'அடிப்படை தேவை அணுகுமுறைக்கான செலவு' என அறியப்படும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிமுறையைப் 'பயன்படுத்தி, தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிவரவியல் திணைக்களம்- DCS நாட்டில் ஒவ்வொரு மாதத்திற்கும் உத்தியோக பூர்வ வறுமைக் கோட்டை கணக்கிடுகிறது.
அதன்படி, தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிவரவியல் திணைக்களம் அதிகாரபூர்வ வறுமை புள்ளிவிவரங்களை (the Official Poverty Line (OPL) ) வெளியிடுகிறது, இது வறுமையில் வாழும் மக்களின் எண்ணிக்கை, உத்தியோக பூர்வ வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களின் சதவீதம், வறுமையின் ஆழம் மற்றும் தீவிரம், வறுமைப் பற்றாக்குறை, மற்றும் எப்படி வறுமை, மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் வியாபித்துக் காணப்படுகின்றது என்பனவற்றை தெழிவாகக் கூறவல்லது.
மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிவரவியல் திணைக்களம் இந்த கணக்கெடுப்பை நடத்தினாலும், இந்த ஆண்டு அது செய்யப்படுவதில்லை.
இதன் விளைவாக, நாட்டின் மோசமான நிலையைப் புரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. 2021 இல் ஏற்பட்ட பொருளாதார மீட்சிக்கான தகவல்கள் இருந்தபோதிலும் அதன் நெருக்கடிக்கு முந்தைய ஆண்டுகளில் இருந்து வறுமை குறையவில்லை என்று உலக வங்கி வாதிடுவதனை கருத்தில் கொள்ளவேண்டும்.
அவர்களின் கணக்கீடுகளின்படி, தொடர்ச்சியான நிதி நெருக்கடி 2022 இல் வறுமையை 25.6 வீதமாக உயர்த்தக்கூடும், அதாவது 2021 மற்றும் 2022 க்கு இடையில் 2.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஏழைகளாகி, நாட்டின் வறுமையை 2009 ஆம் ஆண்டின் நிலைக்குத் தள்ளுவார்கள் என அச்சம் தெரிவிக்கப்படுகின்றது.
நிதியமைச்சரால் முன்மொழியப்பட்ட இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நேரடி பணப் பரிமாற்றம் குறித்து அண்மையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தற்போதைய பொருளாதார சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்டுள்ள கிட்டத்தட்ட 3.2 மில்லியன் மக்களுக்கு அவசர உதவி வழங்குவது இதில் அடங்கும் என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
இந்த வறுமையை குறைக்கப் பல திட்டங்கள் கொண்வந்தாலும், அவற்றுக்கெல்லாம் அரசியல் சாயம் பூசப்பட்டிருப்பது அனைவரும் அறிந்ததே. ஆந்த வகையில், ஏறக்குறைய 1.7 மில்லியன் சமுர்த்தி பெறும் குடும்பங்களுக்கு, மாதாந்த சமுர்த்தி உதவித்தொகை ரூ. 5,000 முதல் ரூ. 7,500 பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், சமுர்த்தி சலுகைகளுக்காக காத்திருப்போர் பட்டியலில் இருந்த 726,000 குடும்பங்களுக்கு தற்காலிக உதவியாக ரூ. மாதம் 5,000 உம் கொடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு அப்பால் மிக நலிவற்ற முதியோர், மாற்றுத்திறனாளிகள், சிறுநீரக நோயாளிகள் ஆகியோருக்கு வழங்கப்படும் உதவித் தொகை ரூ. 5,000 முதல் ரூ. 7,500 ஆக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவை குறிப்பாக குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் தேவைகளில் கவனம் செலுத்த வேண்டும். தற்போதைய பணவீக்கத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளும்போது இந்த வகையான சிறிய பண உதவித்தொகை; அவர்களின் குறைந்தபட்ச செலவினத் தேவையில் 9 வீதம் மட்டுமே ஆகும், எனவே, மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச தேவைகளை பூர்த்தி செய்வதில் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.
எனவே இன்று இந்த நாட்டின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. குறிப்பாக், குறிப்பிட்ட நகர்ப்புறங்களில் இது பெருகியுள்ளது, காரணம் உணவுப் பொருட்களின் விலை உயர்வு, வேலை இழப்புகள், உரத் தட்டுப்பாடு மற்றும் பணம் அனுப்புவதில் சரிவு ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகள், நிரந்தரத் தொழில் புரியும் அங்கத்தவர்களைக் கொண்ட குடும்பங்களை விட ஏனைய குடும்பங்களை வெகுவாகப் பாதித்துள்ளது.
இந்த நாட்டினுடைய அண்மைய வரி கட்டமைப்பு மாற்றங்களின் விளைவாக இந்த சிக்கல் இன்னும் மோசமாகிவிட்டது - அதிக நேரடி மற்றும் மறைமுக வரிகள் இந்த குடும்பங்களின் செலவழிப்பு வீதத்தினை நுகர் திறனை பாதித்துள்ளது. அனைத்து விளிம்புநிலைக் குடும்பங்களும் கடுமையான துன்பங்களைச் சகித்துக்கொண்டுள்ளன என்பது தெளிவாகிறது. உதாரணமாக, இந்தப் பிரச்சினை நேரடியாக மூன்று மில்லியனுக்கும் அதிகமான மீன்பிடி குடும்பங்களையும், ஒரு மில்லியனுக்கும் அதிகமான தோட்டத் துறை குடும்பங்களையும், நாளாந்த சம்பளத்திற்காக வேலை செய்யும் சுமார் 300,000 மக்களையும் நேரடியாகப் பாதிக்கிறது.
இந்த நிலையில் நகர்ப்புறங்களில் வாழும் நடுத்தர மற்றும் சேரிப்புற மக்களிடையே விலையதிகரிப்பினால் ஏற்படும் இந்த நெருக்கடியினை குறிப்பாக 20 வீதமான சேரிப்புற மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர். இந்த குழு ஒன்றுக்கும் முடியாத நிலையில் இறுதியில் வன்முறையை நாடலாம் மற்றும் நெறிமுறையற்ற அல்லது சட்டவிரோதமான வாழ்வாதாரத்திற்கு மாறலாம் என்ற அச்ச் உணரப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. இதனை ஒரு துரதிஷட்வசமான விளைவாக, அதிகரித்து வரும் பாலியல் தொழிலாளர்களின் எண்ணிக்கையில் காணலாம்.
நாட்டில் நிலவும் ஸ்திரமின்மையால் அறிமுகப்படுத்தப்படும் பல கொள்கைகள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படாமல் தடைபட்டுள்ளன. நிர்வாகத்தில் மேம்பாடு மற்றும் ஊழலை ஒழித்தல் ஆகிய இரண்டு முக்கியமான முயற்சிகள் தற்போது அதிக கவனம் செலுத்தப்படவில்லை. இதன் விளைவாக, விரைவில் ஒரு திருப்புமுனையை அடையாமல் நிலமை தொடர்ந்து மோசமாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment