ADS 468x60

08 December 2012

இலங்கைப் பட்டதாரிகள் படும் பாடு

சென்ற வருடம் கலாசார உத்தியோகத்தர் தெரிவுக்காக, கொழும்பின் சந்து பொந்துகள் எல்லாம் வந்து நிரம்பிய பட்டதாரிகள் பட்ட பாடுகள் பார்த்தேன், குழந்தையுடன் பல பெண்கள், குடுப்பத்துடன் சில பேர்கள், வலம் இடம் தெரியாமல் வந்திறங்கியோர் ஒரு தொகை, பஸ்சில் பயணம் செய்து இறங்குமிடம் துலைத்தோர் எத்தனைபேர், கண்விழித்து வந்து புண்பட்டோர் ஒரு புறம், பயணப்பை துலைத்து பரதவித்தோர், மொழி தெரியா முழிச்சவர்கள் என்று வேலை தேடி வேர்த்துப் போனவர்களை எம் திருநாட்டில் பார்த்தேன்.

உலகத்தில் பொருளாதாரத்தில் வளர்ந்த  நாடுகள் எல்லாம் வாழ்வாதாரத்தில் தன்நிறைவு கண்டமைதான் வரலாறு. வாழ்வாதாரம் வளர வளங்கள் தேவை, வளம் இருந்தும் வளர முடியாத பல நாடுகள் இன்றும் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து முடியாமல் போகின்றது. இலங்கை இதற்கு ஒன்றும் சளைத்தது அல்ல. பொருளியல் கூறும் குறை; வறுமை, குடிநீர்ப் பற்றாக்குறை, வேலையின்மை, குறை வருமானம், உணவுத் தட்டுப்பாடு, அரசியல் ஸ்த்திரமின்மை, கடன் சுமை போன்ற இன்னோரன்ன.

ஒருவர் கூறினார்
'கிட்டத்தட்ட இலங்கை பூராகவும் 38,000 பட்டதாரிகள் இருக்கிறார்கள் ஆனால் வெறும் 4,000 பட்டதாரிகளுக்குத் தான் ஆசிரியர் வேலையாம்' என்று ஏட்டுக் கல்வியை படித்து கோட்டை விட்ட ஒரு இளம் உள்ளம் குமறியது. 
ILO அறிக்கைப் பிரகாரம் தெற்காசியாவின் வேலையற்றோர் பட்டியலில் முதலிடம் வகிக்கும் இலங்கை 2007 ம் ஆண்டினை 2010 உடன் ஒப்பிடும் போது குறைந்திருந்தாலும் அதிகமாகவே காணப்படுகிறது அதிலும் வடகிழக்கு இம்மதிப்பீட்டில் உள்ளடக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் மாத்திரமல்ல ஆசியாவிலேயே அதிகமான இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு ஒரு குதிரைக் கொம்பாகவே இருந்து வருகிறது என தெற்காசிய நாடுகளுக்கான உலக வங்கியின் பிரதம பொருளியலாளர் கல்ப்பனா கோச்சார் அவர்கள் என்.டி ரீவிக்கு வளங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார். மாதாந்தம் தெற்காசிய நாடுகளில் புதிய வேலையற்ற இளைஞர் யுவதிகளின் எண்ணிக்கை1.5 மில்லியன் வரை அதிகரித்து வருவது பெரிய சவாலாக மாறிவிட்டது எனவும் அவர் தெரிவிப்பது இந்தக் கானொபளியில் பார்க்கலாம்..

பட்டுக்கோட்டை கூறியதுபோல் 'கைத் தொழில் ஒன்றைக் கற்றுக் கொள், கவலை உனக்கிலை ஒத்துக்கொள்' எல்லோரும் தாங்களாகவே பிழைப்பை தேடிக் கொள்ளும் கைத் தொழில் கல்விதான் எமக்கு இப்போது தோவை.

