ADS 468x60

29 December 2019

பொறுப்புக் கூறவேண்டிய அரசியல்வாதிகளும் பொறுமையிழக்கும் மட்டு மக்களும்.

எதிர்வரும் 2020 பொதுத் தேர்தலுக்காக எமது நாடு தயாராகிக்கொண்டிருக்கின்றது. அதே நேரம் இந்த நாட்டினை கொண்டு நடாத்த பதிய ஜனாதிபதி தெரிவாகி விட்டார். அவர் ஏற்கனவே செயலில் இறங்கி சேவை செய்ய ஆரம்பித்து விட்டார்.

எமது மக்களுக்கு சேவை செய்ய என ஒரு ஜனாதிபதியை தெரிவு செய்ய கிட்டத்தட்ட 600 கோடி ரூபாய்க்களை செலவு செய்து உள்ளோம். அத்தனை ரூபாக்களும் நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் உழைப்பாளரின் வரிப்பணத்தில் செலவிடப்பட்டுள்ளது.

அடுத்த தேர்தலுக்காக கிட்டத்தட்ட 700 கோடி ரூபாய் தேவைப்படுகின்றது. அந்தப் பணமும் வியர்வை சிந்தி, இரத்தத்தினை சாறாக்கி இராப்பகலாக செய்த வேலையில் கிடைத்த வேதனப் பணம் என்பதை அதைகொடுத்த மக்களே மறந்துவிடுவதுதான் வேதனைக்குரியது. 

அப்படி செலவிட்டு நாம் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யப் போகின்றோம். இதில் 196 ஆசனங்கள் 22 தேர்தல் மாவட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்பட ஏனை 29 ஆசனங்கள் தேசியப்பட்டியலில் இருந்து வோனஸ் ஆசனங்களாக ஒதுக்கப்பட்டு வருவது நாம் அறிந்ததே.

அவர்களும் நாம் செலவிட்ட பணத்துக்கு பிரதியுபகாரமாக மக்களின் வாழ்க்கைத்தரத்தினை உயர்த்துவதற்கும், உரிமையை நிலைநாட்டி சுதந்திரமாக வாழ்வதற்கும் எல்லா வகையிலும் வசதி செய்து கொடுத்து சேவையாற்றவேண்டிய பெரிய கடமையை உடையவர்கள்.

நாம் 700 கோடி ரூபாய் செலவினை 225 பேருக்கும் பிரித்துப் பார்ப்போமானால் ஒருவருக்கான செலவு Rs.3.11 கோடி ரூபாய்கள் இந்த தேர்தலுக்காக பொதுமக்களின் வரிப்பணத்தில் செலவிடுகின்றோம். இதையும் மக்கள் மறந்து அவர்களிடம் சென்று மண்டியிட்டு, கைகட்டி நிற்பதனைப் பார்பதற்கு வெட்கமாக இருக்கின்றது.

இவ்வாறு கோடிகளைக் கொட்டி, 1947 ஆம் ஆண்டிருந்து 15 பாராளுமன்ற தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பொறுத்தவரை அதில் பல தமிழ் தலைமைகள் தெரிவுசெய்யப்பட்டு பல அமைச்சுப் பதவிகளையும், அதிகாரங்களையும் கையில் கொண்டு வந்திருக்கின்றனர்.

ஆனால் இவ்வாறான பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் இருந்து செய்த அபிவிருத்திகளை எடுத்துக்கொண்டால், பெரும்பாலும் ஒரு தேர்தலில் வெற்றிபெற்று, சொல்லக்கூடிய ஒரு வேலையைக்கூட மக்களுக்கு செய்த வரலாறுகளை இவர்கள் உருவாக்க தவறியுள்ளனர். மக்களும் நம்பி நம்பி ஏமாந்து போய் விரக்தியின் விழிம்பில் இருக்கின்றனர் இன்று.

