ்வோர் வீட்டிலும் சென்று மடிப்பிச்சை எடுத்து வெறும் காலுடன் அம்மன் ஆலயத்தை நடந்து சென்று மடிப்பிச்சை நெல்லை அம்மனுக்கு கொடுத்து வணங்கி வருகின்ற மரபு இப்போதும் இங்கு சிறப்பாகப் பேணப்பட்டு வருகின்றது. 

நேர்த்திக் கடன்

'செட்டி நகர் கண்ணகையே செவ்வியரே அபயம்
தேசம் புகழ் பத்தினியே உத்தமியே அபயம் 
வெட்டி வைத்த கோவலரை மீட்டவளே அபயம்
வேண்டும் வரம் தந்திடுவாய் கண்ணகியே அபயம்'

இவ்வாறு அபயம் நாடி அம்மனுக்கு இந்த ஊரெல்லாம் நேர்த்தி வைப்பது வழமைஇ குறிப்பாக தங்கள் துன்பங்கள், பிணிகள் போக நேர்த்தி வைப்பதும் பின் அவை தீர்ந்தவுடன் 'நேர்த்திக் கடன்' கொண்டு போதல், 'அடையாளம்' கொண்டு போதல் என இதனை அழைப்பர். இவ்வடையாளங்கள் வெண்கலம், தங்கம், இரும்பு போன்ற உலோகங்களால் செய்த பாதம், கண்மணி, கால், மனித அவயம், தொட்டிலும் பிள்ளையும் என பல நேர்த்திகளை அடையாளமாக பக்தியுடன் வேண்டி அம்மனுக்கு காணிக்கை கொடுக்கும் வழக்கம் இவ்வழிபாட்டுடன் மிக நெருங்கிய தொடர்பினைக் கொண்டுள்ளது.

கண்ணகி ஆலயங்களின் தாரக மந்திரமாக இசைக்கும் காவியம்


 'மேவரிய பூசைதனை மேதினியோர் தான் கொடுக்க 
மானிடர்கள் நோய் தீர்த்த வஞ்சியே அஞ்சுகமே'

என்று செட்டீயூர் கண்ணகை அம்மன் அகவல் இதனைத் தொட்டுக்காட்டுகின்றது.

வெண்கல உடுக்கை
இவ்வாறு பல விழுமிய பாங்குகள் கலவையாகக் கொண்ட தமிழரின் தாய் தெய்வமாக விளங்கும் செட்டி நகர் கண்ணகி தாய்வின் அற்புதங்கள் நிறையவே இருப்பினும் அவற்றை இன்றும் பறைசாற்றுவது அங்கு அம்மையவள் சின்னம் விளங்கும் அதிசய வெண்கல உடுக்கையாகும். இவ்வுடுக்கை தேத்தாத்தீவு மக்களினால் வெகு விமர்சையாக எடுக்கப்படும் 'கல்யாணக் கால் நாட்டும்' பகல் பூசைச் சடங்கினிலே மூலஸ்தானத்தில் மட்டும் மூன்று முறை அடிக்கப்படும் அதற்கு அபூர்வ சக்தி உண்டு. அன்று இரவு பூரண குடும்பச் சடங்கில் குடும்பத்தினை வளைத்து அடிக்கப்படும். ஆடிக்கும் போது 'வீர்' என்று உறுமுவது எல்லோருக்கும் அதிசய வைக்கும், மெய் கூச்செறியும் இதன் போது தீராத நோய் பிணி உடையவர்கள் தங்கள் தலையில் அடிபடும் படி முண்டியடித்து நிற்பர். இவ்வாறு இங்கு காணப்படும் இந்த உடுக்கை மகிமை வாய்ந்ததாகக் காணப்படுகிறது. 

இவ்வாறு இனத்துக்கும், குலத்துக்கும், நாகரீகத்துக்கும் வேலியாக இருக்கும் இந்த சடங்கு முறை இன்று தமிழ் இனம் அழிந்தாலும் அழியாமல் இருப்பது கிழக்கின் கலாசார முறை இவ்வாலயம் மூலமே உயிர்ப் பெற்றுக் கொண்டிருப்பது சிறப்புக்கும், விருப்புக்கும் உரியதே. இந்த ஸ்ரீலஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயச்சடங்கு வைகாசி பௌர்ணமி தினத்தை அண்டியதாக வரும் திங்களில் திருக்குளிர்ழிலுடன் இனிதே நிறைவுருவது சிறப்பிற்குறியதாகும்.

'கூடி நகர் வைகாசி திங்களுயர் நாளில்
கோபமது தீர மடை வேள்வியது செய்து 
பாடியே மன மகிழ நீராடி நின்று
பாருலக மீடேற மனது களி கூர்ந்து 
தேடிரிய நவகோடி கன்னியர்கள் சூழ 
செட்டி நகர் தன்னை இடமாகச் சுற்றி
நாடியே குயிலாய மேவி வருதாயே
நற்பதியில் ஒளி வீசும் செட்டி நகர்த்தாயே'
      சுபம்    
ஆக்கம் : சிவகுரு – தணிகசீலன்.

0 comments:

Post a Comment