ADS 468x60

02 October 2017

மட்டக்களப்பில் 10,000 பனை முளைகளை விதைத்தல்: கட்டம் இரண்டு.

'வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்' என்பது அன்றைய வாசகம், ஆளுக்கொரு மரம் வளர்க்க வேண்டிய தேவை இன்று ஏற்பட்டுள்ளது. மரங்கள் இயற்கையின் கொடை. இயற்கை அன்னையின் மடியில் மலர்ந்த முதல் குழந்தை தாவரம் தானே! அவற்றை நாம் இல்லாமல் செய்யலாமா? அப்படிச் செய்தால் நன்றி கெட்டவர்கள் ஆகிவிட மாட்டோமா? வேண்டாம், நாம் நமக்காக மட்டும் சிந்திப்பதை நிறுத்திவிட்டு உலக நலனையும், எதிர்காலச் சந்ததிகளின் தேவையையும் சேர்த்து சிந்திக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். இந்த திட்டம் மூலம் பலர் விழிப்படைந்து இது போன்ற பனை மர நடுகைகளை ஏனையவா்களும் பின் தொடர முன்வரவேண்டும்  என்கின்ற நோக்கம் வெற்றியடைந்து வருவது பெருமைக்குரியது.

இதனைத்தான் தொலைநோக்குப் பார்வை என்றும் பொது நல சிந்தனை என்றும் கூறுகின்றனர். எமது சுயநலத்துக்காக மாத்திரமல்ல யுத்தத்தினால் குறிப்பாக வடகிழக்கில் வகைதொகையின்றி நீண்ட அயுள் கொண்ட பனை விருட்சங்கள் அழிக்கப்பட்டுள்ளன. அவற்றை அந்த நிலையில் இருந்து மீட்பதற்கான ஷபுனிதப்பணியின் இரண்டாம் கட்டம் பழுகாமம் மண்ணில் விஸ்வப் பிரம்மஸ்ரீ வை. இ. எஸ். காந்தன் குருக்கள் அவர்களின் ஆசியுடன் இனிதே நிறைவேறியது.

கிழக்கு இலங்கை இந்து சமய சமுக அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் மாவட்ட கமல அபிவிருத்தித் திணைக்களத்தின் வழிப்படுத்துதலில் நிக் அண்ட் நெல்லி ஸ்த்தாபனத்தாரின் அனுசரணையில் நடைமுறைப்படுத்தப்படும் 'பசுமையான தேசத்தை மீளுருவாக்கும்' நடவடிக்கை இரண்டில் குளங்களையும் நீரேந்து பிரதேசங்களையும் பாதுகாக்கும் வகையிலும், எதிர்கால சந்ததியினரின் பொலித்தின் மற்றும் பிளாஸ்த்திக் பாவனையை நிறுத்திப்  பனை ஓலைப் பொருட்களுக்கு இருக்கும் கேள்வியினையும் கருத்தில் கொண்டு இத்திட்டம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

நான்கு மில்லியன் பனைமரங்கள் வடகிழக்கில் மாத்திரம் யுத்தத்தின்போது இழக்கப்பட்டிருக்கின்றன, அவை சாதாரண மக்களின் வாழ்வாதாரத்தில் பாரிய பங்கினை வகித்து வந்துள்ளது. அதனை மீள் நடுகை செய்வது காலத்தின் கட்டாயமாகும்.

இந்நிகழ்வில் ஆசியுரை வழங்க அழைப்பின் பேரில் வருகை தந்த  விஷ்வப் பிரம்மஸ்ரீ வை. இ. எஸ். காந்தன் குருக்கள் ஐயாவுடன், மட்டக்களப்பு மாவட்ட கமநல திணைக்கள உதவி ஆணையாளர் பொறியியலாளர் திரு.ந.சிவலிங்கம், மற்றும் முன்னால் கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தரும், விவசாய பீட சிரேஸ்ட்ட விரிவுரையாளருமான கலாநிதி பிறேம்குமார், கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சின் மனிதவள அபிவிருத்திப் பிரிவின் உதவிப்பணிப்பாளர் திரு.சி.தணிகசீலன், கட்டிடத்திணைக்களத்தில் களப் பொறியியலாளராகப் பணியாற்றும் செல்வி கலைச்செல்வி, சூழலியலாளர் திரு.செ.ரமேஸ்வரன், புதுக்குடியிருப்பு விவேகாநந்த கல்லூரியின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு.க.பிரதீஸ், பழுகாமம் கமநல கேந்திர நிலையத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.க.சதிஸ்குமார், திருப்பழுகாமம் உழவர் அமைப்பின் தலைவர் உறுப்பினர்கள், தொண்டர்கள் இவர்களுடன் கிழக்கு இலங்கை இந்து சமய சமுக அபிவிருத்திச் சபையின் தலைவர் திரு.த.துஷ்யந்தன் தலைமைதாங்க இந்த நிகழ்வின் தொடக்க வைபவம் விவசாயக்கட்டிடத் தொகுதியில் நடாத்தப்பட்டது.