அரசியல் ஏன் தேவைப்படுகின்றது.
அரசியலானது, மக்கள், நிலம், இறையாண்மை, அரசாங்கம் எனும் நான்கு தூண்களில் கட்டியெழுப்பப்படும் ஒரு கோபுரமாகும். பின்னால் உள்ள இரண்டையும் விடுங்கள் மக்கள் மற்றும் நிலம் இரண்டும் மிக முக்கியமாக கருத்தில் கொள்ளவேண்டியதொன்றாகும். ஆனால் எமது அரசியல்வாதிகள் முன்னுள்ள இரண்டையும் முக்கியம் கொடுக்காத நிலையில் மக்கள் வாழ்வாதாரம், வாழ்க்கை, வளம் இழந்து மீளமுடியாத நிலையில் நலிவுற்ற சமுகமாகவும் அந்த சமுகத்தால் நிலங்களை பாதுகாக்க முடியாத நிலையில் அவற்றையும் தொலைத்த நிலையில் இரு தூண்கள் இல்லாத ஒரு கோபுரமாக எமது அரசியல் வலுவிழந்த ஒன்றாகப் பார்க்கப்படுவதற்கு காரணம் நீங்கள் கொடுக்கும் கோடிகளுக்கு எற்ப வேலைக்காரர்களை தேர்ந்தெடுக்காமையே காரணமாகும்.

பா.ம.உறுப்பினர்களின் பொறுப்புக்களும் கடமையும்
பொதுவாக ஒரு பாராளுமன்றத்துக்கு தெரிவாகும் ஒருவர் நாட்டின் மக்களின் நலன் தொடர்பில் கொண்டுவரப்படும், கொள்கைகள், திட்டங்கள், புதிய நடைமுறைகள் பற்றி நன்கு அறிந்து அவற்றில் மக்களின் சார்பில் விவாதிக்கும் விவாதங்களில் கலந்துகொள்ள வேண்டும். அதில் ஆரோக்கியமான கருத்துக்களை முன்வைக்க வேண்டும் அத்துடன் அங்கு சாதக பாதக தன்மையை கருத்தில் கொண்டு வாக்களித்து அந்த சட்டவாக்கத்துக்கு பங்களிக்க வேண்டும்.

தவிரவும், மக்களின் குறைநிறைகளை எல்லா வகையிலும் நிவர்த்தி செய்து, ஐந்தாண்டுக்குள் கணிசமான சதவீதத்தில் அவற்றின் முன்னேற்றத்தை மக்கள் உணரும் வண்ணம் செய்து காட்டவேண்டும்.

இதில் எதிர்கட்சி, ஆழும் கட்சி, சிறுபாண்மை பெரும்பாண்மை என்றவகையில் எந்தத் தடையும் கிடையாது. அந்த அந்த நாடாழுமன்ற உறுப்பினரின் கல்வி, அனுபவம், செயற்திறன் தொண்டாண்மை என்பனவற்றை வைத்தே மக்களிற்கான சேவை அமையும் என்பதில் மாற்றுக்கருத்துக்கிடமில்லை.

இந்த வாண்மை இல்லாவர்கள் தான் தமது இயலாமையை மறைக்க மேலுள்ள காரணங்களை வரிசைப்படுத்தி மக்களை காலா காலமாக ஏமாற்றி வருகின்றனர். 

அவ்வாறு ஒரு திறமை, ஆழுமை தெரிவு செய்யப்படும் ஒருவருக்கு இருக்குமானால், பல திட்டங்களை திறந்த பொருளாதாரக் கொள்கையின் பின் வெளிநாட்டு நேரடி முதலீட்டாளர்கள், தொழில் முயற்சியாளர்கள், சர்வதேச நாணய நிதியம், ஐக்கிய நாடுகள் தொண்டு நிறுவனம், உலகவங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி தவிர பல நாடுகளுடைய தூதுவராலயங்கள் ஆகியவை பல முதலீடுகளை காலா காலமாக இற்றைவரைக்கும் செய்து வருகின்றது என்பதனை யாராலும் மறுக்க முடியுமா? 

அவ்வாறு செய்கின் உதவிகளை, நிதி முதலீடுகளை கொண்டுவந்து சேர்க்க அவர்களுடன் பேசி, திட்டவரைபுகளை தயாரித்து எமது பிராந்திய நலன் கருதி கைத்தொழில் பேட்டைகள், வேலைவாய்ப்புகள், கல்விச் சாலைகள், கலைக்கூடங்கள், உட்கட்டுமான விருத்திகள், திறன் விருத்திகள் போன்றவற்றை நீங்கள் தெரிவு செய்த எத்தனை விற்பனர்கள் இம்மக்களுக்கு கொண்டு சேர்த்திருக்கின்றனர்?.

