உலகச் சந்தையில் டொடாலர் [Dollar] மதிப்பு தொடர்ச்சியான ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் தற்போதைய சூழலில், அரசியல் களத்தில் எதிர்க்கட்சிகளுக்கு ஒருவித மகிழ்ச்சியான மனநிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளதைக் காண முடிகிறது. அவர்களின் குறுகிய அரசியல் தர்க்கத்தின்படி, டொடாலரின் மதிப்பு 350 தொடக்கம் 370 ரூபாயை எட்டும் போது, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சந்தித்ததைப் போன்றதொரு பாரிய மக்கள் எதிர்ப்பைச் சந்தித்து அரசியல் ரீதியாக
அனாதையாக்கப்படும் என அவர்கள் கணிக்கிறார்கள். இந்த எளிய அரசியல் தர்க்கமானது, தற்போதைய பொருளாதார யதார்த்தத்தின் பன்முகத் தன்மையை அவர்கள் சரிவரப் புரிந்துகொள்ளாததை அல்லது அரசியல் லாபங்களுக்காக வேண்டுமென்றே மூடிமறைக்க முற்படுவதையே தெளிவாக விளக்குகிறது. வரலாறு எப்போதுமே அதே வடிவத்தில் மீண்டும் மீண்டும் நிகழ்வதில்லை என்பது ஒரு அடிப்படையான சமூகவியல் உண்மையாகும். இருப்பினும், அரசியல் அதிகாரப் போராட்டங்களின் போது, எதிர்க்கட்சிக் குழுக்கள் கடந்த காலத்தின் மிக மோசமான கறுப்புப் புள்ளிகளை நிகழ்காலத்தின் மீது வலுக்கட்டாயமாகத் திணிக்க அடிக்கடி முயற்சிக்கின்றன. அதுவே தற்போதைய எதிர்க்கட்சிகளின் அறிக்கைகளின் உள்ளார்ந்த பொருளாகவும் காணப்படுகின்றது.