என்னதான் எத்தனை படித்தாலும் ஒரு சமுகம் சேற்றில் கால் வைப்பதனால்தான் நம்ம சோத்தில கைய வைக்கிறம், அழுக்கை இல்லாமல் செய்வதனால்தான் நம்ம செழிப்பா இருக்கம், முடியை கத்தரிப்பதனால்தான் முகமலர்ந்திருக்கிறோம் அவர்களெல்லாம் தங்களது புளப்புக்காய் கய் நீட்டியதில்லை, பொய் பேசியதில்லை ஏன்! ஏன்! அவர்கள் சொந்தத் தொழில் செய்பவர்கள். நாங்கள் றோட்டில் நிற்ப்பவர்கள் ஆர்ப்பாட்டம் செய்வதற்காக, வேலை கேட்ப்பதற்க்காக, காலை பிடிப்பதற்க்காக என்று படித்தும் பாவப்பட்ட சீவனுகள். ஏன் இப்படி அரசை நம்பி நம்பியே வெம்பி போகிறார்கள்???
உதவாத கல்விக் கொள்கை, அரசியல் சீர்கேடு என்பன வேலை இன்மையை இன்னும் இன்னும் அதிகரிக்கிறது. பாதை அபிவிருத்தி, பாலம் அபிவிருத்தி, துறைமுகம் என்று எல்லா துறை விருத்தியும் வெளிநாட்டாரை இறக்கி வேலை வேண்டுகின்றனர் என்றால் இங்கே உள்ள எஞ்சினியர்கள் என்ன கோட்டாவில் எடுபட்டவர்களா?? இல்லை கொத்தனார் வேலை பார்ப்பவர்களா??? என்ன வளம் இல்லை இந் திருநாட்டில்!! ஏன் கையை ஏந்த வேணும் வெளிநாட்டில்??... 

இங்கு இந்த துறையில் நிபுணத்துவம் இல்லாதவர்களா மாணவர்களை உருவாக்குகிறார்கள்? 90%கும் மேல் கல்வியறிவுடைய நாட்டில் ஏன் கல்வியிலாளர்கள் பஞ்சமா? இல்லை மக்களுக்கு வழிகாட்ட வேண்டிய மக்கள் பிரதிநிதிகள் தங்களை கவனிக்க முழுநேரத்தையும் செலவிடுகின்றமையால் மக்களது பிரச்சினை புரியவில்லையோ? எதுவுமே புரியவில்லை.

இதனால் உன்மையில் நல்ல அறிவாளிகள், புத்திஜீவிகள் மற்றும் திறமை சாலிகள் வெளி நாடுகளை நாடுகிறார்கள். நன்கு வளர்ந்த ஐரொப்பிய நாடுகளில் வேலை புரியும் அளவுக்கு திறமையுள்ள எம்மவர்களுக்கு எமது திருநாட்டில் வேலையில்லை. ஒரு எஞ்சினியர் முதலாம் வருட மாணவனை, நான் வந்தோரை எல்லாம் தங்கவைக்கும் இராமகிருஸ்ண மிசனில் கண்டேன.; 

ஏதோ படித்துக் கொண்டிருக்கும்போது, 'என்ன செய்யிறீங் தம்பி' என்றேன் அதற்கு அவர் 'தான் ஒரு எஞ்சினியர் மாணவன் என்றும் சீமா பகுதிநேர வகுப்பாக தொடர்கிறேன்'; என்றும் கூறினார். 'ஏன் இதெல்லாம் இடையில்' என்றேன், அவர் அதற்து 'இந்தப்படிப்பெல்லாம் படித்து வேலைக்காகாது அதனால் தான் இதனையும் செய்கிறேன்' என்று பதிலளித்தான். என்னய்யா கொடுமை எல்லா மாணவர்களாலும் இவ்வாறு இலட்சக்கணக்கில் செலவு செய்து படிக்க முடியுமா??? என்றால் முடியாத காரியம் தான்.