அவ்வாறான திறமைசாலிகள் இருந்திருந்தால் 20 விகித வறுமைக்குட்பட்ட மக்கள் வாழும் இழிவான ஒரு மாவட்டமாக மட்டக்களப்பு ஒருபோதும் அடையாளப்படுத்தப் பட்டிருக்கமாட்டாது.

அதற்கெல்லாம் இவ்வளவு காலமும் தெரிவு செய்துவந்தவர்களில் அநேகம் பேர் வைத்திருக்கும் விடை நமக்கு உரிமைதான் வேண்டும், நாம் எதிர்கட்சியில் எதிர்ப்பரசியல் செய்பவர்கள், எமது கதையை அரசாங்கம் கேட்காது, எமது மக்களை அவர்கள் முன்னேற்ற விரும்பவில்லை என்று அப்பட்டமான சாட்டுக்களையும், பொய்களையும் சொல்லிச் சொல்லியே உரிமையும் இல்லாமல் உடுக்க்கக்கூடத் துணியில்லாத நலிவுற்ற சமுகமாக எமது மக்களை தெருவில் நிறுத்தியுள்ளீர்கள்.

நீங்கள் கேட்கும் முறையில் அறிவினை, திறனை, ஆற்றலைப் (இவை இருக்கும் பட்சத்தில்) பயன்படுத்திக் கேட்டிருந்தால் பல திட்டங்களை கட்டம் கட்டமாகக் கொண்டுவந்து, சுறுசுறுப்பான மக்கள் வாழும் எமது மட்டக்களப்பு மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்தி மகிழ்சிப்படுத்தி இருந்திருக்கலாம். ஆனால் செய்யத் தெரியவில்லை.

இங்கு மக்கள் பாவம் எனச் சொல்ல எந்த தேவையும் கிடையாது. ஏனெனில் அது அவர்களினுடைய தெரிவு என்பதில் சந்தேகம் கிடையாது.

பாராளுமன்ற உறுப்பினர்களை யார் தெரிவு செய்கிறார்கள்?

மக்களா? கட்சியா? என்று பார்த்தால் இலங்கையில் பிரபல்யமான கட்சிகள்தான் அவர்களைத் தெரிவு செய்கின்றனர். மக்களுக்கு அந்த உரிமைகூடக் கிடைப்பதில்லை என்ற விரக்தியில் தான் பல இடங்களில் வாக்களிக்கும் விகிதம் மிக மிக குறைவாகவும், நிராகரிக்கப்படும் வாக்குகள் அதிகமாகவும் காணப்படுகின்றன. அதற்கு சிறந்த உதாரணம் மட்டக்களப்பு தமிழ் பிரதேசங்களாகும்.

Table-01


Source: wikipedia

மேலுள்ள தரவு அட்டவணையின் அடிப்படையில் பார்த்தோமானால், 1989 ஆம் ஆண்டில் இருந்து மட்டக்களப்பு மாவட்டத்திலும் அதில் குறிப்பாக பட்டிருப்பு தேர்தல் தொகுதியிலும் தமிழ் மக்களின் அமோக ஆதரவினைப் பெற்ற கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்கு வீதங்களை இங்கே காணலாம். மட்டக்களப்பு மக்களின் ஆதரவுத்தளம் சராசரியாக மாவட்ட மட்டத்தில் 49 விகிதமாக மாத்திரம் இருந்துவர பட்டிருப்புத் தொகுதியில் அது கிட்டத்தட்ட 70 விகிதமாக இருந்து வந்திருக்கின்றமையை தரவு காட்டுகின்றது.

பட்டிருப்பு தொகுதி மக்கள் இந்த தமிழ் கட்சிகளை உயிராய் நேசிப்பதற்கு ஒரே ஒரு காரணம் அதில் போட்டியிட்டவர்கள் கிடையாது. மாறாக அந்த கட்சியே பெரிதும் செல்வாக்குச் செலுத்தியது. 1989 ஆம் ஆண்டு தேர்தலில் கிட்டத்தட்ட மொத்த வாக்களித்தவர் மத்தியில் 80 விகிதமானவர்கள் அந்தக் கட்சிக்கு வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்திருந்தனர். இவ்வாறு ஆதரவுத்தளத்தில் முன்னின்ற மக்களை புறக்கணிக்கும் செயற்பாட்டின் முதற்படியாக இத்தொகுதியில் ஏற்பட்ட இடைவெளி தேசியப்பட்டியலில் தவறவிடப்பட்ட ஆதங்கம் மக்கள் மத்தியில் இல்லாமல் இல்லை.

