தன்னம்பிக்கை, பண்பு, ஆற்றல், ஒழுக்கம், ஊக்கம், விடாமுயற்சி, வாழ்க்கை, பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு சிறந்த முறையில் கற்பித்து, ஒரு உண்மையான வழிகாட்டியாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள். அப்படிபட்ட ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில், செப்டம்பர் 05 நாளை 'ஆசிரியர் தினமாக' கொண்டாடுகிறோம். வாழ்க்கை என்ற பாடத்தைக் கற்றுத்தந்து, மாணவர்களுக்கு உண்மையான வழிகாட்டியாக விளங்கி, ஒவ்வொரு மாணவர்களையும், சிறந்த மனிதர்களாக்குவது ஆசிரியர்கள் தான். அத்தகைய எழுச்சிமிக்க மாணவர்களை ஒரு சிறந்த ஆசிரியரால் தான் உருவாக்க முடியும். சிறந்த படைப்பாளிகள் மற்றும் உன்னத மனிதர்களாகத் திகழும் ஆசிரியர்களைப் போற்றும் ஆசிரியர் திருநாளை இந்த நாளில் கொண்டாடுகின்றனர்.
எவ்வாறு ஆசிரியர் பணியை நாம் வரையறுக்கலாம்?
ஆசிரியர் பணி என்பது வெறும் கல்வியை மட்டும் போதிப்பது இல்லை; ஒழுக்கம் பண்பு, ஆன்மீகம், பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு எடுத்துக்கூறி, அவர்களை சிறந்த மனிதர்களாக்கும் உன்னதப் பணியாகும். அப்படிப்பட்ட தெய்வீகமானப் பணியை மாணவர்களுக்கு அளிக்க, தன்னலமற்ற, தியாக மனப்பான்மை கொண்டவராக இருந்தால் மட்டும் போதாது; கற்பிக்கும் தொழிலை நேசிப்பவராகவும் இருக்க வேண்டும். அவர்கள் தான் உண்மையான ஆசிரியர்கள்.
எவ்வாறு கொண்டாடுகின்றார்கள்?
உலகில் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்பட்டு வரும் 'ஆசிரியர் தின' நன்னாளில் பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளில் பல நடனப்போட்டி, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி எனப் பல்வேறு போட்டிகளை நடத்தி, மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்குவார்கள். மேலும், சிறந்த ஆசிரியர்களை கௌரவிக்கும் வண்ணமாக அவர்களுக்கு விருதுகள் வழங்கி அரசு அவர்களைப் பெருமைப்படுத்தும். மாணவர்களும், அந்நாளில் தங்களுக்குப் பிடித்த ஆசிரியர்களுக்கு அன்பளிப்புகளை வழங்கி, வாழ்த்துக்கள் தெரிவிப்பர்.
ஒரு மனிதனை அவனுக்கே அடையாளம் காட்டுபவராக இருப்பவர் தான் ஆசிரியர். மேலும், மாணவ சமூகத்திற்கு தேவையான ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி என அனைத்தையும் அவர்களுக்கு கற்றுத்தந்து, அவனை நல்லவனாக, பண்புள்ளவனாக, சிறந்தவனாக, அறிஞராக, மேதையாக உயர்த்தும் உன்னத பணி ஆசிரியர் பணி என்பதை யாராலும் மறுக்க இயலாது.
நாம் எவ்வாறு இதை கொண்டாட முயல்கின்றோம்!
ஆசியர் தினம் இன்று எமது பிரதேசங்களில் அதிகமாக பெரியளவில் விமர்சையாக நடைபெறுவதைப் பார்க்கின்றோம். அங்கே இதற்கென பிரத்தியேக கொமிட்டி அமைத்து, மாணவர்களிடம் இருந்து பணம் அறவிட்டு, மாலைகளைக் மற்றும் பரிசிப்பொருட்களை கொண்டுவரச் சொல்லி இவற்றை கொண்டாட முயல்கின்றமை நாம் அதிகம் கேள்விப்பட்டமைதான்.
மாணவர்கள் அனைவரும் பரிசுப் பொருட்களைக் கொடுத்தோ, மாலைகளை இட்டோ கொண்டாடும் நிலையில் இருப்பதில்லை. ஒரு குடும்பத்தில் நான்கு ஐந்து பிள்ளைகள் பாடசாலைக்கு செல்லும் நிலையில் இருந்தால் எவ்வாறு அவர்கள் அனைவரினாலும் பங்களிப்பு செய்ய முடியும்?.
