ADS 468x60

29 June 2022

இப்பொழுது உண்மையைக் கூறினாலும் மக்கள் நம்புவதாயில்லை.

இன்று அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் இடையே உள்ள நம்பிக்கை சிதைவு குறிப்பிடத்தக்க ஒரு சாதகமான சூழ்நிலை அல்ல. நம்பிக்கை சிதைவதற்கு முக்கிய காரணம் தொடர்சியாக் பொய். சொல்லி மக்களை ஏமாற்றுவது.

"வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்" உண்மை என்று சொல்லப்படுவது எது என்றால், எவர்க்கும் எத்தகைய தீங்கையும் தராத சொற்களைச் சொல்வதே ஆகும். ஆனால் இன்று எங்களது சில தலைவர்கள் சொல்லும் சொற்களை நம்பி வெம்பி வீணாகும் அளவுக்கு மக்களை ஏமாற்றுகின்றவர்களை, துன்புறுத்துபவர்களை பொய்யன் என நான் சொல்லவில்லை வள்ளுவர் சொல்றார்.

 பௌத்த மதத்தின் முக்கிய பஞ்சசீலக் கொள்கையில் பொய்சொல்லாமை, பொய் கூறுவதனைத் தவிர்ப்பது மிக முக்கியமானதாக சொல்லப்படுகின்றது. உலகில் எந்த மதமும் பொய்யை அங்கீகரிக்கவில்லை. அதுமாத்திரமல்ல, நீதிமன்றத்தில் பொய்யான சாட்சியங்களை முன்வைப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகும். மறுபுறத்தில், பொய்யனால் செய்ய முடியாத குற்றமே இல்லை என்பது கதை. இன்று இந்நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு நெருக்கடிக்கும் அடிப்படைக் காரணம் பொய்யும் புரட்டும்தான்.

தற்போதைய அரசியல் களத்தில் சில எம்.பி.க்களும், அமைச்சர்களும்  ஒரு போட்டி போல் பொய் சொல்கிறார்கள். இன்று எரிபொருள் கப்பல் வருகிறது என்று அமைச்சர் கூறியதும், மக்கள் அடித்துப்பிடித்து ஓடிப்போய் வரிசையாக நின்று கொண்டிருக்கின்றனர். அதன்பின்னர் ஒரு செய்தி வருகின்றது 'மன்னிக்கவும் இன்று எரிபொருள் வரவில்லை' என மீண்டும் கூறுகிறார். ஆனால் மக்கள் இன்னும் வரிசையில் நிற்கின்றனர். அதன்பின் கப்பல் எப்போது வரும் என்று சொல்ல முடியாது என சொல்லுகின்றனர். ஏன் ஒரு அமைச்சரால் மக்களுக்க தகவலை உறுதியாக சொல்ல முடியவில்லை? பொய் சொல்வதற்கும் ஒரு எல்லை இருக்க வேண்டும் இல்லையா? உண்மையைத்தான் சொல்லாவிடினும் பொய் சொல்லி ஏமாற்றாமல் இருக்கலாம் இல்லையா! இது பொய் சொல்லும் எல்லா அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும்.

அதுபோல் இன்று பல வகையான நோய்களுக்கான மருந்துகளுக்கும், அறுவை சிகிச்சை மருந்துகளுக்கும் தட்டுப்பாடு நிலவுவதாக பொறுப்புவாய்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் 850 ஆய்வக பொருட்கள் மற்றும் 18 எக்ஸ்ரே பொருட்கள் பற்றாக்குறையாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இது வெறுமனே டொலர் பற்றாக்குறையால் இந்த பற்றாக்குறை ஏற்படவில்லை என்றும், மருத்துவ விநியோக நிர்வாகத்தில் உள்ள பலவீனம் தான் காரணம் என்றும் பொறுப்புள்ள அதிகாரிகள் கூறிவருகின்றனர்.

இந்நிலையில் சுகாதார அமைச்சர் என்ன கூறுகிறார்? அதிகாரிகளால் அவருக்கு வழங்கப்பட்ட தரவுகளில் சில குறைபாடுகள் இருக்க வேண்டும். இல்லையெனில் தரவுகளும் போலியாக இருக்க வேண்டும். அமைச்சுப் பதவிகளை மாற்றும் போது இவ்வாறான பாதிப்புகள் ஏற்பட்டாலும், அது போன்ற பாதிப்புகள் தவிர்க்கப்பட வேண்டுமல்லவா?

அரசு மீது மட்டுமல்ல அதிகாரிகள் மீதும், பெட்ரோல் நிலைய  உரிமையாளர் மீதும் மக்களுக்கு இப்போது நம்பிக்கை இல்லை. மக்கள் வரிசையில் நின்று கொண்டிருக்கின்றபோதே, தற்போது எரிபொருள் தீர்ந்து விட்டது எனக் கூறுகின்றபோது அதை மக்கள் ஏற்க மறுத்து அதனை சோதனை செய்யவேண்டும் என்கின்றனர். ஏன் எனில் அங்கு பொய் சொல்லாம் என நினைக்கின்றனர். 

இவ்வாறான நிலையில், அரசியலில் பொய்கள் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளன. அரசியல்வாதிகள் இந்நாட்டு மக்களுக்கு வழங்கிய பொய்யான வாக்குறுதிகளை ஆவணப்படுத்தினால், அது ஆசியாவிலேயே இல்லை, இல்லை உலகின் மிகப் பெரிய புத்தகமாக இருக்கும். அரசியல்வாதிகளின் இருப்புக்காகவும், பாதுகாப்பிற்காகவும் அரசியல்வாதிகள் மட்டுமன்றி அவர்களின் கைக்கூலிகளும் தங்களைத் தப்பித்துக்கொள்ள பொய் சொல்லும் பல நிகழ்வுகள் சமீப காலங்களில் நிகழ்ந்துள்ளன.

'ஒரு பொய்யை மறைக்க இன்னொரு பொய் சொல்ல வேண்டும்' என்ற பழமொழி மக்களிடையே உள்ளது. இலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவர் எம். சி. பெர்டினாண்டோ பொய் சொன்னதை ஒப்புக்கொண்டார். பின்பு அதை மறைக்க இன்னும் எத்தனை பொய்கள் சொன்னார் என்று தெரியவில்லை. அரசியல்வாதிகளும் அதிகாரவர்க்கமும் ஒன்றுசேர்ந்து பொய் சொல்லி நாட்டை பேரழிவில் ஆழ்த்தியுள்ளனர்.

ஒரு பொய்யனுக்கு ஒரேயடியாக உண்மையைச் சொல்வது எளிதல்ல. அவர் சொல்வது உண்மைதான் என்றாலும், முன்பு சொன்ன பொய்களால் கோபத்தில் இருக்கும் மக்களுக்கு அவர் சொல்வதில் நம்பிக்கை வைப்பது அவ்வளவு சுலபமில்லை. அதற்கு எல்லாமே மாற வேண்டும். மாற்றப்பட வேண்டும். அதுதான் நாட்டு மக்கள் கோரும் விதத்தில் உள்ள வித்தியாசம். அரசியல் மற்றும் ஒட்டுமொத்த சமூக அமைப்பும் உடனடியாக மாற வேண்டும். ஒவ்வொருவரும் சுயநலத்தை விட்டொழித்து சமூகத்தின் பொது நலனுக்காக பாடுபட வேண்டும்.

0 comments:

Post a Comment