நீண்ட நாட்களின் பின் ஒரு மட்டக்களப்பு கலை சார் பதிவினை ஏற்றலாம் என நினைத்தேன். இங்கு எப்படி நம்ம மட்டக்களப்பு மீன்கள் பாடுகின்றன எனச் சற்றுக் கேட்டுப்பாருங்களேன்.
கல்லடிப் பாலத்திலிருந்து (லேடி மன்னிங் பாலம்) சப்தமற்ற இரவு நேர முழுமதி தினங்களில் அவதானிக்கும் போது ஓர் இன்னிசை கேட்பதாகக் கூறப்படுகிறது. இது ஊரிகளினுள் நீர் புகுந்தெழுவதால் ஏற்படும் இசையென நம்பப்படுகின்றது. இதனை இலக்கியங்களில் 'நீரரமகளீர் இசைக்கும் இசை' என வர்ணிக்கப்படுகிறது. ஆயினும் மீன்கள்தான் இசையெழுப்பின என்ற கருத்தும் பிரதேசவாசிகளிடம் காணப்படுகிறது. இதன் காரணமாக மட்டக்களப்பு 'மீன் பாடும் தேன் நாடு' எனப் பன்னெடுங் காலமாக அழைக்கப்படுகின்றது.
கத்தோலிக்க குருவான அருட்தந்தை லாங் என்பவர் 'இவ் மீனிசையை' ஒலிப்பதிவு செய்து இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஊடாக 1960களில் ஒலிபரப்பினார் என்று சொல்லப்படுகிறது.
மீனிசை பற்றிப் பல கருத்துக்கள் இருந்தபோதிலும் மட்டக்களப்பானது மீன் பாடும் தேன் நாடு என்றே நோக்கப்படுகிறது. பல மட்டக்களப்புசார் அரச திணைக்களங்கள்இ பாடசாலைகள்இ கழகங்கள்இ நிறுவனங்கள் போன்றவற்றின் இலச்சினைகள் மீன் அல்லது கடற்கன்னி உருவம் கொண்டதாகக் காணப்படுவது மட்டக்களப்பிற்கும் 'மீன் பாட்டிற்கும்' உள்ள தொடர்பைக் காட்டுகிறது.
சி.தணிகசீலன், S.Thanigaseelan
சி.தணிகசீலன், S.Thanigaseelan
0 comments:
Post a Comment