குதுரைக் கொம்பாக மாறிவரும் வேலைவாய்ப்புப் பிரச்சினை எத்தனையோ பேரின் வாழ்நாளை இழுத்து அடித்து வயதுபோகும் அளவுக்கு காத்திருக்க வைக்கிறது. லஞ்சம், அரசியல் செல்வாக்கு, கோட்டா தெரிவு இவையெல்லாம் அப்பாவிகளில் கனவுகளில் மண்ணைத் தூவி நேர்மையானவர்கள் வீட்டுக்குள் முடங்கி அடங்கிப் போக வைத்து விடுகிறது. இதனால் தற்கொலை முயற்சி, விறக்தி, பட்டினி,குடும்ப குழறுபடி என்று பட்டியல் பட்டி தொட்டியெல்லாம், இந்த வளமிகு இலங்கை திருநாட்டில் நீண்டு செல்வது வருத்தம் வருத்தமே!. 

இன்று படித்தும் விவசாயம் செய்கின்றவர்கள் எத்தனை ஆயிரம்! ஏனென்றால் அரச தொழில்தான் புருச லட்சணம் என்கின்ற நிலை மலை ஏறிவிட்டது. இருந்தும் பெண்ணுக்கு மாப்பிளை பார்ப்பவர்கள் மாப்பிள்ளை எப்படிப்பட்டவன் என்று விசாரிப்பதனை விட அவர் அரச தொழில் பார்க்கிறாரா என்று கேட்பவர்கள் எத்தனை பேர்! அப்படி அதில் என்ன இருக்கிறது? என்று தெரியவில்லை. 

வேலைவாய்ப்பு தேடி அலையும் இளைஞர் யுவதிகளுக்கு என்ன கெதி நடக்கிறது எனக்காண இங்கே சொடுக்குங்கள்.

ஒரு அரச தொழில் புரியும் நண்பர் சொன்னார், 'மாசக்கடைசியில் கன்ரீனில் கடன்பட்ட காசும், போக்குவரத்துச் செலவையும் பார்க்கத்தான் அரசாங்கம் வழங்கும் பிச்சைச் சம்பளம் போதுமானதாக இருக்கிறது' என்று அலுத்துக் கொண்டார். இதெல்லாம் நம்ம நாட்டு மக்களின் பழக்கதோசம் அதை மாற்ற முடியாது. அரசாங்க வேலை செய்து ஆசைப்பட்டதெல்லாம் வாங்கி மகிழ முடியாது. பென்சனுக்காக சாகும்வரை சீவியம் கழிக்க எல்லோராலும் முடிவதில்லை நானும் இதற்கு விதிவிலக்கல்ல.
வேலை தேடி வேலை தேடி
வெறுத்துப் போச்சுடா
கண்கள் ரெண்டும் கனவுகள் கண்டு
பூத்துப் போச்சுடா
தம்பி பூத்துப் போச்சுடா...

ஓடி ஓடி படிச்சிப் படிச்சி
மூளையெல்லாம் தேஞ்சிபோச்சி
படிச்சிருந்தா மத்தவன் பாத்து
பகிடி பண்ணுறான் -நம்ம
வேல தேட அனுபவம் கேட்டு
மகிடி ஊதிறான்- தம்பி
பணத்தை கேட்கிறான்?

அரச தொழிலை நம்பி நம்பி
அரை வயது போனதிப்போ
புருசலட்சணம் இதுவா என்றும்
கேட்கிறானுங்கோ –நீ
றோட்டில் இருந்து வேலைகேட்பது
தொழிலுக்காகாது –தம்பி
தொழிலுக்காகாது...

வேலை தேடி வேலை தேடி
வெறுத்துப் போச்சுடா...

நானும் ஒரு பொழுது வேலையற்று இருந்தேன் அப்போது வந்த கவி ஒன்று..
இதனால்தான் கைத்தொழில் ஏதாவது தெரிந்திருந்தால் நாம் முதலாளிகளாகலாம், முயன்று உழைக்கலாம், தொழில் கொடுக்கலாம் நம்ப வாழலாம். வேலையின்மை பிரச்சினை என்ற சொல் வேருடன் அறுந்து மகிழ்சியுடன் வாழும் காலம் நெருங்கி வரும் என்பதில் ஐயமில்லை.

0 comments:

Post a Comment