ADS 468x60

17 July 2017

இப்படியும் வாழும் ஒரு சமுகம் இன்னும் மட்டக்களப்பில் இருப்பதைக் கண்டு வியந்துபோனோம்.

இருட்டிக்கிடந்த மழை கால்களின் இடைவெளிகளுக்குள், காற்றின் கனத்த சத்தத்திற்க்கு மத்தியில் வேற்றுவாசிகளைப் போல் வியந்து பார்த்த அந்த மக்கள் கூட்டத்துக்குள் நானும் எனது நண்பனும் சிரித்துக்கொண்டு நுழைகிறோம்.

அவர்கள் இன்முகத்துடன் அந்த வந்தோரை வாழவைக்கும் குணம் மாறாமல் வரவேற்றனர். அந்த இடம்தான் 'கற்ப்பக்கேணி'. இந்த கிராமம் பல தடவைகள் யுத்தத்தினால் இடப்பெயர்ச்சிக்குள் சிக்கிய ஒரு தனி காட்டுப்பகுதியில் அமைந்துள்ள நலிவுற்ற பிரதேசமாகும். இது மட்டக்களப்பு நகருக்கு மேற்க்கே வவுணதீவுப் பிரதேச எல்லைக்குள் சுமார் 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

இது கல்வி, பொருளாதாரம், குடி நீர், போக்குவரத்து என்பனவற்றில் மிக மிகப் பின்தங்கிய கிராமமாகும். இவ்வாறு பல பின்தங்கிய கிராமங்கள் எங்கள் மட்டு மாநிலத்தில் மறைந்து கிடக்கிறது. இவற்றில் எல்லாம் சிலர் மட்டும் அக்கறை கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள், பலர் இவைகளை மறப்பதில் பெருமையடைகிறார்கள்.

நீதி, உயர்ந்த மதி, கல்வி - அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்.
என்று பாப்பா பாட்டுடன் அங்கு கூட்டியிருந்த குழந்தைகளுடன் அழவலாவினோம். 'ஒரு நேர உணவுகூட இந்த மழைகாலத்தில் கிடைப்பது கடும் பொறுப்பு தம்பி, தொழில் ஒண்டுக்குமே போய்க ஏலா, பள்ளிகளுக்கு இந்த புள்ளங்க போறத்துக்கு அதுகளும் ஒழுங்கா இல்ல' என்று தொடங்கிய சரஸ்வதி தனது ஊரின் நிலைமை பற்றி கூறினார்.

கற்ப்பக்கேணி மொட்டுகள் பாலர் பாடசாலையில் சுமார் 32 குழந்தைகள் கல்வி பயில்கின்றனர். இதன் ஆசிரியை றஞ்சணி அர்ப்பணிப்புள்ள ஒரு ஆசிரியர், இந்த ஊரிலேயே உயர்தரம் படித்த ஒரு பெண். இவர் கூறுகையில் ' அண்ணா எனக்கு அந்த பாடசாலைக்கு போனால் படிப்பிக்கிற விருப்பமே வருதில்லை, சொல்லிக்குடுக்க புத்தகம் இல்லை, எழுதச் சோக்கு இல்லை, இந்த பாடசாலைக்கு என்று ஒரு பெயர்ப்பலகை இல்லை, கரிகளால் கீறிய அசிங்கமான சுவாகள்;, காட்டி சொல்லிக்கொடுக்க படங்கள் கூட இல்லை அண்ணா. சரி இருந்தாலும் சும்மா ஏதோ படிப்பிக்கிறன், இவங்கட தாய்மாரிடம் மாதம் 100 கேட்டு சிறியளவில் நானும் எடுத்து இந்த சாமான்களயும் வேண்டுறன், ஆனா எல்லாரும் காசு தாற அளவுக்கு இல்ல அண்ணா' என்று உன்மை நிலையை குமிறித்தள்ளினாள் இந்த பிள்ளை. இந்த குழந்தைகள் இந்த ஏழை வயிற்றில் பிறந்ததற்கு படிக்காத பெரிய தண்டனையை அனுபவிப்பதா?????

'அன்ன யாவிலும் புண்ணியங்கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்' என்ற பாரதியின் பொய்யாமொழி மாறுவதில்லை உடனே இந்நிலையைக் கண்டு தலைகுனிந்து போனோம். உக்கிய வயிற்றுடன் விளையாடித் திரியும் குழந்தைகளின் நிலையைப் பார்க்கும் போது அவர்களின் போசாக்கு நிலமை புரிந்து கொண்டது. இவர்கள் வசிக்கும் இடத்தில் இருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் உள்ள இருட்டுச்சோலைமடு விஸ்னு வித்தியாலயத்தில் தான் தினம் கல்வி கற்க்க சென்று வருகின்றனர், இந்தக் காரணங்களால் தான் பலர் பாடசாலைக்கு செல்வதனையே இடைநடுவில் விட்டு விடுகின்றனர்.

