ADS 468x60

20 November 2024

ஒருபோத்தல் சாராயத்துக்கு இவ்வளவு வரியா நாம கொடுக்கிறம்!


'அட யாரு அரசாங்கம் வந்தாலும் குடிச்சவாய்க்கு ஒரு குப்பிய ஆயிரம் ரூபாவுக்கு வாங்கிக் குடிக்க முடியாமல், 200 ரூபாவுக்கு எமன் ஏறிவரும் வடிசாராயம் குடிச்சி வாழாமல் போறமே'  எனப் பலர் கூறக்கேட்டுள்ளேன். அதனால் என்ன அரசிக்குத்தான் சுகாதாரச் செலவு அதிகமாகும், தொழிற்படையில் பலகீனமானவர்களைக் கொண்டிருக்கும், இழக்கவேண்டியும் வரும். 

விடயத்துக்கு வருவோம். ஓராண்டுக்கும் மேலாக, நாட்டின் முன்னணி மது உற்பத்தி நிறுவனங்கள், அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாதது குறித்து, இன்று சமூகத்தில் தீவிர விவாதத்திற்கு உள்ளாகி வருகிறது.

இந்த கதை உண்மையில் ஒரு வருடத்திற்கும் மேலாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சில நரித்தந்திரங்களால் அரசாங்கத்திற்கு உரிய வரிகளை செலுத்துவதில்லை என பல்வேறு சமூக அமைப்புகளும் ஊடகங்களும் அவ்வப்போது சுட்டிக்காட்டி வந்தன.

ஆனால் அந்த வரி மோசடிகளோ வரி ஏய்ப்புகளோ குறையவில்லை. நாளுக்கு நாள் அது வளர்ந்து கொண்டே வந்தது.

ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு முன்பு, 10 மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதன்படி, ஒட்டுமொத்த பொதுமக்களின் அடிப்படை உரிமைகளும் மீறப்பட்டுள்ளதாகக் சுட்டிக்காட்டியிருந்தது.

வரி செலுத்தத் தவறிய 10 மதுபான உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து வரிப் பணத்தை வசூலிக்க உத்தரவிடக் கோரி சமூக ஆர்வலர்கள் குழுவொன்று அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்திருந்தது.

கலால் ஆணையாளர் நாயகம், நிதி அமைச்சின் செயலாளர், நிதி இராஜாங்க அமைச்சர், கணக்காய்வாளர் நாயகம் மற்றும் வரி பாக்கியை செலுத்த தவறிய பத்து மதுபான உற்பத்தி நிறுவனங்களும் இந்த அடிப்படை உரிமை மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தன. .

அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன

அந்த நிறுவனங்கள் மதுபான பொருட்களுக்கு அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வற் வரியை செலுத்தாமையால் அரசாங்க வருமானம் குறைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. மதுபான உற்பத்தி நிறுவனங்கள் ஏய்த்த வரிப்பணத்தை வசூலிக்க தவறியமை தேசிய பொருளாதாரத்தை நேரடியாக பாதித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது.

உற்பத்தி நிறுவனங்கள் செலுத்தத் தவறிய வரி குறித்த தகவல்களை அரசுக்கு அளிக்குமாறு 'தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2016ன் கீழ் கலால் ஆணையர் ஜெனரலை மனுதாரர்கள் கோரியிருந்தனர்.

இதற்கு பதிலளித்த கலால் ஆணையாளர் நாயகம், வரி பாக்கியை செலுத்தாத 10 மதுபான உற்பத்தி நிறுவனங்கள் 678 கோடி ரூபாய்க்கு மேல் செலுத்தத் தவறிவிட்டதாக சம்பந்தப்பட்ட மனுதாரர்களிடம் தெரிவித்திருந்தார். (சிலுமின)

அரசாங்கத்திற்கு அதிக வருமானம் தரும் தொழிலாக மது பாட்டில்கள் உற்பத்தி முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. குறிப்பாக, ஒரு மது பாட்டிலின் விலையில் 75 வீத வரிப் பணம். மற்ற வரிகள் ஆண்டுதோறும் அல்லது ஒரு நிதியாண்டுக்கு கூட செலுத்தப்படும், ஆனால் கலால் வரியை அவ்வாறு செலுத்த முடியாது.

கலால் சட்டம், 1977ன் படி, மதுபானம் தயாரிக்கும் நிறுவனம், அதே மாதம் 16 முதல் 31ம் தேதிக்கு முன், மாதத்தின் முதல் 15 நாட்களுக்குள் உற்பத்தி செய்யப்படும் மதுபானங்களுக்கான கலால் வரியை செலுத்த வேண்டும். அந்த மாதம் 16ஆம் தேதி முதல் 30ஆம் தேதி அல்லது 31ஆம் தேதி வரை உற்பத்தி செய்யப்படும் மதுப் பொருட்களுக்கு செலுத்த வேண்டிய வரியை அந்த மாதம் 31ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 15ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.

