ADS 468x60

24 June 2019

எமக்கு எது வசதி என்பதில் எது சரி என்பதனை மறந்துவிடுகின்றோம்.

சரியானவற்றையே செய்யுங்கள், உங்களால் அதிகபட்சம் செய்யக்கூடிய நல்லவற்றை வழங்குங்கள், எப்பொழுதும் பிறர் மீது அக்கறையுடன் இருங்கள். என ஒரு பெரியவர் கூறினார். நமக்கு சரியானவற்றினை செய்யக்கூடியவர்கள் தேவை. சரியான செயற்பாடுகள் மாத்திரமே நல்ல மாற்றங்களை எம்மத்தியில் ஏற்படுத்தும். கடந்த 7,000 ஆண்டுகளில் சிறிய கிராமங்கள் பேரூர்களாகவும், பேரூர்கள் நகரங்களாகவும், நகரங்கள் பெரு நகரங்களாகவும் மாறின. அவ்வாறு நிகழ்கையில், சோலைகள் அழிந்து நகரங்களாகி, நகரங்கள் நரகங்களாகிவிட்டன. எல்லாம் தத்தமது வசதி கருதியே நடக்கின்றன.

இந்த உலக வயதின் காலக்கணிப்பில், மற்ற உயிர்வகைகளை ஒப்பிட்டால், மனித இனம் தவழ்ந்திடும் மழலைதான். ஆனால், மனித இனம் அளவு கடந்த அறிவாற்றலால், மலைகளைப் பெயர்த்திடவும், நதிகளை நகர்த்திடவும், உயிர்ச் செல்களினுள் ஊடுருவி, அவைகளை உருமாற்றம் அடையச் செய்யவும் ஆற்றல் பல பெற்றுள்ளது. இதே ஆக்க அறிவு, பல தாக்கங்களைப் பாரில் உள்ள பல்லுயிரின் பாலும் பாராமுகமாகப் பரப்பிக் கொண்டே உள்ளது. இப்பூவுலகில் தாவரங்கள் இன்றேல் மனிதன் வாழ இயலாது. பறவைகள் இன்றேல் மனிதன் வாழ இயலாது. விலங்குகள் இன்றேல் மனிதன் வாழ இயலாது. ஏன், நுண்ணுயிர் வகைகள் இன்றேலும் மனிதன் வாழ இயலாது.

ஆனால் மனிதன் என்ற இனம் இவ்வுலகத்தில் இல்லாவிட்டால் மற்ற உயிர் வகைகள் நிச்சயமாக வாழ முடியும் - வெறும் வாழ்வு அல்ல, மிக மகிழ்வாக வாழ இயலும்.

இந்த மனிதன் பாத்துப் பார்த்து மரங்களை வெட்ட வசதியாக பொது இடங்களில் மரங்கள் இருக்கின்றது. வாரவனுகளும் போரவனுகளும் றோட்டுப்போட வசதியாக களிவளம்கொண்ட குளங்கள் இருக்கின்றன. மண்ணெடுக்க கடற்கரைகளும், சுள்ளானுக்கு கண்ணாக்காடுகளுளம், மழையின்போது வெள்ள நீரை வெளியேற்ற றோட்டையல்லாம் பிழப்பதும் எமக்கு வசதியாகவே இருக்கிறது.

இதைத்தான் அதிகாரிகளும், ஊர்பெரியவர்கள் எனச் சொல்லிக்கொள்பவர்களும் அங்கிகரிக்கின்றனர். இவையெல்லாம் சரிதான் என நிருபிக்க மக்களை மூளைச்சலவை செய்கின்றனர். ஆகவே லியோ டால்ஸ்டாய் கூறுவதுபோல் 'ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.' என்பது பெரிய உண்மை. 

ஊர் அபிவிருத்தி தொடங்கி பாடசாலைகள், ஆலயங்கள் மற்றும் பொதுத்தேவைகள் என எல்லா தேவைகளுக்கும் எமது அரிய வளங்கள் வகை தொகையின்றி அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதனால் இவற்றை இல்லாதொழிக்கும் பரம்பரை கூட நிம்மதியாக வாழமுடியாத நிலை ஏற்படும்.