அத்துடன் மக்களின் விருப்புக்கு மாறான வேட்பாளர்களை அவர்களது ஆலோசனைகளை பெரிதும் கருத்தில் கொள்ளாமை, சிறந்த கல்வி கற்ற, பேச்சாற்றல், பன்மொழித்திறமை, சமுக சேவை, திட்டமிடல், அரச மற்றும் தனியார் தொழில் அனுபவம் ஆகியன இல்லாமை இந்த நிலைக்கு குறிப்பிடத்தக்க காரணங்களாக இருந்தன. அதுபோல் இன்னொரு மாற்றுக்கட்சியில் தீவிரமாக இயங்கியவர்களை இந்தக் கட்சிக்கு ஆளே கிடைக்காதது போல இணைத்துக்கொண்டு மக்களின் வெறுப்புக்களை சம்பாதித்தமை. இத்தனை குறைகளையும் வைத்துக்கொண்டு வேட்பாளர்களை தான்தோன்றித்தனமாக, ஒருதலைப் பட்சமாக தெரிவுசெய்ய எடுத்த முடிவுகளால் பல பிரதிகூலங்களை சந்திக்க நேர்ந்தது.

1. மக்கள் மாற்றுக்கட்சிக்கு மனம் மாறத் துவங்கினர்.
2. அளிக்கப்படும் வாக்குகளில் நிராகரிக்கும் வாக்குகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருந்தது.
3. வாக்களிக்கும் வாக்காளர்கள் படிப்படியாக குறைவடையத் துவங்கியது.
4. தனித்தமிழ் தொகுதியானன பட்டிருப்புக்கு கிடைத்துவந்த பா.ம. உறுப்பினரை தவறவிடப்பட்டிருந்தது.
5. மக்களுக்கு அரசியலில உள்ள ஆர்வம், நம்பிக்கை இழக்கத் துவங்கியது.

Figure-01
Source: wikipedia

மேலே உள்ள வரைபு மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்துவரும் நிராகரிக்கும் வாக்குகளின் எண்ணிக்கையினைக் காட்டுகின்றது. இது அதிகரிக்கும் போக்கில் அமைந்திருப்பது, இவர்கள் வேட்பாளர்கள் தேர்வில் உள்ள வெறுப்புக்காரமாகவே அன்றி வேறொன்றில்லை. ஏனெனில் மக்கள் நாளுக்கு நாள் கல்வி கற்கின்றவர்களின் விகிதம் அதிகரித்து வருகின்ற நிலையில் நிச்சயம் வாக்களிக்கத் தெரியாமை இதற்கு நிச்சயமாக காரணமாக இராது.

Figure -02

Source: wikipedia

மேலுள்ள வரைபில் இன்னும் ஒரு தெளிவுறுத்தலை சொல்லலாம். இதில் ஒட்டு மொத்த மாவட்டத்தில் பெற்றுவந்த மொத்த வாக்கு விகிதத்திலும் அதிகமாகவே பட்டிருப்புத் தொகுதி மக்கள் அளித்து வந்துள்ளனர் என்பதனை மருண் கலர் கோடு மூலம் காட்டப்பட்டுள்ளது. 

இந்த இழப்பீடுகளில் இருந்து மீளுவதற்கான பரிந்துரைகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் மக்களின் ஒற்றைத் தெரிவாக இருந்த நிலை மலையேறி விட்டதனையே மேலுள்ள ஆதார அறிக்கை காட்டி நிற்கின்றது.

காரணம் மக்களின் குரல்களுக்கு மதிப்புக் கொடுத்து அவர்களின் வேண்டுதலை நிறைவேற்றத் பின்னின்றமை என்பதுடன், காலத்தின் ஓட்டத்தில் தேவைகள் மாற்றமடையத் துவங்கியுள்ளது. இன்றய உலகில், போராட்ட வரலாறு, உரிமை போன்ற தேவைகளையுடைவர்கள் குறைவடைந்து 30 வீதத்துக்கு மேல் இவற்றில் நாட்டமற்ற இளைஞர்கள் வாக்களிக்கும் படையில் அதிகமாயுள்ளனர். 