தலைமையுரை வழங்கிய கிழக்கு இலங்கை இந்து சமய சமுக அபிவிருத்திச் சபையின் தலைவர் 'இப்பணியின் இரண்டாம் கட்டம்' வெற்றிகரமாக நடைபெற அனைவரதும் ஒத்துளைப்புக் கிடைத்துள்ளது, அதற்கு பல வழிகளிலும் பல்கலைக்கழக மட்டத்தில் இருந்து திணைக்கள மட்டம் அதற்கு அப்பால் விவசாயிகள், தொண்டர்கள் என அனைத்து உள்ளங்களினதும் ஒத்துழைப்புடன் இப்பணி நடைபெற்றுவருவதுடன், இங்கு வருகை தந்துள்ள பெரியவர்கள் புத்திஐீவிகள் மூலமான வழிப்புணர்வானது, இப்பணியினை நாம் விட்டுச் சென்றாலும் இதனை நீடித்து மற்றவா்களால் கொண்டு செல்வதற்கான ஒரு தந்திரோபாயமாகவும் இதனை செய்து வருகின்றோம். அது பல கிராமங்களில் தற்பொழுது  மக்களினால் முன்னெடுக்கப்பட்டிருப்பது இத்திட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும் ' எனக் கூறினார்.

இந்நிகழ்வின் ஆசியுரை வழங்கிய காந்தன் ஐயா அவர்கள் 'தா + வரம், என்றால் வரத்தை தந்துகொண்டிருப்பவை மரங்கள். 1977 ஆம் ஆண்டுகாலப்பகுதியில் இந்தக் கிராமங்கள் எல்லாம் பசுமையாக காட்சி தந்தன அதற்கு காரணம் எமது மனங்களில் ஈரம் இருந்தன, ஆனால் நாம் பின்னர் வீரத்துக்கு தாவி விட்டோம். அதை 'மண்ணில் ஈரம் இருந்தால் பயிர் வளரும் மனதில் ஈரமிருந்தால் உயிர் வளரும்' என என்கவிதையில் கூறியிருக்கிறேன். ஆக வீரத்துக்கு போனதால் ஈரமில்லாது போயிற்று என்றார். எனவே எம் மனதிலும் ஈரமில்லை மண்ணிலும் ஈரமில்லை இந்த நிலையினை மாற்றி காத்திரமான இந்தச் சேவையினை கொண்டு வருவதற்கு நாம் ஒவ்வொருவரும் பணியாற்ற வேண்டும் என்றார். "துரௌபதை வனவாசகம் போகும்போது நிழல் உள்ள மரங்கள் உண்டா எனக் கேட்டாராம்" ஏனெனில் நிழல் அழலைப் போக்கும். எனவே அத்தகைய நல்ல பெரும்பணியினைச் செய்கின்ற உங்களை பாராட்டி இப்பணி இனிதே ஈடேறவேண்டும்' என தனது ஆசியுரையினை வழங்கி வைத்தார்.