 முன்னால் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான திரு இராஜதுரை அவர்களது நிதியுதவியுடன், அவர்களது மனைவி அமரர் திருமதி இராஜலட்சுமியின் சிரார்த்த தினத்தைமுன்னிட்டு ஏதாவது உதவி செய்யுங்கள் தம்பி என்று வேண்டிக்கொண்டார். இதனைச் சாதகமாகப் பயன்படுத்தி இவரின் நிதியுதவியுடன் இங்குள்ள சுமார் 150 மாணவர்களுக்கு உணவளித்து அந்த புண்ணியமான செயலை செய்ய முடிந்ததை இட்டு மகிழ்ச்சியடைகிறோம்.

இத்தனை உயிர்களின் பசி தீர்க்க உதவிய இந்த பெருந்தகை, இந்த மக்களின் எதிர்காலம் பற்றி மிக அக்கறையோடும், வாஞ்சையோடும் இருப்பதை எண்ணி பெருமிதம் கொள்கிறோம். இவர் மாத்திரமல்ல இவரது பிள்ளைகளும் இந்த மட்டு மாநிலத்தின் ஒளி மயமான எதிர்காலத்துக்காய் பல வகையிலும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாரிய பங்களிப்பினை செய்து வருகின்றமை நமக்கு கிடைத்த பெரும் பேறே.

புயல் அபாயம், கடும் மழை, உடைந்து ஓடிக்கொண்டிருக்கும் பாதைகள் என்பனவற்றின் மத்தியில் நாங்கள் எங்களது வேலையைத் தொடங்கினோம். நல்ல சாப்பாடு கொடுக்க எண்ணி மழை என்றும் பாராமல் எங்களை காத்து நின்ற பிள்ளைகளின் பசிபோக்க சமைத்துக் கொடுத்தோம், மிகவும் ஆசையோடு உண்டு மகிழ்ந்தனர். இவர்களின் ஆசிர்வாதம் அன்னாருக்கு இருந்துகொண்டே இருக்கும் என்பதில் ஐயமில்லை. 

அதே சமயம், தூர்ந்து போய்க் கிடந்த 'மொட்டுகள் பாலர்' பாடசாலைக்கான அத்தனை தேவையையும் நிறைவேற்றி அந்த பாடசாலைக்கு தீந்து பூசி புதுப்பொலிவாக மாற்றினோம், அத்துடன் அவர்களுக்கான சில வசதிகளை சதுர உதவியாகவும், பொருட்களாகவும் கொடுத்து உதவினோம், இதற்க்காக நந்தினி என்பவர் தந்த பாடசாலை உபகரணங்கள் பெரும் உதவியாக இருந்தது. 'இவை எல்லாம் நடக்கும் என்று நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை அண்ணா, மிக்க நன்றி' என்று நன்றி கலந்து சிரித்தார் ஆசிரியை றஞ்சிதா.

இதற்க்கிடையில் எங்களுக்கு கைகொடுக்க வருகைதந்த திரு சிவலிங்கம் மற்றும் நிர்மலன் ஆகியோர் இந்த பாடசாலை அயலவர்களை விசாரித்து அதற்க்கான ஏனைய தேவைகளை பூர்த்தி செய்ய முன்வந்துள்ளமை பாராட்டுதற்குரியது.
மாணவர்களுக்கு அறிவுபூர்வமான கதைகளையும், எதிர்கால சவால்களையும் உணவுடன் கலந்து ஊட்டினோம் என்னுடன் நண்பன் சுரேஸ் மற்றும் திருமதி சுரேஸ் ஆகிய இரு விரிவுரையாளர்களும் இந்தப் பெரும் பணியை நிறைவேற்ற அரும்பாடு பட்டனர் அவர்களுக்கும் நன்றிகள்.


இந்த நிகழவுகள் அனைத்துக்கும் பெரியளவிலான நிதியை தந்துதவி, அமரர் இராஜலட்சுமியின் சிரார்த்த தினத்தை நினைவுகூர்ந்தமை, ஏனைய அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக இருப்பதுடன், அந்த ஆத்மா சாந்தியடையவும் இந்த இடத்தில் வேண்டிக் கொள்கிறோம். அத்துடன் முன்னால் பாராளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமாக இருந்த இராசதுரை ஐயா அவர்களுக்கும் நீண்ட ஆயுள் கிடைக்கவேண்டி பிரார்த்திக்கிறோம்.

இதுபோன்ற கைங்கரியங்களைச் செய்தால் இன்னும் தொலைவில் இல்லை எமது மக்களின் ஒளிமயமான எதிர்காலம், அவர்களின் அறிவுக் கண்களைத் திறந்து வைப்போம் வாருங்கள் கைகோர்த்து கை கொடுப்போம்.

மழையிலும் பிள்ளைகளின் சாப்பாட்டுக்கான தயார்படுத்தலில்..


சந்தோசமாக வாஞ்சயுடன் உணவருந்தும் வேளையில் சிறுவர்களுடன் நாங்கள்..



தூர்ந்து கிடக்கும் பாலர் பாடசாலை



தூர்ந்து கிடக்கும் பாடசாலையை புதுப்பொலிவாக்கும் நாங்கள்..



அவர்களுக்கான உபகரணங்கள் வழங்கி வைக்கும்போது.

0 comments:

Post a Comment