ADS 468x60

02 November 2021

உரத்தட்டுப்பாடு பட்டினிப் பேரழிவுக்கு வழிவகுக்குமா?

இன்று நாடு பூராவும் விவசாயிகள் தங்கள் விவசாய நடவடிக்கைக்கான இரசாயன உரம் அல்லது சேதன உரங்களைக் அரசிடம் வழங்குமாறு கோரி வருகின்றனர். மறுபுறத்தில் அரசாங்கத் தலைவர்கள், விவசாயிகளுக்குத் தேவையானதை வழங்காமல், இரசாயன உரங்கள் சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று திரும்பத் திரும்ப கூறி வருகின்றனர். உண்மையில் எமது விவசாயிகள் இரசாயன உரத்தைக் கோருவதில் ஒருபோதும் பிடிவாதமாக இருந்ததில்லை. அவர்கள் விரும்புவது ஏதோ தமது விவசாயத்துக்கான உரம் மாத்திரமே. சேதன உரங்களைப் பயன்படுத்துவதை அரசாங்கம் வலியுறுத்தினால் அதை தடையின்றி வழங்கவேண்டும் அது தற்போதைய விவசாயிகளின் போராட்டங்களுக்கு தீர்வாக அமைந்துவிடும்.

இரசாயன உரம் மற்றும் ஏனைய விவசாய இரசாயனங்கள் இறக்குமதிக்கு 2021 மே மாதம் 6 ஆம் திகதி வர்த்தமானி மூலம் தடை விதிக்கப்பட்டது. பின்னர் விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே, 2021 ஒக்டோபர் மாத தொடக்கத்தில் ஆரம்பிக்கும் மகா பருவத்திற்கு போதியளவு சேதன உரங்களை அரசாங்கம் வழங்கும் என உறுதியாக தெரிவித்திருந்தார். எவ்வாறாயினும், கடந்த மாதம் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 100,000 லிட்டர் திரவ உரங்களைத் தவிர வேறு எந்த உரமும் - இரசாயன அல்லது சேதன உரங்கள் - அவர்களுக்கு வழங்கப்படவில்லை என்பதை அரசாங்கத்தின் தலைவர்கள் ஒப்புக் கொள்ள வேண்டும்.

விவசாய இரசாயனங்கள் மீதான திடீர்த் தடை, முந்தைய சிறுபோகப் பருவத்தின் விளைச்சலினையும் பாதித்தது. தற்போது பெரும்போகப் பருவகாலம் ஆரம்பமாகியுள்ள போதிலும், சேதன உரம் வழங்குவதாக அளித்த வாக்குறுதியை அமைச்சர் நிறைவேற்றவில்லை. உரத் தட்டுப்பாடு காரணமாக விவசாயிகள் தங்கள் விளைநிலங்களை விட்டு ஒதுங்கினாலோ அல்லது உரமில்லா பயிரிடும் முயற்சியில் ஈடுபடுவதாலோ, அதன் விளைவு சில மாதங்களில் நாட்டில் பேரழிவு தரும் உணவுப் பற்றாக்குறையை ஏற்படுத்தும். ஏற்கனவே அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் தாறுமாறாக உயர்ந்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

உண்மையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் நாட்டின் விவசாயத்தை இரசாயன உரத்தில் இருந்து சேதன உரத்தை அடிப்படையாகக் கொண்டதாக மாற்றும் இலக்கு இருந்த போதிலும், இந்த ஆண்டின் ஆரம்ப மாதங்களில் இரசாயன உர இறக்குமதியை தடை செய்ய அரசாங்கம் அவசரப்படவில்லை. ஆனால், நிலவும் அந்நியச் செலாவணி நெருக்கடியால் ஏப்ரலில் அவசர முடிவை எடுத்தது. எவ்வாறாயினும், இந்த நடவடிக்கை மிகவும் அவசரமானது மற்றும் குறுகிய பார்வை கொண்டது, ஏனெனில் தடையானது தேவையின் அடிப்படையில் அதிக உணவு இறக்குமதிக்கு வழிவகுத்தால், அது மிகவும் தீவிரமான அந்நியச் செலாவணி நெருக்கடியை விளைவிக்கும்..