அந்த நாட்களில் ஒரு நிறுவனம் முறையாக பணம் செலுத்தவில்லை என்றால், செலுத்தப்படாத வரிகளுக்கு மாதத்திற்கு மூன்று மடங்கு வரித் தொகையை கூடுதல் கட்டணம் விதிக்கும் திறன் கலால் துறைக்கு உள்ளது.

மேலும், மது உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி உரிமத்தை ஆண்டுதோறும் புதுப்பிக்க வேண்டும். வரி செலுத்தவில்லை என்றால், உரிமம் புதுப்பிக்கப்படாது. எனவே, மதுபான உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து முறையாக வரி வசூலிக்க, கலால் துறை சட்டத்தில் ஏராளமான விதிமுறைகள் உள்ளன.

இதுபோன்ற சட்ட விதிகள் இருக்கும் நிலையில் மதுபான உற்பத்தி நிறுவனங்கள் வேண்டுமென்றே அதற்கான வரிகளை செலுத்தாமல் எப்படி ஏய்ப்பு செய்தன என்பதும் ஒரு பிரச்சனை.

கலால் துறையின் பொறுப்பு

குறிப்பாக, வரி மீதி இருந்தபோதிலும், கலால் திணைக்களம் மற்றும் பிரதிவாதிகள் வரி வசூலிக்கும் சட்டப்பூர்வ கடமையை வேண்டுமென்றே புறக்கணித்து, மதுபான உற்பத்திக்கான வருடாந்திர உரிமத்தை சட்டவிரோதமாக புதுப்பித்ததாக உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்த தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது. 

கலால் ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட பிரதிவாதிகள் இந்த நாட்டின் அனைத்து பிரஜைகளின் அடிப்படை உரிமைகளையும் மீறியுள்ளதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், வழக்கு விசாரணை முடியும் வரை வரி செலுத்தாத மதுபான நிறுவனங்கள் மற்றும் வரி செலுத்த தவறிய பிரதிவாதி மதுபான நிறுவனங்கள் தொடர்பாக நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கலால் ஆணையாளர் நாயகத்திற்கு உத்தரவிடுமாறும் மனுவில் கோரப்பட்டுள்ளது. 

அதுமட்டுமின்றி, மதுபான உற்பத்தி நிறுவனங்களின் வரிப்பணத்தை வசூலிக்க நடவடிக்கை எடுக்குமாறு கலால் ஆணையாளர் நாயகத்திற்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

மெண்டிஸ் மற்றும் ரந்தெனிகல ஆகியோரின் மதுபான உற்பத்தி உரிமம் கடந்த வருடம் நவம்பர் மாதம் வரி செலுத்தாமைக்காக இடைநிறுத்தப்பட்டது. ஆனால் ஏற்கனவே சந்தைக்கு விடப்பட்ட மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

கலால் திணைக்கள அறிக்கைகளின்படி, 8.5 பில்லியன் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை உள்ளது. இதேவேளை, கடந்த 13ஆம் திகதி கிடைக்கப்பெற்ற செய்திகளின்படி, நிலுவைத் தொகையை செலுத்தாத 5 மதுபான உற்பத்தியாளர்களின் உரிமத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு கலால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

லைசென்ஸ் பறித்தெடுத்தால் மட்டும் அரசுக்கு வரவேண்டிய பணத்தை எப்படிப் பெறுவது என்பதுதான் எங்களுக்குள்ள பிரச்னை.

ஏன்னதான் என்றாலும், 'குடி குடியைக் கெடுக்கும்' சும்மாவா சொன்னார்கள். ஒரு சாரார் என்னங்க தொடர்ந்து மதுபான விலை அதிகரித்தால் நாங்க எப்படிங்க குடிப்பது என அங்கலாக்கின்றனர். ஏராளமான சான்றுகள் இதை நிருபிக்கின்றன. விஞ்ஞான ஆய்வுகள் சொல்லும் செய்தி, தொடர்ந்து மதுவின் விலை அதிகரிப்பு மது அருந்துதல் குறைவதற்கு வழிவகுக்கிறது மற்றும் ஒரே நேரத்தில் தீங்குகளை குறைக்கிறது. எடுத்துக்காட்டாக, 2017 இல் லிதுவேனியாவால் இயற்றப்பட்ட ஆல்கஹோல் வரி அதிகரிப்பு முதல் ஆண்டில் கிட்டத்தட்ட 1,500 உயிர்களைக் காப்பாற்றியது.

மதுவின் தீமையால் இலங்கை அதிக சுமையில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், 4,200 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் ஆல்கஹோல் தொடர்பான நோய்கள் அல்லது கல்லீரல் ஈரல் அழற்சி, வீதிப் போக்குவரத்து விபத்துக்கள் மற்றும் புற்றுநோய்கள் உட்பட பல நோய்களால் இறக்கின்றனர். மது அருந்துவதால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 733 மில்லியன் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது, இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.5 சதவீதத்திற்கு சமம் என்பதனையும் கவனத்தில் கொள்ளுதல் முக்கியம்.

0 comments:

Post a Comment