ADS 468x60

03 August 2019

வறுமை தமிழரை பீடித்துள்ள ஒரு பிணி; அது தற்காலிகமானதொன்று.

யுத்தத்தின் பின்னர் குறிப்பாக தமிழ் மக்களிடையே வறுமை ஒரு சவாலாகவே உள்ளது. இது எமது பரம்பரை வியாதியல்ல பாதியில் வந்ததுதான். எமது வறுமையான நிலைக்குக் காரணம் போர், இயற்கை சீற்றங்கள், காலநிலையில் சடுதியான ஏற்றத்தாழ்வுகள் கல்வி அறிவின்மை, அடிமைத்தனம் போன்றவைகளுடன் அரசியல் ரீதியான தாக்கங்களும் காரணமாக இருக்கின்றன.

2002 ஆம் ஆண்டு நடந்த தொகைமதிப்பு மற்றும் வீட்டு துறையினரின் வருமானம் செலவு மதிப்பீட்டின் படியும் நூற்றுக்கு 22.7% விகிதமாக இருந்த வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்களின் விகிதம் 2012/2013 ஆம் ஆண்டில் நடாத்தப்பட்ட தொகைமதிப்பின்படி 6.1%  குறைவடைந்து உள்ள போதிலும், வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் வறுமையின் கீழ் அவதிப்படும் மக்களின் அளவு அதிகமாகவே உள்ளது.

முல்லைத்தீவில் (28%), மொனராகலை (21%), மன்னார் (20%), மட்டக்களப்பு(19%), கிளினொச்சி(13%) ஆகிய மாவட்டங்கள் அதிகமாக வறுமைக்கோட்டின் கீழ் வாழுகின்ற மக்களைக் கொண்ட மாவட்டங்களாகும். இதிலும் மண்முனை மேற்கு-மட்டக்களப்பு 45.1% வறுமையிலும், கோறளைப்பற்று-தெற்கு மட்டக்களப்பு 37.7% ஆகவும் இருப்பது அதிர்சியை ஏற்படுத்தவில்லை எம்மை ஆழும் பெரியவர்களுக்கு.

இன்று உலகிலிருந்து பொல்லாத வறுமை நீங்க வளர்முக நாடுகள் தனி மனித வருமான உயர்விற்கு வழிவகைகளை ஏற்படுத்த வேண்டும் என்ற கோஷம் வலுப்பெற்று வருகின்றது. பொருளாதார உயர்வானது ஒரு நாட்டின், அந்த நாடுகளில் வாழ்கின்ற குடிமக்கள் யாவரும் போதிய அளவு அத்தியாவசிய அடிப்படை தேவைகளான உணவு, உடை, உறையுள் சுத்தமான குடிநீர் போதியளவு கல்வி அறிவு வீதி கட்டமைப்பு வசதி, நவீன தொலைத்தொடர்பு வசதி ஆகியவைகளுடன் தனிமனித சுதந்திரம் போன்றவைகளில் தன்னிறைவு உள்ளவர்களாக இருத்தல் வேண்டுமென வலியுறுத்தப்படுகின்றது.

பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்த  ஜோசப் ரெசின்சி  என்பவர் 1987 ஆம் ஆண்டு உலகிலிருந்து வறுமை ஒழிக்கப்பட வேண்டுமென தனது வாலிப வயதிலிருந்து குரல் கொடுத்து வந்ததுடன் அதற்கான சமூகம் தழுவிய வேலைத்திட்டத்திலும் ஈடுபட்டார். இதன் பலனாக 1992 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை உலக வறுமை ஒழிப்பு தினமாக அக்டோபர் 17 ஆம் திகதியை பிரகடனப்படுத்தி உள்ளது. ஜோசப் ரெசின்சி என்பவரே உலகில் முதன் முதலில் வறுமை ஒழிக்கப்படல் வேண்டுமென போராடி அதை உலகளவில் சமூகமயக்கியவர் எனலாம்.

இந்த சம்பவத்தினை  தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபை தனது அங்கத்துவ நாடுகளை ஒன்றிணைந்து உலகிலிருந்து வறுமையை ஒழிப்பதற்கும் தனிமனித பொருளாதார உயர்விற்குமான திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்த ஆரம்பித்தார்.

எமக்கு தெரிந்தவகையில், இன்று ஆபிரிக்காவில் மக்கள் பட்டினிச்சாவின் விளிம்பில் நிற்கின்றார்கள். அங்கு மனித இன அழிவு தொடர்ந்த வண்ணம் உள்ளது. வறுமை அல்லது பட்டினி என்பது ஒரு தனிமனிதன் ஒரு நாளைக்கு 1800 கலோரி உணவுக்கு குறைவாக உட்கொள்கின்றான் என்பதே அர்த்தமாகும். போஷாக்கற்ற அல்லது சீரான நேரம் தவறிய உணவு முறைகளால் பாரிய சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகின்றது. 

