ADS 468x60

15 January 2024

ஜனாதிபதிதேர்தலில் நாம் எதிர்கொள்ளவுள்ள சவால்கள்!

நாம் இன்று இந்த நாட்டின் அரசாங்கத்தின் தலைமையில் நம்பிக்கை இழந்து, அதில் விரக்தியுற்றுள்ளோம். இதற்காக, இன்றய சூழலில் ஒரு பெரிய அரசியல் இக்கட்டான சூழல் இல்லாவிட்டால், ஜனாதிபதித் தேர்தல் செப்டம்பர் மற்றும் அக்டோபர் 2024 க்கு இடையில் நடைபெறும். அதற்காகத்தான் அனைத்து அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் இப்போது தயாராகி வருகின்றன.

நாமல் ராஜபக்ச இப்போதே நாடுபூராகவும் ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ள அதற்கான தெரிவுக்காக மக்களை வழிநடத்தி அதன் பின்னர் பாராளுமன்றப் தேர்தலை எதிர்கொள்ளும் தலைவர்களுக்காகவும் நாமலின் தெரிவு இடம்பெற முஸ்தீபு அமைத்து வருகின்றார். 

பொதுஜன பெரமுன இன்னும் குடும்ப ஆட்சி, பாரம்பரிய அரசியல் கலாச்சாரம், தொன்மையான பொருளாதாரம் மற்றும் எதேச்சாதிகார அரசியல் ஆகியவற்றின் அடிப்படையிலான கொள்கைகளையோ அல்லது அரசியலையோ மாற்றவில்லை என்பது மிகவும் தெளிவாகிறது. அடுத்த மொட்டு வேட்பாளராக சமல் ராஜபக்சவை கொண்டுவர முயற்சிக்கலாம் ஏனெனில், மற்ற ராஜபக்சக்களை விட (அதாவது பசில்) இவர் சற்றுச் சிறந்த பின்னணியைக் கொண்டவராக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. இருப்பினும், அவர் குடும்ப ஆட்சியின் கீழ் இருக்கிறார் மற்றும் அவரது எதிர்பார்ப்பு அல்லது கொள்கைகள் அதே பாரம்பரிய, பழமையான மற்றும் சர்வாதிகாரமானவையில் இருந்து விலகப்போவதில்லைதானே.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில், கோட்டாபய ராஜபக்ச 6.9 மில்லியன் வாக்குகளைப் பெற்றிருந்தார், அதாவது 52.25 சதவீதம். ஐ.தே.க.வின் பிரதான போட்டியாளரான சஜித் பிரேமதாசவால் 41.99 வீதம் வாக்குகள் அல்லது 5.6 மில்லியன் வாக்குகளையே பெற முடிந்தது. இந்த இடைவெளி 1.3 மில்லியனுக்கும் அதிகமாக உள்ளது, கடந்த ஐந்தாண்டுகளில் நடந்த நிகழ்வுகள் மற்றும் மாற்றங்களைக் கருத்தில் கொண்டு அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் சமாளிப்பது கடினமான பணியாக இருக்காது. 

கோட்டாபயவுக்கு வாக்களித்தவர்கள், யுத்த வெற்றியை பிரதான காரணமாகக் கருதிய சிங்கள பௌத்த சமூகங்களைச் சேர்ந்தவர்கள்தான். அந்த நிலை தற்போது பெருமளவில் மாறியுள்ளது. கோத்தபயாவின் கீழ் ராஜபக்ச ஆட்சி முற்றிலும் தோல்வியடைந்தது. அவர் நாட்டின் வெளிநாட்டுக் கடன் நிலைமையை நிர்வகிக்கத் தவறிய நிலையில், தேசிய வருமானம் மற்றும் வரி முறை குறித்த அவரது இருண்ட கொள்கைகள் நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு வந்தன. விவசாயிகளையும் இந்த நாட்டின் பொருளாதாரத்தையும் ஒரே மாதிரியாகப் பாதித்த அவரது உரக் கொள்கை மிகவும் பேரழிவாக இருந்ததை மறக்க முடியாது.

ராஜபக்சக்கள் மோசடி மற்றும் ஊழலுக்கு உலகப் புகழ் பெற்று செய்திகளில் உலாவந்தனர். எனினும் அவர்களின் தீவிர ஆதரவாளர்கள் இந்த நிலைமையைப் பற்றி கவலைப்படவில்லை. இது ராஜபக்சக்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படாமல் பொதுவாக நாட்டில் அரசியல் கலாசாரத்தின் சீரழிவைக் காட்டுகிறது. 