நான் தூரம் போகவில்லை, உனது கிராமத்தினையே உதாரணத்துக்கு எடுத்துக்கொள்ள விரும்புகின்றேன். இங்கு ஒரு கிராமத்துக்கு இருக்கவேண்டிய அத்தனை வளமும் கொண்ட அழகிய கிராமம் இதுவாக இருந்தது. ஆறு, குளம், கடல், வயல்கள், மேட்டு நிலம், மரங்கள் இவற்றுக்கு மேலாக பண்பாடான மனிதவளம் என அனைத்தும் இருந்தன. இவை தவிர வேறு என்ன வேண்டும் எமக்கு?.

ஆனால் வசதியாக இருந்த வளங்களையெல்லம் சுரண்டி விட்டார்கள். எமக்கென எமது கிராமத்தில் ஒரு வயல்காணி இருக்கிறது. இதை நாங்கள் மிகவும் பெரிதாக நேசித்து வருகின்றோம். அதன் தலைமாட்டுப் பகுதி குருத்து மண்ணாலான மணல்மேடாய் இருந்தது. அதில் எங்களது அப்பா மற்றும் ஏனையவர்கள் விவசாயம் செய்து தமது வாழ்வாதாரத்தை நடாத்தி வந்தனர். அது அவ்வளவு வளமார்ந்த விவசாய மண்.

2004 இல் வந்தது பாருங்க ஒரு சுனாமி, இது கடற்கரை பிரதேசங்களை மாத்திரம் அழிக்கவில்லை கிராமங்களின் இருந்த நல்ல மனங்களையும் இல்லாதொழித்துள்ளது. அபிவிரத்தியின்பேரில் இராப்பகலாக கிட்டத்தட்ட அரைவாசிப்பகுதியைக் குடைந்து ஆயிரக்கணக்கான லோட் ரக்டர் மண் அகழப்பட்டது இதுபோல் பல சம்பவங்கள். 

அதனால் இன்றும் அந்த மண்ணெடுத்த பள்ளத்தினை நிரப்ப வேறு மண்ணில்லாத நிலையில் உள்ளோம். அது மாத்திரமா கடற்கரையை குளமாக மாற்றி வைத்திருக்கின்றனர். தேவைப்படும்போதெல்லாம் கஷ்ட்டப்பட்டு யாரோ உருவாக்கிய மரங்களையெல்லாம் கண்ட கண்ட மாதிரி பொது வேலையின் பேரில் முன்னின்று அழித்தனர். இதை யாரும் தட்டிக்கூடக் கேட்கவில்லை.

கிட்டத்தட்ட 300 ஆண்டுகளுக்கு மேலாக பழமைவாய்ந்த மதுரை மரங்கள் எமது படுவான் எல்லையை பாதுகாப்பதுடன் குளிர்சியையும் குளக்கட்டுகளுக்கு பிடிமானத்தினையும் கொடுத்து வருகின்றது. இவை நாம் பெற்ற வரப்பிரசாதங்கள் என நினைத்து மகிழ்வதுண்டு. ஆனால் இன்று ஒரு சிலரின் தனிப்பட்ட தேவைக்காக கந்துகள் களையப்பட்டு காட்டுத்தீயென அடியை எரித்து குளிர்ந்த இடத்தினை சுடுகாடாக மாற்றி வருகின்றனர். வெறும் அர்ப்ப சொர்ப்ப நன்மைகருதி. இந்த அழிவையெல்லாம் தட்டிக் கேட்க்க படித்திருக்க வேண்டிய அவசியமில்லை நல்ல மனதிருந்தால் போதும். அது யாரிடம் ஐயா இருக்கின்றது?. ஆக ஒரு மரம் கற்றுக்கொடுக்கும் பாடத்தை எந்த மனிதனும் கற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.

வாழ் நாளில் ஒரு மரக்கன்று தானும் நடமுடியாதவர்கள்தான் இந்த வேலைகள் அனைத்தினையும் செய்பவரும், அவற்றை கண்டும் காணாமற் போகின்றவர்களும்.