இப்போது, நிலைமையைக் கையாளுவதில் அதிகாரிகள் புதிய சிக்கல்களை உருவாக்கியுள்ளனர். உள்ளூர் ஆய்வகத்தில் மாதிரிகளை ஆய்வு செய்வதற்கு முன், அவர்கள் சீன நிறுவனத்திடமிருந்து சேதன உரத்தை இறக்குமதி செய்வதற்கான வேலையைத் தொடங்கியது தெரிகிறது. மாதிரிகளில் நடத்தப்பட்ட இரண்டு சோதனைகளில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இருப்பது கண்டறியப்பட்டது, ஆனால் சீன நிறுவனம் சோதனை முடிவுகளை நிராகரித்தது. இப்போது 'சுயாதீனமான' ஆய்வகத்தில் மூன்றாம் தரப்பினரால் மாதிரிகளை பரிசோதிக்க விரும்புகிறது, 

உரம் உள்ளிட்ட விவசாய இரசாயனங்கள் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதுடன் உயிரியல் பன்முகத்தன்மை மற்றும் மனித ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்ற வாதம் இலங்கையிலும் ஓரளவு நிரூபிக்கப்பட்டுள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் விவசாய இரசாயனப் பயன்பாட்டிற்குப் பிறகு பல வகையான உயிரினங்கள் நமது இயற்கைச் சூழலில் இருந்து மறைந்துவிட்டன. வடமத்திய மாகாணத்தில் பரவலாக காணப்படுகின்ற சிறுநீரக நோய்கள் விவசாய இரசாயன பாவனையினால் ஏற்படுகின்றன. அதுபோக, நமது குளங்கள், ஆறுகள் மற்றும் நெல் வயல்களில் இருந்து பல உயிரினங்கள் காணாமல் போவதை புறக்கணிக்க முடியாது மற்றும் அவை ஆபத்து சமிக்ஞையாகவும் இருக்கலாம்.

ஆயினும்கூட, இரசாயன உரங்களின் பயன்பாடு நீண்ட காலமாக இருந்து வருகிறது, இயந்திரங்கள், பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள் மற்றும் விதைகள் போன்ற பல நமது நாட்டில் இருந்து விலகி படிப்படியாக வெளிநாடுகளில் உருவாக்கப்பட்டு, நாட்டின் முழு விவசாய கலாச்சாரத்தையும் மாற்றியமைத்து வருகின்றது. இறக்குமதி செய்யப்பட்ட விதைகள் மற்றும் உள்ளூர் சேதன உரங்களின் ஒவ்வாமை குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. விவசாய சமூகத்தின் வாழ்க்கை முறை 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைப் போல எளிமையானது அல்ல. இன்று கிராமப்புறங்களில் அதிக வாகனங்களையும், நவீன வசதிகளுடன் கூடிய புதிய வீடுகளையும் பார்க்கிறோம். இது அவர்களின் நல்ல முன்னேற்றத்துக்கான குறிகாட்டியாகப் பார்க்கப்படுகின்றதல்லவா. ஒரு பல்லு உடைந்தால், முழு அமைப்பும் சரிந்துவிடும். அதபோல, இன்று சிறிய அளவில் ஏற்பட்டிருக்கும் அரசின் மீதான வெறுப்பு நாடு முழுவதும் விவசாயிகள் கிளர்ந்தெழுவதற்கான அச்சத்தின் பின்னணியில் உள்ள காரணமாகப் பார்க்கலாம்.

இயற்கை விவசாயத்திற்கு மாறத் திட்டமிடும் அதிகாரிகள் இந்த உண்மையைக் கண்டுகொள்ளாமல் பாராமுகமாக இருக்கக் கூடாது. பயிர்கள் மற்றும் பிரதேசங்களின் அடிப்படையில் பல முன்னோடித் திட்டங்களுடன் இது படிப்படியான செயல்முறையாக இருக்க வேண்டும். ஆனால் தற்போதைய சூழ்நிலையானது உடனடி அசேதனக் கட்டுப்பாட்டு முயற்சியைக் கோருவது எதிர்காலத்தில் உணவு நெருக்கடியைத் தவிர்க்கும்.


0 comments:

Post a Comment