ஆகவே மட்டக்களப்பினைப் பொறுத்தவரை பழைய பல்லவியைப் பாடி மக்களிடம் வாக்குச் சேகரிக்காமல் புதிய பாணியில் அவற்றை அணுக வேண்டும். அது இன்றய தேவைகளை முன்னுரிமைப்படுத்தியதாக அமையவேண்டும்.

மக்களின் ஆலோசனையுடன், மாற்றுக் கட்சிகளை இணைத்துக்கொண்டு ஒன்றாக  பிரிவினைக்கப்பால், மக்கள் விரும்பும் சேவைசெய்யக்கூடிய வேட்பாளர்களை பொதுவாக நிறுத்தி எமது வெற்றியினை நிச்சயப்படுத்த வேண்டும்.

இளைஞர்கள் தாமாக வந்து கட்சியில் சேரும் அளவுக்கு அவர்களைக் கவர்ந்திழுக்கும் உறுப்பினர்களோ, கட்சி ஆதரவாளர்களோ சொல்லக் கூடிய அளவில் இல்லை என்பதனால் புதியவர்களை கட்சி தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். அவர்களாக வந்து சேருவார்களென சாட்டுச் சொல்லி காத்திருப்பது அபாயமானது.

வேட்பாளரின் தகுதி எல்லா வகையிலும் பரீட்சிக்கப்படவேண்டும். அதற்கு மக்களின் ஆலோசனை அவசியமானது. அதற்கு வெறுமனே கோயில் நடாத்துபவர்களையும் விளையாட்டுக் களகங்களையும் நம்பி செயற்படுவது பெரிய தவறாகும்.

வேட்பாளர்களை தத்தமது திட்டத்துடன் கொண்டுவருமாறு அழைத்து, அவர்களின் எதிர்கால நடவடிக்கை பற்றி மக்கள் பிரதிநிதிகள், கட்சி அங்கத்தவர்கள் முன்னிலையில் பிரசன் பண்ண பணித்து அவர்களுடைய ஆழுமை, தலைமைத்துவம், மக்களுடன் மேற்கொண்டு வந்த சேவைகள் ஆகியவற்றை ஆதரத்துடன் பரிசீலித்து, பொதுவாக அதற்குள் இருந்து வேட்பாளர் பட்டியல் தெரிவு செய்யப்பட்டு, ஓரிரு வாரங்கள் பொதுமக்களின் பார்வைக்கு விடவேண்டும். 

இப்போன்ற ஜனநாயகப் பண்புக்கு எப்போது ஒரு கட்சி மதிப்பளிக்கின்றதோ அப்போது தான் அது இழந்து வந்த வாக்கு வங்கியை பலப்படுத்த முடியும் என்பதே எனது பொதுவான அவிப்பிராயமாகும்.

1 comments:

sarva said...

700 கோடி ரூபாய் செலவினை 225 பேருக்கும் பிரித்துப் பார்ப்போமானால் ஒருவருக்கான செலவு Rs.3.11 கோடி ரூபாய்கள் இந்த தேர்தலுக்காக பொதுமக்களின் வரிப்பணத்தில் செலவிடுகின்றோம். இதையும் மக்கள் மறந்து அவர்களிடம் சென்று மண்டியிட்டு, கைகட்டி நிற்பதனைப் பார்பதற்கு வெட்கமாக இருக்கின்றது.





சரியான விளக்கத்தோடு தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். மக்கள் பலரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு விடயம் இந்த ஜனாதிபதி, பாராளுமன்ற உறுப்பினர்கள் பொறுப்புக் கூறியே வேண்டும் இல்லையேல் மக்கள் தங்கள் விசனங்களை இவர்களுக்குக் காட்டுவதோடு புதிய ஆண்டில் ஒரு உண்மையான் ஒரு குடிமகனை தலைவனாக நிறுத்த வேண்டும். இந்தக் கட்டுரையின் விளக்கம் காலத்திற்கும் புத்தாண்டிற்கும் பொருத்தமானது நன்றி ஆசிரியரே. சரியான விளக்கம்.

Post a Comment