இன்று குறைந்த வருமானம் பெறும் சமூகத்தினரிடையே வறுமையைக் குறைப்பது சவால்மிக்க ஒரு பணியாகும். இது அரசாங்கம் மட்டுமின்றி உலகில் உள்ள முழுமொத்தச் சமூகமும் எதிர்நோக்க வேண்டிய சவாலாகும். உலகிலிருந்து வறுமையை நீக்கவென உலக வங்கி உட்பட பல நாட்டு நிதி நிறுவனங்கள் பல ஆக்கபூர்வமான பங்களிப்புக்களை மிகத் தீவிரமாக செய்து கொண்டுதான் உள்ளது. ஆனால் வறுமை முற்றாக அல்லது பாதியளவு குறைக்கப்பட்டிருக்கின்றதா என்பது ஆய்வு செய்ய வேண்டியது.

எமது மக்களைப் பொறுத்தவரை தனிமனித வருமானம் உயர்ந்துள்ளதாக மத்திய வங்கி அதிகாரிகள் அவ்வப்போது கூறிவந்துள்ளனர். இலங்கை மத்திய வங்கியின் வெளியிட்ட சிறு குழுக்கள் முறை நூலில் எமது நாட்டின் வறிய மக்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவதாகவும் தற்சமயம் அத்தொகை நாட்டின் மொத்த சனத்தொகையில் 15% வீதத்தை விடக் குறைவாக காணப்படுகின்றது என மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அஜித் கப்ரால் எழுதியுள்ளார். 

இதிலிருந்தும் தற்கால நல்லாட்சி அரசின் வேலைத்திட்டங்களின் மூலமாகவும் வறுமை ஒழிப்பு நடவடிக்கை மிகச் சீராக தூரநோக்கான செயல்திட்டத்துடன் முன்னெடுத்து வருகின்றது என சுட்டிக்காட்ட முடியும். இருந்தும் தமிழ் மக்கள் இந்த சலுகைகளை அரசியல் ரீதியில் புறக்கணிக்கப்பட்ட இனம் என்ற வகையில் பெறுவதில் மிக பிரயத்தனத்தினை சந்தித்து வருகின்றனர்.

ஆங்கிலேயர் எமது கீழைத்தேய நாடுகளை ஆட்சி செய்த நேரத்தில் மக்களின் உணவிற்குத் தேவையான பொருட்களை பகிர்ந்தளித்தார்களே தவிர தூரநோக்கான பொருளாதார அபிவிருத்தியை மக்களுக்காகச் செய்யவில்லை. தங்களது நாட்டின் பொருளாதாரம் வெள்ளைக்கார மக்களின் நல்வாழ்விற்கான ஏற்பாடுகளை வசதிவாய்ப்புக்களுக்கு ஏற்புடைய தொழில் துறைகளையே ஏற்படுத்தி இருந்தனர். இதுபோல்தான் அமைச்சர்களாக நிர்ணயிக்கப்படுபவர்கள் தங்களை தேர்வு செய்த மக்களின் நலனிலேயே அதிக அக்கறை காட்டி ஏனைய மக்களை புறக்கணித்தும் வருவது அனைவருக்கும் தெரிந்த விடயம்.

இவ்வாறான காரணங்களினால் தான் வறிய நாடுகள் செல்வந்த நாடுகள் என்ற இருபெரும் பிரிவுகள் தோற்றம் கண்டது. மக்களை வறுமை நிலையில் வைத்துக் கொள்ளவே விரும்பி அதற்கு செயல்வடிவமும் கொடுத்தார்கள். இதற்கு சற்றும் மாறாத நிலை எமது மக்களிடையேயும் காணப்படுவது வருந்தத்தக்கது.

சுதந்திரம் அடைந்தவுடன் இலங்கை இந்த மானிய உணவு விநியோகம் தொடர்ந்து வந்த அரசுகளால் முன்னெடுக்கப்பட்டு வந்திருக்கின்றது. அன்று மக்களுக்கு இலவசமாக ஒரு சேர் அரிசி இரண்டு சேர் (படி) அரிசி என்பன பெரும் அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. அரசியலை புரட்டிப்போடும் அளவிற்கு மானிய விநியோகம் செல்வாக்கு பெற்றிருக்கின்றது. இன்றும் இதை சமுர்த்தி கொடுப்பனவு ஊடாக மக்கள் பெற்று வருகின்றார்கள்..