இந்த நிலையில், அனுரகுமார திஸாநாயக்க, ஜே.வி.பி அல்லது தற்போதைய தேசிய மக்கள் சக்தி ஊழல் மற்றும் மோசடிகளில் இருந்து விடுபட்டிருக்கின்றனர், அவர்களின் வெளிப்படையான வேட்பாளர் அனுரகுமார ஜனாதிபதியானால் அவர் இலங்கையை ஊழல் மற்றும் மோசடிகளில் இருந்து விடுவிக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வார் என்பதும் தெளிவாகிறது. எனினும் அவர் தேர்தலில் வெற்றி பெற முடியுமா? என கற்பனை செய்வது கடினமாக உள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அவர்கள் வெறும் 418,553 வாக்குகள் அல்லது மொத்த வாக்குகளில் 3.16 வீதம் மட்டுமே பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனால் அவர் நிரப்ப வேண்டிய வாக்கு இடைவெளி கிட்டத்தட்ட 6 மில்லியன்; என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், சர்வதேச பொருளாதார நிலைமைகள் மற்றும் ஐ எம் எப், உலக வங்கி மற்றும் இந்தியா உள்ளிட்ட முக்கிய முதலாளித்துவ நாடுகளின் கொள்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் அவரும் அவரது கட்சியும் எந்த வகையான பொருளாதாரக் கொள்கைகளை பின்பற்றுவார்கள் என்பது கேள்விக்குரியது. சந்தேகத்திற்கு இடமின்றி, கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேற்றுவதில் அரகலய (போராட்டம்) முக்கிய பங்கு வகித்தது. அவர்களில் பெரும்பாலோர் அந்த சித்தாந்தத்திற்குள் தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளாமல் பொருளாதார ரீதியாக வளமான நாட்டைக் காண விரும்பிய இளைஞர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தச் சூழ்நிலையில் ராஜபக்சக்களை தோற்கடிப்பதற்கான சிறந்த வழி ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையேயான கூட்டணியாகும், ஒருவேளை சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராகவும், ரணில் பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதாகவும் இருக்கலாம். காரணம், பொருளாதாரப் பார்வையிலும் வெளியுலக உறவுகளிலும் ரணில் சிறந்த நபராக இருந்தாலும், நாட்டிலுள்ள சாதாரண மக்களிடமோ அல்லது வாக்காளர்கள் மத்தியிலோ அவர் பிரபலமாகவோ ஏற்றுக்கொள்ளக் கூடியவராகவோ இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

இத்தகைய கூட்டணியைத்தான் ராஜபக்சக்கள் இப்போது தவிர்க்க முயற்சிக்கின்றனர். ஜனாதிபதி பதவிக்கு ரணிலுக்கு ஆதரவளிக்க மொட்டு உறுப்பினர்களில் பெரும்பான்மையானோர் தயாராக இருப்பதாக மஹிந்தானந்த அளுத்கமகே அண்மையில் அறிவித்தார். மகிந்த ராஜபக்ச கூட பல தடவைகள் சாடமாடயாய் பேச்சில் மொட்டுகட்சி ரணிலுக்கு ஆதரவளிப்பதாகக் காட்டி அடுத்த ஜனாதிபதி வேட்பாளரை முன்னிறுத்த மாட்டார்கள் என்று கூறினார். இப்போது பந்து ரணிலின் பக்கத்தில் உள்ளது. அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்சக்களுடன் செல்வதா அல்லது அவர்களை ஜனநாயக முறையில் தோற்கடிக்கப் போராடுவதா என்பதை அவர் தீர்மானிக்க வேண்டும்.

இந்த நிலையில்தான், இலங்கையில் நம்பகமான கருத்துக் கணிப்புகளோ அல்லது கணக்கெடுப்புகளோ இதுவரை பெரிதாக இருக்கவில்லை. அரசியல் விஞ்ஞானம், பொருளாதாரம் மற்றும் சமூகவியல் ஆகிய துறைகளில் அவ்வாறு செய்ய திறமையான பல்கலைக்கழக கல்வியாளர்கள் இருந்தாலும், அதற்கான நிதி அல்லது வசதிகள் அவர்களுக்கு கிடைக்கவில்லை. 

கடந்த ஆண்டு, ஒரு சந்தேகத்திற்குரிய நிறுவனம் இதுபோன்ற கருத்துக் கணிப்புகளை நடத்தியது. மார்ச் 2023 முதல், அவர்கள் மாதாந்திர வாக்கெடுப்பை நடத்தி வந்தனர், அக்டோபர் முடிவுகளின்படி ஜெவிபி 51 வீத வாக்குகளைப் பெற்று வெற்றிபெறக்கூடும் என்று கணித்துள்ளது! இடதுசாரி சிந்தனை கொண்டவர்களுக்கு இது ஒரு மாயையாக இருக்கலாம். அதே கருத்துக்கணிப்பின்படி, மொட்டு வேட்பாளர் பெறக்கூடியது 6 வீதம் மட்டுமே எனவும் கூறியுள்ளது. இது மேலும் ஒரு மாயையாக இருக்கலாம். இருந்தாலும் இவர்கள் நாடு முழுவதும் எடுத்துள்ள மாதிரி எண் வெறும் 567 ஆக இருந்தது! இதை நம்பகமான மாதிரியாகக் கருத முடியாமா என்பது கேள்விக்குறி.

