ADS 468x60

03 June 2019

கிழக்கின் தாகம்.


நாமும் ஒரு சிறுபான்மையினர், இதையெல்லாம்விடவும் எத்தனையோ கெடுபிடிகளை அனுபவித்து இழந்து இறந்து இன்னும் ஒரு கொடுமையின் நினைவில் வாழ்ந்து வருகின்றோம். இதனால் பல்லாயிரக்கணக்கான தமிழ் அரசியல் கைதிகள் நீதியின்றி சிறையிலும், காணாமற்போனோர் பெற்றோர் கண்ணீரிலும், நிலமும், நீரும் பார்த்திருக்க பறிபோய்க்கொண்டிருக்கும் ஆபத்தினைவிட வேறெதுவும் முன்னுரிமையான பிரச்சனையாக இருக்கின்றதா?

எமக்கு? இவற்றை வேண்டி உண்ணாவிரதம் யாராவது இருந்த சரித்திரம் இருக்கிறதா தெரியவில்லை ஓர் இருவரைத் தவிர.

இன்று முஸ்லிம் அமைச்சர்களை பதவி விலக கூறி ஊர்வலம் போய், ஆர்ப்பாட்டம் செய்து, உபவாசம் இருக்கும் பௌத்த துறவிகள் நாளை மீண்டும் ஒரு முறை, தமிழ் அரசியல்வாதிகளுக்கு எதிராகவும், பிறகு தமிழ்-சிங்கள கத்தோலிக்க  அரசியல்வாதிகளுக்கு எதிராகவும், பின்னர் தாம் விரும்பாத சிங்கள பௌத்த அரசியல்வாதிகளுக்கு எதிராகவும், அவர்களை பதவி விலக்க கூறி  சிங்கள மக்களை தூண்டி விட்டு குரல் எழுப்ப மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்!.

ஆகவே முஸ்லிம் அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள் மீது புகார்களும், சாட்சியங்களும் இருக்குமானால், நடவடிக்கை எடுங்கள். இல்லாவிட்டால் எந்த ஒரு சாட்சியமும் இல்லை என அறிவியுங்கள். விஷயம் முடிஞ்சி. 

இதுதான் ஜனநாயகம் என்ற பெயரை முன்னால் கொண்ட நாட்டுக்கு அழகு. இது அரசாங்கத்தின் வேலை. ஆனால் இவர்கள் அதை செய்யவில்லை என்ற கோபத்தில் சட்டத்தை சாமானியர்களும், சமயத்தலைவர்களும் கையில் எடுத்திருக்கின்றனர். அதுதான் கவலை.

ஆகவே இன்று நாட்டில் இருக்கும் நிலமையை நினைத்து மிகப் பயங்கரமாக இருக்கின்றது. எதுவாக இருப்பினும் புரிந்துணர்வுடனும், புத்திசாதுரியத்துடனும் களமிறங்க வேண்டும்.

ஆக உரிமையுடன் எமது மக்களை வலுப்படுத்துகின்ற நடவடிக்கைகளை செய்யக்கூடிய, ஆற்றல்மிக்க தலைவர்கள் எம்மிடம் உள்ளனரா! என்பது கேள்வி. 

ஏனைய அரசியல்வாதிகள்போல் எமது அரசியல்வாதிகளை நாங்கள் எதிர்பார்க்கமுடியாது. இவர்கள் அரச, அரச சார்பற்ற மற்றும் தனியார் ஸ்தாபன அறிவுடன் கூடிய நல்ல பொருத்தமான கல்வி கேள்விகளில் சிறந்து எமது தேவைகள், பிரச்சினைகளை சரளமாக பன்மொழி பேசும் எமது நாட்டில் அவற்றை ஒப்புவிக்கும் சீத்துமம் கொண்டவர்களாக தொடர்பாடல் அறிவுமிக்கவர்களாக இருக்க வேண்டும். 

அதுபோல் மத்தியில் அரசாங்கத்துடன் பாராளுமன்றில் அதற்கு அப்பால் நடாத்தப்படும் விடயங்களை தெழிவாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் வாண்மை இருக்கவேண்டும். இவைகள் இல்லாமைதான் எம்மத்தியில் எமது பிரதிநிதிகளின்; பெரிய பிரச்சினை.

இதனால் தங்களை கெட்டிக்காரர்கள் எனக் காட்டிக்கொள்ள முஸ்லிம்களுக்கு எதிராகவும், சிங்களவர்களுக்கு எதிராகவும், தமிழருக்குள்ளும் வேறு கட்சிக்காரர்களுக்கு எதிராகவும் சண்டைபோடுவதையே அரசியல் என காட்டி, மக்களை சலவை செய்யும் போக்கணம் இல்லாதவர்களை தெரிவு செய்த எம்மை நாமே செருப்பால் அடிக்கும் நிலையில் கொண்டு நிறுத்தி விடுகின்றனர்.

