ஒரு தேசத்தின் தலைவிதி என்பது அதன் நிலப்பரப்பிலோ அல்லது அதன் கனிம வளங்களிலோ எழுதப்படுவதில்லை; மாறாக, அந்தத் தேசத்தின் மக்கள் மற்றும் ஆட்சியாளர்களின் சிந்தனையை ஆளுகின்ற சொற்களிலேயே எழுதப்படுகின்றது. ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தனது சுதந்திர தின உரையில் சுட்டிக்காட்டியது போல, ‘இனவெறி’ மற்றும் ‘தீவிரவாதம்’ ஆகிய இரண்டு சொற்களும் வரலாற்றின் பக்கங்களில் இரத்தக்கறையைப் பூசியுள்ள மிக மோசமான சொற்களாகும்.
இந்த இரண்டு சொற்களும் இருக்கும் இடத்தில், அமைதி இருக்க முடியாது; அங்கே தீவிரவாத மழை பொழியும். அந்த மழையில் நனைபவன் மனிதத்தன்மையை இழந்து, இரத்தம் சிந்தப்படுவதை விரும்பும் ஒரு கொடூரமான மனநிலைக்குத் தள்ளப்படுகிறான். ஆனால், இலங்கை அரசியல் வரலாற்றை ஆழமாக நோக்கும்போது, இந்த இரண்டு சொற்களுடன் இணைக்கப்பட வேண்டிய, அல்லது இவற்றை விடவும் ஆபத்தான மூன்றாவது சொல் ஒன்று இருக்கிறது. அதுவே பழிவாங்கல் (Revenge). அகராதியில் உள்ள மிக அருவருப்பான இந்தச் சொற்கள் அகற்றப்படாத வரை, உண்மையான சுதந்திரம் என்பது ஒரு கானல் நீராகவே இருக்கும்..