மக்கள் எப்படி வாக்களிக்கிறார்கள் என்பது குறித்து இலங்கையில் சரியான ஆய்வுகள் இல்லை. என்ன காரணிகளை அவர்கள் கருத்தில் கொள்கிறார்கள் என்பதனையும் சரியாகக் குறிப்பிட முடியவில்லை. ஆனால் முதிர்ந்த ஜனநாயக நாடுகளில், கட்சி, தேர்தல் (பொருளாதார), சவால்கள் மற்றும் சிக்கல்கள் மற்றும் ஆளுமைகள் முக்கிய பங்கு வகிக்கின்றது. 

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் குடும்ப ஆட்சியை தோற்கடிப்பதனை பெரும் சவாலாக எடுத்துக் கொண்டால், சஜித்-ரணில் கூட்டணி இல்லாவிட்டாலும் நன்மைகள் உண்டு. ஏனென்றால் தற்போதைய ஜனாதிபதித் தேர்தல் முறையின் ஒரு சாதகமான அம்சம் விருப்பு வாக்குரிமை என்பது பெரும்பாலான மக்களுக்குத் தெரியாது. வாக்காளர்களுக்கு 1, 2, 3 என மூன்று வாக்குகள் உள்ளன. முதல் எண்ணிக்கையில் யாரும் 50 வீத வாக்குகளைப் பெறாவிடின், ஜெவிபி மற்றும் ஏனையவருக்கிடையே இரண்டாவது வாக்கை பகிர்ந்துகொள்ளக் கிடைத்தால், இரண்டாவது சுற்று எண்ணிக்கையில் குறித்த வேட்பாளரை தோற்கடிக்க வாய்ப்பு உள்ளது

ரணிலுக்கும் சஜித்துக்கும் இடையில் அத்தகைய உடன்பாடு இல்லாவிட்டாலும், தற்போதைய ஆழும்கட்சி வேட்பாளரை தோற்கடிக்கும் நோக்கில், ஒரு சுயாதீனமான மூன்றாம் தரப்பு அத்தகைய வாக்களிப்பு முறையை பரிந்துரைக்க முடியும். அத்தகைய மூன்றாம் தரப்பு சிவில் சமூகம் அல்லது சமூக ஆர்வலர்களிடமிருந்து வர வேண்டும். 

முதலில் அனுரவுக்கும்; இரண்டாவது வாக்கு சஜித்துக்கும் அதேபோல சஜித்தின் வாக்காளர்கள் கூட அனுரவுக்கு இரண்டாவது விருப்பத்தேர்வில் வாக்களிக்கலாம். வரவிருக்கும் தேர்தலில் பல பினாமிகள் இருக்கலாம். கடந்த தேர்தலில், இலங்கையின் பின்தங்கிய மற்றும் கேலிக்கூத்தான அரசியல் கலாச்சாரத்தை அம்பலப்படுத்தும் வகையில் 34 ஜனாதிபதி வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தனர். இம்முறையும் அப்படியே இருக்கலாம். எனவே, மக்கள் இதுசார்ந்த கல்வியறிவு பெற்று, முடிந்தவரை பகுத்தறிவுடன் வாக்களிக்க வேண்டும் அதுதான் நியாயமான தேர்வாக இருக்கும்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சிறுபான்மைக் கட்சிகள் மற்றும் குழுக்களிடையே (தமிழ் மற்றும் முஸ்லிம்) தெளிவின்மை இருக்கலாம். கடந்த காலத்திலும் இப்படித்தான் இருந்தது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வெற்றிபெற வாய்ப்பில்லை என்ற போதிலும், தமது கொள்கைகளையும் அக்கறைகளையும் தமது சமூகங்களுக்கு மட்டுமன்றி பொது மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தமது வேட்பாளர்களை முன்னிறுத்துவது நல்லது. அரசியல் கட்சிகள். அவர்கள் இரண்டாவது வாக்கை சஜித் பிரேமதாசவுக்கு அளிக்கத் தீர்மானித்தால், அவரால் சாத்தியமான பதவிக்காலத்தில் அவர்களின் கவலைகளை (அரசியல் மற்றும் பொருளாதாரம்) நிவர்த்தி செய்வது அவருக்குக் கடமையாக இருக்கும். இவையே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நாம்; காணக்கூடிய பிரதான சவால்களாகும்.


0 comments:

Post a Comment