ஒன்றை உருவாக்கத்தான் முடியவில்லை என்றாலும், உருவாக்கியதை பாதுகாக்கவும் முடியாத முதுகெலும்பற்றவர்கள் எங்கள் தெரிவுகள். 

எத்தனை காலம்தான் மண்டூர் ஓட்டுப்பக்ரி பற்றியும் வாழைச்சேனை கடதாசி ஆலை பற்றியும் வரலாறு பேசுவீர்கள்! உங்களால் ஒரு நெசவு நிலையத்தினையாவது உருவாக்க முடிந்ததா? இல்லை இருப்பதனையாவது பாதுகாக்க முடிந்ததா?.

இல்லைதானே, பாவம் குழந்தைகள் படிக்க காசு, குமரிகள் முடிக்க காசு என பொருளாதார போக்கத்து கூலித்தொழிலாழியாக குவைத்துக்கும் கட்டாருக்கும் குடிபெயரும் பெண்கள் அதிகம் உள்ள மாவட்டம் மட்டக்களப்பு. அதனால் குடும்பத்தினை பராமரிக்க முடியாமல் சில்லாங்கொட்டை சிதறுண்டாப்போல திரும்பிவரும்போது மிச்சமாக காயமுள்ள தேகமும், காய்ந்துபோன உடம்பும், கட்விழ்ந்த குடும்பமும்தான் மிச்சமாய் இருக்கும். இவர்களை திறனுள்ளவர்களாக்கி உள்நாட்டில் உற்சாகத்துடன் உழைக்க  ஒரு சிறிய முயற்சியேனும் எடுக்கத் தெரியாதவர்களையா நீங்கள் வாக்களித்து வழியனுப்பினீர்கள்?

வருடா வருடம் சாதாரணதரம் மற்றும் உயர்தரம் படித்து இடைவிலகி பல்கலைக்கழகம் செல்லமுடியாத ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்துக்கு எதை வைத்திருக்கின்றீர்கள்?. இவர்களை வெறுமனே ஓட்டோ ஓட்டுணர்களாயும், கூலியாட்களாகவும், தொழிலற்றவர்களாகவும் கொண்டுபோய் எமது இளம் இரத்தங்களை உற்பத்தியில்லாத செல்லாக் காசாக்கியுள்ளீர்கள். 

இதனால் எமது குடித்தொகையில் குடித்தொகையைக் கூட்டியுள்ளீர்கள், வெட்டுக் குத்தென கோட்டுக் குற்றவாளிகளை உருவாக்கியுள்ளீர்கள். ஒரு நாட்டின் முதுகெலும்பையே முறித்துள்ளீர்கள். உங்களுக்கு இவை எது நடந்தாலும் ஒன்றுமில்லை. யார் அதிகம் தடைவை பாராளுமன்றத்தில் தெரிவாகிப் போகின்றோம், யார் அதிகம் கௌரவ அதிதிகளாக அழைக்கப்படுகின்றோம் என தானுண்டு தன்வேலையுண்டு என ஐந்தாண்டுளை ஐந்து சல்லிக்கும் பெறுமதி இல்லாது ஓட்டும் உங்களைச் செல்லிக் குற்றமில்லை.

விவசாயிகள்தான் மட்டக்களப்பின் ஜீவநாடி. அன்று மிகை விளைச்சலை மட்டக்களப்பு விவசாயப் பெருங்குடிகள் பர்மாவுக்கும் இதர நாடுகளுக்கும் ஏற்றி பண்டமாற்றில் ஈடுபட்டு பட்டும், முத்தரத்தினமும் பரிமாறும் உழைப்பாழிகளாக மேலோங்கி இருந்தனர்.

வயலும், வாய்க்காலும், குளமும் குட்டையும், ஆடும் மாடும் என நிறைந்திருந்தன தேனகத்தில். இவற்றை வைத்தே செல்வம் கணிக்கப்பட்டது. இந்தச் செல்வத்தினைப் பெருக்கவென விவசாயிகள் வேலை செய்து மகிழ்சியாக வாழ்ந்தார்கள்.

இன்று காணிகள் கைமாறிப்போனது, மேச்சல்தரைகள் கைதவற விடப்பட்டுள்ளன, மாடும் ஆடும் மாய்ந்துபோயின, சட்டத்துக்கு உட்படாத கட்டிடங்களும், குடியேற்றங்களும் கூடி இயற்கை இடங்கள் செயற்கையாக மாறியுள்ளது.

