'எனக்கு என்றால் சரியான விருப்பம் சேர் இந்த அணில், குரங்கு, சிங்கம் எல்லாம் இருக்கிற கதைப்புத்தகம் வாசிக்க, எங்கள டூறு கூட்டிப்போனாப்புல அந்தப் புத்தகதங்களை எல்லாம் பாத்த, அதுக்குப் பிறகு அப்பாட்ட சொன்ன அவருக்கு அதுகள் எங்க இருக்கிது என்றும் தெரியா என்றவர்' என்று ஒரு 3ம் தரத்தில் உள்ள மாணவன் சொன்னார். 'நாங்க இந்த 40ம் கொலனில இருந்து வருசத்துக்கு மட்டும்தான் களுவாஞ்சிக்குடி மாக்கட்டுக்கு உடுப்பெடுக்கவும், வருசத்துக்கு சாமான் வாங்கவும் டவுணுப்பக்கமா போவம், அங்கதான் புத்தகக்கடை இருக்கிதெண்டாங்க, ஆனா அதுக்கெல்லாம் காசு கூடவாம் என்றதால அப்பா அம்மாட்ட கேட்கிறதில்லை. பள்ளி புத்தகங்கள் மட்டும்தான் எங்களுக்கு தெரியும்' என்று இன்னொரு மாணவரும் கூறினார்கள் அந்தப் பாடசாலையின் ஆசிரியர்கள் முன்னே!

அதிபர் திரு.சந்திரகுமார் அவர்கள் கூறினார் 'நாம் எல்லா மட்டங்களிலும் இந்த மிகப் பின்தங்கிய கிராமத்தில் இருக்கும் பாடசாலையினை தரம் உயர்த்தப் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றோம். ஆனால் அவை கிடைக்கப் பெறவில்லை. பாடசாலையின் மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறையினைச் சென்று பாருங்கள், அவை மிகவும் பழுதடைந்துள்ளது, அவற்றைச் சுற்றி அறுக்கையான வேலிகள் கிடையாது, அதுபோல் மாணவர்கள் இருந்து கற்க அறைகள் கிடையாது அதனால் மாணவர்கள் வெளியில் மரநிழலில் இருந்து படித்துக்கொள்ளுகின்றனர், ஆசிரியர்கள் தொலைவில் இருந்து வருகின்றனர், இருப்பினும் இந்த பின்தங்கிய கிராமத்துக்கு போக்குவரத்து வசதிகள் பெரிதாக் கிடையாது. அதெல்லாம் விடுங்கள் எமது கஸ்ட்டம் எமக்கு ஒன்றும் பெரிதாக் தெரியவில்லை இந்தப் பிள்ளைகளுக்கு படிக்க புத்தகங்களும், அதற்கான உபகரணங்களும் முதலில் கிடைத்தால் அதுவே எமக்கு மகிழ்ச்சி. எம்மால் இயன்றளவு புத்தங்கள் ஒரு சிலவற்றை சேகரித்தோம் அவை மிக மிகச் சிறயளவே, அதை எமது சொந்தங்கள், நலன்விரும்பிகள் நிவர்த்தி செய்து தந்தால் போதும் அவற்றை நல்ல முறையில் பராமரித்து, மாணவர்களை நாங்கள் வழிப்படுத்துவோம்' என நெஞ்சி நெகிழச் சொன்னார்.
எல்லா வசதிகளும் இருந்தும் பெரிதாகப் பிரகாசிக்காத நகர்புற மாணவர்களிடையே, மிக மிக குறைந்த வசதிகளுடன் கற்று தேசிய மட்டத்திலேயே சென்று மெய்வல்லுனர் போட்டிகளில் பரிசில்களை தட்டி இந்த கிராமத்துக்கு மாத்திரமல்ல எமது முழு மாகாணத்துக்கே பெருமை சேர்த்த மாணவர்கள் இந்தப் பாடசாலையில் இருப்பதைக் கண்டு பூரித்துப்போனேன். அதற்கு இங்கு கடமையுணர்வுடன் செயலாற்றும் அதிபர், ஆசிரியர்களே காரணமாகும்.
நூலக பயன் பாட்டை ஒருவர் அறிந்துகொள்ளும் சரியான தருணம் என்பது பள்ளிப்பருவம் தான். பள்ளிப் பருவத்தில் நூலக பயன்பாடானது சரியாக தொடங்கப்பட்டால் எதிர்காலத்தில் அவர்களின் கல்வி வளர்ச்சி ஒளிமயமானதாக அமைந்துவிடுவதனைக் காணலாம்.
அந்த அடிப்படையிலேயே, இந்தப் பாடசாலைக்கு ஒரு நூலகத்தினை நிறுவவேண்டும் என பேரவாக் கொண்டுள்ளனர் இந்த இளம் குழந்தைகளும், ஆர்வமுள்ள ஆசிரியர்களும். அதற்கு நாம் என்ன உதவி செய்யலாம் என சிந்திக்க முடியுமா? நமது நகர் புறத்தில் உள்ள பாடசாலைகளில் சென்று அங்குள்ள பிள்ளைகளிடம் நீங்கள் தரிசிக்கக்கூட இல்லாத, எமது மாவட்டத்தின் எல்லையில் பல தொல்லைகள் மத்தியில், எமக்கு உண்ண உணவும், குடிக்க பாலும், எரிக்க விறகும் சுமந்து நாம் உயிர்வாழ உழைக்கும் விவசாயிகளின், தொழிலாளர்களின் நமது சகோதரக் குளந்தைகள் கல்வி கற்பதற்கு ஒரு புத்தகத்தினை அன்பளிப்பு செய்ய முடியுமா? என்பதை அறிய விரும்புகின்றேன். அத்துடன் அங்கு ஒரு அறையினை தருவதாக அதிபர் உறுதியளித்துள்ள நிலையில் அந்த அறையினை புத்தகங்கள் வைப்பதற்கும், அவற்றை இருந்து வாசிப்பதற்குமான ஒன்றாக மாற்றியமைக்க உதவ முடியுமா? என்பதும் எனது வினாக்களாக இருக்கின்றது.