பண வாசனை மற்றும் கல்வி வாசனை இல்லாத எத்தனையோ ஏழை வீட்டுக் குழந்தைகள் புத்தகச் சுமையுடன் மனச்சுமையினையும் சேர்த்து சுமந்து வருகின்றனர் அவர்களது சூழ்நிலை அப்படி. அவர்களது மனச்சுமையினை போக்கும் மருந்தாக ஆசிரியர்கள் இருக்கவேண்டும்.
உண்மையில் பல மாணவர்கள், மனசார வாழ்த்தி வணங்குவதற்கு ஆசைப்பட்டாலும் வசதிபடைத்த பிள்ளைகள் பரிசில்களைக் கொடுத்து ஆசிர்வாதத்தினைப் பெறுகின்றபோது ஏனையவர்கள் தயங்கி கவலையடைந்து ஆசிரியரை அணுகமுடியாமல் மனம்வெந்து போகும் நிலையினை உருவாக்கிவிடும் அல்லவா.
சுற்றுநிருபத்தின் படி பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்களிடம் இருந்து விலையுயர்ந்த பரிசிப் பொருட்கள் எதனையும் பெறக்கூடாது என்றும் அதற்க்காக அவர்களை பணிக்கக்கூடதென்றும் உள்ளமை குறிப்பிடத்தக்கது. நிற்க்க, இந்த விழாவினை உண்மையில் ப.மா.சங்கம், பெற்றார் ஆசிரியர் சங்கம் மற்றும் அதிபர் ஊடாக ஒழுங்கமைத்து. அங்கே இந்த ஆசிரியப் பணியை சிறப்பாகச் செய்துவரும் ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டு இந்த ஒட்டு மொத்த மக்களாலும் மாணவர்களாலும் பாராட்டப்பட்டு, இவர்களால் உருவாக்கப்பட்ட மாணவர்களின் திறமைகளை வெளிக்காட்டும் வண்ணம் மேடைகளில் அவற்றை அளிக்கை செய்து அதன் மூலம் செய்கின்ற கௌரவமே என்னைப் பொறுத்தளவில் மிகப்பெரும் கௌரவமாக இருக்கும்.
ஆகவே தன்னுடைய வாழ்வில் ஆசிரியர் பணியை புனிதமாகக் கருதி, பிற ஆசிரியர்களுக்கு முன்மாதிரியாக, ஒரு நல்ல ஆசிரியரால் எவ்வளவு தூரம் பயன்பட முடியும் என்பதை தமது இறுதி காலம் வரை வாழ்ந்து காட்டி, ஒரு மாபெரும் தியாகியாக உலகிற்குத் தன்னை வெளிப்படுத்தும் அனைத்து ஆசியப் பெருந்தகைகளும் பாராட்டப் படவேண்டியவர்கள்!
ஆசிரியர்கள் கற்றுக்கொடுப்பவர்கள எனச் சொல்லப்படுவது ஏன்? தாங்கள் கற்று மாணவர்களுக்கு அவற்றைக் கொடுக்கவேண்டும் என்பதனால்தான். ஆனால் இன்று கலாநிதிகள் என்றபேரில் பல கல்லா நிதிகள் இருப்பதையே எம்மத்தியில் காண்கின்றோம். அவர்களால் எவ்வாறு அதைச் செய்ய முடியும்!
If you are not update then you are outdated என்பது முற்றிலும் ஆசிரியர்களுக்குப் பொருந்தும். நிறையப் பட்டங்களைப் பெற்று தங்களது பெயரை அலங்கரிப்பவரை விட நல்ல புத்தகங்களைப் படித்து தமது மனதை அலங்கரிக்கும் ஆசான் மிகச்சிறந்தவர்கள். மதிப்பெண்களை மாத்திரம் உருவாக்குகின்ற ஒரு கூட்டத்தின் பின் ஒடுகின்றவேலை ஒரு ஆசிரியரின் வேலை என தயவு செய்து நினைத்துவிடாதீர்கள் சிந்திக்கத் தெரிந்த தலைமுறையை உருவாக்குங்கள்.
0 comments:
Post a Comment