உதவி ஆணையாளர் தெரிவிக்கையில் ' மட்டக்களப்பு ஒரு நெல்விளையும் விவசாய பூமி அதனால் ஆரம்ப காலத்தில் கிட்டத்தட்ட 985 சிறிய, நடுத்தர, பெரிய குளங்கள் இருந்துள்ளன. அவை இன்று காணாமற் போய் வெறும் 225 குளங்களே காணப்படுவதாகவும், இவை மனிதர்களாலும் இயற்கையாலும் அழிந்து போயுள்ளது, அவை ஒழுங்காகப் பராமரிக்கப்படவில்லை, அந்த பராமாிக்கும் பெரும் பணியினை இச்சபையினர் முன்வந்து அவற்றைப் பாதுகாக்க நீரேந்து குளங்களின் கட்டுகள், உப்புத்தடைக் அணைகள் என்பனவற்றின் ஓரங்களில் நிலக்கீழ் நீரை உறிஞ்சி வைக்கும் மண்ணரிப்பை தடுக்கும் இந்த விருட்சங்களுக்கான விதைநடுதல் காலத்தின் கட்டாயம், இதற்கு எங்களாலான அனைத்துப் பங்களிப்பும் கிடைக்கும் எனவும், எதிர்காலத்தில் தமது திணக்களத்தினால் ஒரு இலட்சம் மதுரை மரங்களை நட உள்ளதாகவும் தெரிவித்தார். இந்த நடவடிக்கை மூலம் குறைந்து வரும் மழை வீழ்ச்சியினை எதிா்காலத்தில் அதிகரித்து அதன் மூலம் நீரேந்து பிரதேசங்களை நிறைத்து ஒரு பசுமைப்புரட்சியினை செய்வதற்கான அடித்தளம் இதுவாகும்' என தனது கருத்தினை கூறினார்.

கலாநிதி பிறேம்குமார் பேசுகையில் ' கிட்டத்தட்ட 500 குளங்கள் காணாமல் அழிந்து தூர்ந்து போய்விட்டது அவற்றை கைவிட்டாலும் மீதமாக இருக்கின்ற குளங்களை இவ்வாறான நடவடிக்கை மூலமாக பாதுகாக்க வேண்டும். "மண்ணின் மைந்தர் என இருந்த காலம் போய் மண்ணின் மரங்கள்" என நமக்கு பரிட்சயமான எமது சொந்தமாக இருக்கக்கூடிய பனை விருட்சங்களை நாங்கள் உருவாக்குதல் மிக்க நன்மை தரும் ஒன்றாகும். தொழில் வளர்ச்சியினாலும், பல மின் சாதனங்களைப் பயன் படுத்துவதனாலும் மாசு நிறைந்த இச்சூழலினைத் தூய்மையாக்குபவை மரங்களே! 'மரங்கள் ஆக்ஸிஜன் தொழிற்சாலை' என்ற வாசகம் நாம் அறிந்ததே அல்லவா! ஆம், மரங்கள் காற்றினை தூய்மை செய்கின்றன, மேலும் நிழலைத் தருகின்றன. 'நிழலின் அருமை வெயிலில் தெரியும்' என்பது பொன்மொழி. வெப்பம் அதிகமாகக் காணப்படக் காரணம் என்ன? நாம் மரங்களை அழித்ததும், அதனால் ஏற்பட்ட நிழலின்மையுமே காரணமாகும்.' என காத்திரமான கருத்தினை தெரிவித்தார்.

உதவிப்பணிப்பாளா் திரு.சி.தணிகசீலன் கருத்துத் தொிவிக்கையில் 'சுயநலத்தின் பிடியில் சிக்கிய மானிட சமுதாயம் இயற்கையை அழித்து, மரங்களை வெட்டி, காடுகளைக் குறைத்து தன் தலையில் தானே தீ வைத்துக் கொள்கிறது. இவ்வறிவற்றச் செயலைத் தடுக்க வேண்டும். இத்தருணத்தில் மரங்களின் நலனையும், பயனையும் சிந்திக்கத் தந்தது மிகவும் சரியானதே! எனவே மரங்களை வளர்க்க வேண்டும். மரங்கள் பறவைகள் மற்றும் விலங்குகளின் புகலிடமாய் விளங்குகின்றன. பூமியில் மூன்றில் ஒரு பங்கு காடுகள் இருக்க வேண்டும் என்பது இயற்கையின் விதி. இவ்வாறு இருந்தால் நமக்கு கிடைக்கும் பயன் அதிகம். காடுகள் மழையைத் தருவதுடன நிலச்சரிவைக் கட்டுப்படுத்துகிறது. மண் அரிப்பை கட்டுப்படுத்துகிறது. கரியமில வாயுவை நிர்ணயம் செய்யும் தன்மை மரங்களுக்கு உள்ளது. புவியின் தட்பவெட்பத் தன்மையை நிர்ணயிக்கும் காரணிகளாக காடுகள் உள்ளன. அது மாத்திரமல்லாது உலகச் சந்தையில் பொலித்தின் பாவனை குறைக்கப்பட்டு தடை செய்யப்பட்டு வருகின்ற இந்த வேளையில் பனையோடு பழகிய எமது மக்கள் இந்த இடைவெளியை நிவர்த்திக்க எதிர்காலத்தில் பனம் பொருளுக்கு கிறாக்கி ஏற்படும் நிலை உள்ளது.