கலவர காலத்தில் தங்களைக் காப்பாற்றிக்கொள்ளவென கண்ணாக்காடுகள்தான் ஆற்றங்கரையில் அடைக்கலம் கொடுத்தது பலருக்கு.

அது மாத்திரமல்ல வெற்றிலை செய்கின்ற பூமி எங்க கிராமங்கள் ஆதலால் அந்த வெற்றிலைக் கொழுந்து வளரவென இந்த கண்ணா கம்புகளைத்தான் வெட்டி செய்கை பண்ணியும் வந்தனர்.  அது மாத்திரமல்ல காலா காலத்துக்கு இந்த காடுகளை அண்டியே மட்டக்களப்பு வாவியின் மீன்பெருக்கம் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் அவை இன்று மொட்டை பறந்துபோய் கிடக்கின்றன். அவை முற்றாக அழிக்கப்பட்டுள்ளன. ஆக இந்த இயற்கையின் நன்மைகளை சில சிறு தனிப்பட்ட தேவைக்காக, வசதிக்காக இல்லாது செய்து, அவற்றை விளங்கிக்கொள்ளவும் முடியாதவர்களாகிவிட்டோம். இதனால் இன்று வெளிநாட்டில் டின்களில் அடைத்து குளிர்சாதனப்பெட்டிக்குள் சவமாக உள்ள மீன்களை உண்ணத் துவங்கிவிட்டோம்.

குளத்தினை கண்டமாதிரி களியெடுக்கவெனத் தோண்டியுள்ளனர். எமது மக்கள் தங்களது கிணற்று ஊற்று, வயல் காணிகளின் பாய்ச்சல் என இந்தக் குளங்களே மையப் பொருளாக இருந்தன. இன்று குளத்து நீர் களியெடுத்த குளிகளிலும், பள்ளங்களிலும் தேங்கி ஊற்று நீர் இல்லாமல் போயுள்ளது கிணறுகளில்.

அதனால் குளிக்க குடிக்க யூன் யூலையிலேயே நீர்ப்பற்றாக்குறை தோன்றிவிடுகின்றது. அது மாத்திரமா லெட்சக்கணக்கான அரிய மீன்வகைகள் இச்சமச்சீர் இன்மை காரணமாக இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது.

இதற்கு இன்னும் பல காரணங்கள் இருக்கின்றன. இன்று கெமிக்கல் இல்லாத பயிர் அறுவடைகள் வெளிநாடுகளுக்கு நாம் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் அளவுக்கு அவர்கள் சுகாதாரம் மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு என்பனவற்றில் மிகக் கருசனையாக இருக்கின்றனர்.

ஆனால் இங்கு டொன் கணக்கில் பயிர்ச் செய்கைக்கௌ பசளைகளையும் கிருமிநாசினிகளையும் தங்களது வசதி கருதி எக்கச்சக்கமாகப் பாவிக்கின்றனர். அதனாலும் நீர் வளமின்றி மீன் இனம் பெருக்கமில்லாமல் போவதுடன் நஞ்சேற்றிய இந்த மொழு மொழு காய்கறிகளையும் பயிர் வகைகளையும் நாம் உண்டு இல்லாத நோய்க்கெல்லாம் மேலைத்தேய மருந்துகளை இறக்குமதி செய்கின்றோம்.

அத்துடன் நிலத்தில் உப்புப் படிவதனால் நிலக்கீழ் ஊற்று மேலும் மேலும் ஆழத்தில் போய்விடுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. எல்லாம் நம்ம வசதியாக இருக்கிறது என்றுதான் செய்கின்றோம் ஆனால் இவை சரியானதா என ஒரு கணமும் நாம் எண்ணிப்பார்ப்பதில்லை.