ஆப்ரகாம்லிங்கன் சொன்னார் 'எவனொருவன் கீழே கிடப்பவனை தூக்கிவிடக் குனிகின்றானோ அவனே உயர்ந்த மனிதன்' என்றார். அறிவை வளர்த்துக்கொள்ள முடியாமல் கீழே வீழ்ந்துகிடக்கும் எமது குழந்தைகளை தூக்கிவிட கைகொடுத்து உயர்ந்தவர்களாகவேண்டாமா?
எமது சமுகம் வறுமையை எதிர்த்தும், வரட்சியை எதிர்த்தும், அனர்த்தங்களை எதிர்த்தும் போராடுகின்றார்கள் ஆனால் அவர்களிடம் அவற்றை வெல்வதற்க்கு வலிமையான ஆயுதங்கள் கிடையாது. அதனால்தான் அவர்கள் தோற்றுக்கொண்டிருக்கிறார்கள். அதற்கு புரட்சியாளர் லெனின் சொன்னார் 'போர்க்களத்தில் புத்தகத்தினை விட வலிமையான ஆயுதம் புத்தகம்' என்கின்றார். அந்த ஆயுதத்தினையே நாம் தயார்படுத்தவேண்டும். புத்தகத்தை தொட்டுப்பார்த்தால் காகிதம் தொடர்ந்து படித்தால் ஆயுதம். இதனை நாம் உண்டுபண்ணவேண்டும்.
'அன்னயாவிலும் புண்ணியங்கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்' பொதுவாக வாசிப்புப் பற்றி சிலவற்றினை சொல்லாம் என விளைகின்றேன். இணையதளம், மொபைல் என நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் நமது தகவல் பரிமாற்றம் பெரிதும் வேகமாக வளர்ந்துள்ளது. எனினும் வாசிப்பது என்னும் பழக்கத்தின் நுட்பமான பயன்பாட்டை அதை அனுபவிப்பவர் மட்டுமே அறிவர்.
வாசிக்கும் பழக்கம் மூலமே பல தலைவர்கள் தங்களது அறிவை மேம்படுத்தியுள்ளனர் என்பதுற்கு பல சான்றுகள் உள்ளன. 'இளமையில் கல்வி' என்ற பழமொழிக்கு ஏற்பட வாசிக்கும் பழக்கத்தையும் சிறுவயதில் இருந்தே தொடங்க வேண்டும். மாணவர்கள் அறிவைப் பெருக்குவதற்கு வகுப்றை புத்தகத்துடன் நூலகத்தில் உள்ள புத்தகங்கள் பலவற்றையும் படிக்க வேண்டும்.
பள்ளிகள் தங்களது நூலகங்களை சரியான முறையில் மாணவர்கள் பயன்படுத்துவது குறித்து பல குறிப்புகளை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
1. வகுப்பறை நூலகங்களில் குழந்தைகள் இலக்கியம், சிறுகதைத் தொகுப்பு, கவிதை, படக்கதை, கற்பனைக் கதை, நகைச்சுவை, புதிர், நெடுங்கதை, வாழ்க்கைக் குறிப்பு, பரீட்சார்த்தக் கதைகள், இதழ்கள், நாளிதழ்கள் போன்றவை கட்டாயம் இடம் பெற வேண்டும்.
2. மாணவர்களோடு கல்லுõரியின் நுõலகத்திற்கு ஆசிரியர்கள் சென்று மாணவர்களுக்குத் தேவைப்படும் புத்தகங்களை அவர்கள் பெறுவதற்கு உதவுவது மிக முக்கியம். வகுப்பறையில் நடத்தப்படும் பாடத்திற்கு உபயோகமான நுõல்களை ஆசிரியர்கள் நுõலகங்களில் முன் கூட்டியே வைத்திட வேண்டும்.
3. நூலகங்களில் ஆங்கில மொழி வாயிலான நூல்களை மட்டும் வைக்காமல் பிற மொழி நூல்களையும் வைப்பது மொழிகளின் இணையான அர்த்தத்தை உணர உதவுவதோடு குழந்தைகளுக்குத் தேவையான மொழிகளுக்கிடையேயான பரிமாற்றத் தேவைகளையும் நிறை வேற்றும்.
4. நூலகங்களில் வாசிப்பதற்குக் குறிப்பிட்ட காலத்தை ஒதுக்குமாறு செய்ய வேண்டும். இது வகுப்பறை நேரத்துடன் இல்லாமல் வாசிக்க தனியான முக்கியத்துவத்துடன் தரப்பட வேண்டும்.
5. வகுப்பறையிலோ சிறிய குழுவிலோ புத்தக அனுபவங்களை பகிர்ந்து கொள்ளச் செய்வதும் முக்கியமான செயல். புத்தகங்களை குழந்தைகளே தேர்வு செய்யச் சொல்வதும் அவசியமான ஒன்று. எதிர்பாராமல் புத்தகங்கள் கிழிந்துவிட்டால் குழந்தைகளே அதை சரி செய்யக் கற்றுக் கொடுக்க வேண்டும்.
0 comments:
Post a Comment