காடுகள் அழிக்கப்படுவதால் கடல் மட்டம் உயர்வு, புவி வெப்பம் ஏற்பட்டு சில பகுதிகளில் அதிக மழை, சில பகுதிகளில் வறட்சி உருவாகிறது. கடலோரப் பகுதிகளில் மரங்கள் வளர்க்கப்படும்போது அலைகளை கட்டுப்படுத்தும் சக்தி மரங்களுக்கு உண்டாகிறது. புவியைக் காத்தால் தான் உயிரினங்களைக் காக்க முடியும். ஆகவே இளைஞர்கள், பாடசாலை மாணவர்கள் மரம் நடுவதை ஒரு பொழுதுபோக்காகக் கொண்டு அவற்றை விளையாட்டு விளையாட்டாக நட்டு எமது எதிர்காலத்தை பாது காக்க வேண்டும்" எனவும் கூறினாா்.

சூழலியலாளர் ரமேஸ் தனது கருத்தாக எமது சூழலை பசுமையாக்குவதுடன், யானைகளின் அட்டகாசத்தினை எதிர்து போராடுவதற்கான இயற்கை அரனாக இவ்வாறு வயல் குளங்கள் நிறைந்த எல்லைகளில் பனை விருட்சங்கள் நடுவது நல்ல பலனை தரும் ஒருதிட்டமாகும் எனவும், இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் அதனால் விழ்ப்படைந்த பல அமைப்புகள் கிராம மக்கள் ஒன்றிணைந்து எல்லைக் கிராமங்களில் நடுகை பண்ணி வருவது இந்த நல்ல திட்டத்துக்கு கிடைத்த வெற்றி எனவும் கூறினார்.

அதன் பின்னர் பழுகாமம் கமநல எல்லைக்குட்பட்ட உப்புத்தண்ணி தடை செய்யும் ஆத்துக்கட்டில் ஒரு தொகை பனம் விதைகள் அனைவராலும் விதைக்கப்பட்டன.

மக்கள் பயனுற செய்யும் மூன்று செயல்கள் நிலையான தர்மங்கள் ஆகும் :
1. மக்கள் தாகம் தீர்க்க கிணறு வெட்டுவது
2. அறியாமை அகற்றும் கல்வி புகட்டுவது
3. நிழல் தரும் மரம் நடுவது.

இவை மூன்றும் நாம் மறைந்த பிறகும் நமக்கான நன்மைகளை தேடித் தரும். அசோகர் போர் செய்து பலரைக் கொன்றார் என்பதை விட அவர் சாலையெங்கும் மரம் நட்டினார் என்பதே பலரின் நினைவில் நிற்கிறது. குழந்தையொன்று பிறந்தால் அதன் பெயரில் தேக்கு மரம் நடலாம், வளர்ந்த பின் பலன் தரும். திருமணங்களில் மாமரம், தென்னங்கன்று பரிசளிக்கலாம், வாழ்வாங்கு வாழும். அன்புக்குரியவர் இறந்தால் அவர் பெயரில் வேம்பு  நடலாம், நிழலாகி நிற்கும்.

குழந்தைகளை மரங்களை நேசிக்க கற்றுக் கொடுத்தால் அவை மனிதர்களை நேசிக்கவும் எளிதில் கற்றுக் கொள்ளும். குழந்தைகளிடம் ஜீவகாருண்ய ஒழுக்கம் வர செல்லப் பிராணிகளை வளர்க்க பழக்கலாம். சுத்தம், இடமின்மை சவால்கள் ஏற்படும் சூழலில் செடிகள் வளர்ப்பதே சிறந்த மனப்பயிற்சி.





0 comments:

Post a Comment