ADS 468x60

07 September 2021

வெளிநாடு சென்றாவது கல்வியைத் தேடு!

கொரோணா எனும் கொடிய நோய் எல்லாவற்றையும் விட கல்வித்துறையில் பல தலைகீழ் மாற்றங்களை உண்டுபண்ணி இருக்கின்றது. கொரோனா காரணமாக கடந்த ஓன்றரை ஆண்டுகளாக பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள்; மூடப்பட்டுக்கிடக்கின்றன. வகுப்புறைப் பாடங்கள் இணைய வழியே நடத்தப்படுகின்றன. பாடசாலைகள், பல்கலைக்கழக படிப்பு என்பது பாடங்களை மட்டும் தெரிந்துகொள்வதற்கானது அல்ல, மற்றவர்களுடன் பழகுதல், நிகழ்வுகளில் ஒன்றிணைதல், சமூகத்தைப் புரிந்துகொள்ளல் போன்ற அனுபவங்களையும் உள்ளடக்கியது.

 அந்தவகையில் கடந்த ஒன்றரை ஆண்டுகாலத்தில் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் வழியிலான அனுபவத்தை மாணவர்கள் இழந்துள்ளனர். அப்படியென்றால், லட்சக்கணக்கில் பணம் செலவழித்து வெளிநாடு சென்று படிக்கும் மாணவர்களின் நிலைமைதான் என்ன? அவர்களுக்கும் இணைய வழியில்தான் வகுப்புகள் என்றால், வெளிநாடு சென்று படிப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது?' என்ற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கலாம். இந்தத் தர்க்கத்தின் அடிப்படையில், இனி வரும் காலங்களில் இலங்கையிலிருந்து வெளிநாடு சென்று படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறையும் என பலரும் கூறினர். ஆனால், சமீபத்திய செய்திகள் நமக்கு வேறொரு உண்மையைச் சொல்கிறது.

அண்டைநாடான இந்தியாவைப் பார்போமானால், முந்தைய ஆண்டுகளைவிட இவ்வாண்டுதான் படிப்புக்காக வெளிநாடு செல்ல மாணவர்கள் அதிக எண்னிக்கையில் ஆர்வம் காட்டிவருவதாக Leverage edu என்ற நிறுவனம் எடுத்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டைவிட இவ்வாண்டு 94 சதவீதம் இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் சென்று படிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக அந்த ஆய்வு குறிப்பிடு கிறது.

அதேபோல இலங்கையிலும் கரோனா பரவல் இன்னும் முழுமையாக ஓய்ந்திராத நிலையில், எப்போது வேண்டுமானாலும் இன்னும் ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், உலகத் தரத்திலான கல்வியை தற்போது இணையம் வழியே இருந்த இடத்திலிருந்தே கற்றுக்கொள்ளலாம் என்ற நிலையில் ஏன் முந்தைய ஆண்டுகளைவிடவும் இவ்வாண்டு அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் வெளிநாடு சென்று படிக்க ஆர்வம் காட்டுகின்றனர் என்ற சந்தேகம் வரலாம்?

இதில் நாம் பார்க்கும் முதல் காரணம். கொரானா இந்த அலையில் இலங்கையில்; உயிரிழப்பு அதிகம் இருக்கிறது. மருத்துவமனைகளில் படுக்கை கிடைக்காமல், ஆக்ஸிஜன் சிலிண்டர் கிடைக்காமல் பலர் உயிரிழந்துள்ளனர் என செய்திகளைப் படிக்கின்றோம். நாட்டின் சூழல் போர்க் காலம் போல் மாறியுள்ளது. இங்குள்ள்  மோசமான சுகாதாரக் நிலைமையைக் கருத்தில்கொண்டு பல வசதி படைத்தோர் தங்கள் பிள்ளைகளை வெளிநாடு அனுப்பி படிக்க வைக்க விரும்புவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

அடுத்து, இரண்டாவது காரணம். தற்போது பிரிட்டன், கனடா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகள் வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்க கல்வி விசா தொடர்பான நடைமுறையை எளிதாக்கி வருகின்றன. இதனால், வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பு எளிதாகியுள்ளது.