வெவ்வேறு நாடுகளில் இருந்தெல்லாம் கடற்கரையில் காலாற லெட்சோப லெட்சம் மக்கள் எமது நாட்டிற்கு வருகை தருகின்றனர். சுனாமிக்குப் பின் தனிப்பட்டோர் வசதிக்காக கடற்கரை குளக்கரையாக மாற்றியுள்ளனர். கடலுக்கு முன் உள்ள கரைகள் இப்போ மழைகாலம் துவங்கிவிட்டால் ஆறுபோல் குறுக்கே கிடப்பதைப் பார்க்க பரிதாபமாக இருக்கின்றது. வந்தவனும் போனவனும் மண்ணை அகழ்ந்து திருடிச் சென்றுள்ளான். இதைப் பார்த்து கைகட்டி வாய்பொத்தி மௌனியாக இருந்து விட்டனர். கடல் மாத்திரம் இருக்க கரைகளை தொலைத்து வேறு ஊர்களுக்கு சென்றுவரும் நிலமை ஏற்பட்டுள்ளது.

ஆகவே மண், களி, நீர் இவை எமக்கு இறைவனால் இலவசமாகத் தரப்பட்ட இயற்கை வளங்கள். இவற்றை இல்லாது ஒளித்து விட்டால் எமக்கு அவற்றை திருப்பவும் உருவாக்கலாமா சொல்லுங்கள்.

என்று நாம் செய்வதில் எது சரி எது பிழை என்கின்ற எண்ணம் வருகின்றதோ அப்போதுதான் நிம்மதியான ஒரு சமுகத்தினைத் தரிசிக்கலாம். இன்று கால நிலை மாறி மழை பொய்த்து என்றுமில்லாத வெய்யில், குடிநீர்ப்பற்றாக்குறை, மரங்களை இல்லாதொழித்தல் ஆகியன நீங்கள் உங்கள் வசதி கருதி செய்த மோசமான செயல்களின் விளைவுகள் என்பதனை மறந்துவிடாதீர்கள்.

ஆகவே இயற்கை வளங்களான தாவரங்களைக் கொண்டு தமிழகத்தில் அந்தச் சாதனையை நிகழ்த்த அதிக அளவு வாய்ப்புள்ளது. பொய்த்து வரும், மாறி வரும் பருவமழையையும், தொடர்ந்து வரும் வறட்சி, வளமிழக்கும் மண் போன்ற சோதனைகளைத் தாங்கி, சாதனை புரிய வல்ல தன்மையைத் தன்னகத்தே கொண்டுள்ளவை மரவகைகளே. இவைகளைப் பெருமளவில் வளர்த்தால், ஒவ்வொரு சொட்டு நீரையும் ஒவ்வொரு துளி மண்ணையும் ஒவ்வொரு சூரியக் கதிரையும் ஒன்றிணைத்து மாபெரும் சத்தியாக மாற்றலாம்.

இப்பூவுலகம் நமது மூதாதையரிடமிருந்து பெற்ற சொத்து என்று கருதாமல், நமது பிள்ளைகளிடமிருந்து பெற்ற கடன் என்று கருதி, பொறுப்புடன், முதலுடன் வட்டியையும் சேர்த்து, வளமிக்கதாகத் திருப்பிக் கொடுக்க வேண்டும்.

இயற்கையே நமது எதிர்காலம் என்ற மாபெரும் உண்மையை அறிந்து கொள்ள வேண்டும். நமது வருங்காலச் சந்ததிகள் மற்றும் அனைத்து உயிர்வகைகளின் வளமான, வாழ்வுக்கு அடிப்படையாக விளங்குதற்குரிய செயல்களில் ஈடுபட வேண்டும்.

பல நாடுகள் மகிழ்ச்சியான நாடுகள் வரிசையில் முன்னிலை வகிப்பதற்கு காரணம் அவர்கள் சுற்றுச்சூழல் மீது வைத்துள்ள காதல் மற்றும் நல்ல மனசுள்ள மனிதர்கள் அங்கு இருப்பதும். ஆக எமக்கு எது வசதியாக இருக்கின்றது என்பதனைவிட எது சரியாக இருக்கின்றது என்பதலி கவனம் செலுத்தினால் நாடும் வீடும் முன்னேற்றமடையும்.

1 comments:

Nanjil Siva said...

தங்கள் ஆதங்கம் நியாயமனதே ... இயற்கையை அழித்தால் அது நம்மை திருப்பி அழிக்கும்...

Post a Comment