நாம் நினைப்பதற்கு மாறாக வறுமை ஒழிக்கப்படுவதற்கு சிக்கனம் சேமிப்பும் கண்டிப்பாக தனிமனிதரிடத்திலும் நாட்டிலும் இருத்தல் அவசியம். பிரித்தானியரின் குடியேற்றப் பொருளாதார அபிவிருத்திக்கு முதலீட்டாக்கம் முக்கியம் என கண்டறியப்பட்டுள்ளது. 19 ஆம் நூற்றாண்டில் இலங்கையில் சேமிப்பு வங்கியினை நிறுவிய முன்னோடிகள் என்ற பெருமை ஆளுநர் சேர். நாபர் வில்மட் ஹோட்டின் மற்றும் சேர். பொன்னம்பலம் இராமநாதன் ஆகியோர்களையே சாரும்.

முதலில் எமது நாட்டில் சேமிப்பு வங்கியானது 6.8.1832 ல் தாபிக்கப்பட்டது. அன்று சேமிப்பு கணக்குகள் பணத்திற்கு பதிலாக தங்கப் பவுண்கள் கொண்டு திறக்கப்பட்டதாக அறிய முடிகின்றது. எனவே ஒரு நாட்டிலிருந்தும் உலகிலிருந்தும் வறுமை ஒழிக்கப்பட வேண்டுமாக இருந்தால் நாட்டில் உற்பத்தி தொழில் துறை சார்ந்த திட்டங்கள் உருவாக்கத்துடன் நல்ல தூரநோக்கான அரசுகள் நாட்டில் இருத்தல் அவசியம். லஞ்சம் ஊழல் அற்ற ஆட்சியினால் மிக விரைவாக வறுமையிலிருந்து மக்களை மீட்டெடுக்க முடியும்.

வறுமை என்பது என்றைக்கும் நிலையானதல்ல. வறுமையானது சிலரது வாழ்நாட்களில் கடத்த வேண்டியிருக்கும் ஒரு தற்காலிக வாய்ப்பு மட்டுமே. சிலர் இவ்வாய்ப்பை துரிதமாக கடந்து முன்னோக்கி செல்வதோடு மற்றும் சிலர் சில நாட்கள் கடந்து தாமதித்தேனும் பொருளாதார மீட்சிபெறுகின்றான். உலக மக்கள் சமூகம் வறுமையை எதிர்த்து நின்று உழைத்தால் இதை விரட்டி அடிக்கலாம் என்று கூறமுடியும்.

பொதுவாக வறுமையானது குறைந்துள்ள அதேவேளை, இடம், பால்நிலை மற்றும் இனம் என்பவற்றில் தேர்ச்சியானது சமனற்று உள்ளது. பெரும் எண்ணிக்கையிலான வறியவர்கள் நகரத்திற்குள் அல்லது அதனைச் சூழவுள்ள பகுதிகளில் வாழ்கின்றனர். குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கில், பெருந்தோட்டத் துறையில் மற்றும் மொனராகலையில் அதிகளவு வறுமை உள்ளது. 

தொழில் சந்தையில் பெண்களின் பங்காளித்துவமானது எம்மைப்போன்ற நடுத்தர வருமானம் பெறும் நாட்டிற்கு பல தசாப்தங்களாக குறைவாக உள்ளது. நடுத்தர வருமானம் பெறும் நாட்டிற்கு மிகவும் குறைவான சமூக செலவுடன் இணைந்து, சமத்துவமின்மையும் அதிகரித்துள்ளது. மக்கள் தொகையில் 40 வீதத்திற்கும் அதிகமானவர்கள், நாளொன்றிற்கு 225 ரூபாய்கள் என்ற வறுமையை நோக்கிச் செல்லும் ஆபத்தை கொண்டுள்ளனர்.

ஆக உலகில் வறுமையில் இருக்கும் சனத்தொகை 1995 ஆம் ஆண்டில் 1.9 பில்லியானாக இருந்து 2015 இல் அது 856 மில்லியனாகக் குறைவடைந்து பாதிக்கும் மேல் குறைவடைய, பாதிக்கப்பட்ட எம்மக்கள் இன்னும் பாதிக்கப்படும் நிலைக்கு வேறுயாருமல்ல, அடிப்படை வசதிகளைக் கூட பெற்றுக்கொடுக்க முதுகெலும்பில்லாத மக்கள் பிரதிநிதிகளே காரணமாகும்.

References


0 comments:

Post a Comment