காலநிலையின் காப்பறனாக இருந்த காடுகள் காணாமற் போயுள்ளன. ஆக அந்த ஜீவநாடியில் விளையாடும்வரை கண்ணைக் கட்டிக்கொண்டா இருந்தார்கள் எமது காவலர்கள்? இல்லை கையெழுத்துப்போட்டு கைகொடுத்துதவினார்களா? ஆண்டவனுக்கே வெளிச்சம்.

மலையில் பிறந்த நதியால்
மக்கள் தாகம் தீர்ந்தது
மரத்தில் பிறந்த கனியால்
அவர் பசியும் தணிந்தது
கொடியில் பிறந்த மலரால்
எங்கும் வாசம் தவழ்ந்தது
அன்னை மடியில் பிறந்த உன்னால்
என்ன பயன் தான் விளைந்தது

ஆக இந்த நிலையில் அடுத்த பரம்பரையை ஆத்துக்குள் தள்ளியிருக்கின்றனர். விவசாயம் பண்ணிய நீர்த்தேக்கங்கள் பராமரிப்பின்றி தூர்ந்துபோயுள்ளன. இருக்கின்ற குளங்களிலும் பாய்ச்ச நீர் இல்லாது போயுள்ளது. இது நிருவாகத்தின் முகாமையை கண்காணிக்கத் தெரியாத அறிவினால் வந்த வினை. 

இத்தனை விவசாயிகளும் இன்று மழையை நம்பி மண்ணில் போட்டு விலையில்லாத விளைச்சலுக்காய் காய்ந்து கடைசியில் ஒன்றுமில்லாமல் போனதற்கு யார் காரணம்? விவசாயிகளா? இல்லை இந்த நிலைக்கு கொண்டுவர உதவிய அதிகாரிகளா? இல்லை இது திட்டமிட்ட சதியா? 

வகை தொகையின்றி கடன்பட்டு மாற்றானின் அடிமையாகும்வரை எதை நாங்கள் தெரிவு செய்த தலைவர்கள் புடுங்கிக்கொண்டிருந்தார்கள்? இவற்றை நாம் அவர்களிடம் கேட்காமல், வகைகூற வழிசெய்யாமல் விட்டுவிடுவதனாலேயே எம் ஒவ்வொருவரினதும் வாழ்க்கையில் விளையாடி இருக்கின்றனர்.

ஆக எடுப்பார் கைப்பிள்ளையாக நாதியற்று, தனது குழந்தையின் வேண்டுதலை நிறைவேற்றாத பெற்றோர்போன்று எமது பிரதிநிதிகள் இருக்கின்றதால்தான் தெருக்களில் அந்தப் பிள்ளைகள் பிச்சையெடுத்து திரிகின்றனர். படிக்கின்ற பரம்பரை குடிக்கின்ற பரம்பரையாக மாறியுள்ளது.

உழைக்கின்ற மக்கள் தங்கிப் பிழைக்கின்றவர்களாக மாற்றப்பட்டுள்ளனர். சிரிக்கின்ற மக்கள் இழந்து மரிக்கின்றவர்களாக மாறியுள்ளனர். வேலை கொடுத்த போடியார்கள் கூலி வேண்டும் வாடிவேலை செய்கின்றனர்.

இவற்றை வெல்ல நாம் வெல்லுவதற்கு ஒன்றும் தேவையில்லை. ஒற்றுமைதான் இன்று தேவை. இளைஞர்களின் வீறுகொண்ட எழுச்சி எமக்கு தேவை. இவையனைத்தும் இருந்தால் எவ்வளவோ சொய்த நமக்கு இதெல்லாம் தூசி. நாளை நிச்சயம் நமதே!

தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்
ஓர்வழி நின்று நேர்வழி சென்றால்
நாளை நமதே..

எமது தாகம் மேற்கூறிய பிரச்சினைக்கான தீர்வினை விரைந்து காண்பதே. என்னைப் பொறுத்தமட்டில் இதை ஒரு சவாலாக ஏற்று 5 வருடத்துக்குள் அனைத்தையும் நிவர்த்தி செய்ய முடியும். அல்லது இவற்றை ஆலோசனையாகக்கூட கூறி ஆற்றுப்படுத்த முடியும். ஆனால் அதற்கு பொருத்தமானவர்களா நம்மவர்கள் என்பதனை சிந்திப்போம் செயற்படுவோம்.
கிலியை விடுத்துக் கிளர்ந்தெழுவார்
இனிக்கெஞ்சும் உத்தேசமில்லை
சொந்த வலிவுடையார் இன்ப வாழ்வுடையார்
இந்த வார்த்தைக்கு மோசமில்லை

அளவு பொருத்தமானவர்கள் போட்டுக்கொள்ளலாம்

0 comments:

Post a Comment