மூன்றாவது காரணம். எமது நாட்டின் வேலையின்மை, குறைந்த ஊதியம், விலையேற்றம், வாழ்வியல் முறை, சுற்றுச்சூழல் மாசுபாடு மிக மோசமான நிலைக்குச் சென்றுகொண்டிருக்கிறது. இவற்றிலிருந்து விடுபட்டுச் செல்வதற்கான முதல்படியாக பலர் வெளிநாட்டில் சென்று படிப்பதை தேர்வு செய்கின்றனர்.

நான்காவது காரணம். உலகத் தரம் வாய்ந்த தரமான கல்வி, உலகாளாவிய மக்களுடன் பழகும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ளுதல் ஆகியவற்றை வெளிநாட்டுப் பல்கலைக்கழங்கள் சாத்தியப்படுத்துகின்றன.

ஐந்தாவது காரணம். எமது நாட்டைவிடவும்; வெளிநாட்டில் ஊதியம் அதிகம். இலங்கையில் ஒருவர் ஒரு வேலைக்கு மாதம் 1 லட்சம் ரூபாய் ஊதியம் பெறுகிறார் என்றால், அதே வேலைக்கு வெளிநாட்டில் மூன்று அல்லது நான்கு மடங்கு அதிகம் ஊதியம் பெற முடியும். வெளிநாடுகளில் சென்று படிப்பதன் வழியாக அந்நாடுகளில் எளிதில் வேலைவாய்ப்பு பெற முடியும் என்ற காரணத்தினால் அதிக எண்ணிக்கையில் எமது மாணவர்கள் வெளிநாடு சென்று படிக்க விரும்புகின்றனர்.

முந்தைய ஆண்டுகளில் ஊதியம், நல்ல வேலை, வாழ்வியல் முறை, தரமான கல்வி இவற்றுக்காக வெளிநாடு செல்வதே மாணவர்களின், அவர்களின் பெற்றோரின் முதன்மைக் காரணங்களாக இருந்தன. இவ்வாண்டு அந்த காரணம், சுகாதாரக் கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டதாக மாறியிருக்கிறது.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க, பெற்றோர்களுக்கான விசாவும் சமீபத்திய ஆண்டுகளில் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. தங்கள் பிள்ளைகளைக் காரணம்காட்டி வெளிநாடு சென்று வாழ பெற்றோர்கள் ஆர்வம்காட்டி வருகின்றனர். மாணவர்கள் மட்டும் அல்ல, வசதி படைத்தோர் பலரும் இப்பேர்து நாட்டில் இருந்து வெளியேறி வெளிநாடு சென்று வாழ்வதற்கு ஆர்வம் காட்டிவருகின்றனர்.

ஆனால் எமது நாட்டில் உள்நாட்டு மாணவர்களுடன் வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்கும் வகையில் உலகத் தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களை உருவாக்கும் முயற்சியில் இலங்கை இன்னும் நடவடிக்கை எடுத்ததாக அறியமுடியவில்லை. அப்படியாக தொடங்க இருந்த ஒருதிட்டத்துக்கு பாரிய எதிர்பு கிழம்பி அது பெரிய பூதாகரமானது தெரிந்ததே. இன்று, தரம் வாய்ந்த கல்வி என்பது கட்டடத்துக்குள் மட்டும் சொல்லிக் கொடுப்பது அன்று. நாட்டின் அரசியல், பொருளாதார, கலாச்சார சூழலும் அதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. தற்போது அரசியல், பொருளாதார ரீதியாக நாடு மிக சிக்கலான காலகட்டத்தில் உள்ளது. முதலில் இந்தச் சூழலை மாற்றி அமைக்காமல் உள்நாட்டு அல்லது வெளிநாட்டு மாணவர்களை பெரிய அளவில் ஈர்க்க முடியாது. அனைத்துக்கும் மேலாக ஒன்று உள்ளது. வெளிநாட்டு மாணவர்களை எமது நாடு நோக்கி இழுப்பதற்கு முன்பாக, எம்நாட்டு மாணவர்கள் இலங்கைக் கல்வி நிறுவனங்களை விருப்பத்துடன் தேர்ந்தெடுக்கும் வகையில் அவற்றின் தரத்தை உயர்த்த வேண்டும் என்பதே எனது தாழ்வான வேண்டுகோள். 


0 comments:

Post a Comment