ADS 468x60

08 May 2022

இலங்கையின் இன்றய நெருக்கடியும் அதில் இருந்து மீளுவதற்கான பரிந்துரைகளும்!

இன்று முழு நாடும் ஸ்திரமற்ற நிலையில் உள்ளது. அதிலும் முதன்மையாக, பொருளாதாரம் ஆபத்தான நிலைக்குச் பின்சென்று வீழ்ந்துள்ளது. இதனால் உருவாகும் சமூக அழுத்தம் மற்றும பிரச்சினைகள் தற்போது நாடு முழுவதும் அரசுக்கு எதிரான போராட்டங்களாக வெடித்து வருகிறது. 

இதற்கு முக்கிய காரணம் வெளிநாட்டு கடன் சுமை. இலங்கை அதன் அபிவிருத்தி அடைந்துவரும் காலத்தில் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஏனைய நாடுகளின் விசேட உதவிகளைப் பெற்றது. உலக வங்கியும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் இலகுவான முறைகளின் கீழ் இலங்கைக்கு கடன்களை வழங்கியது. குறைந்த வட்டி விகிதத்தில் திருப்பிச் செலுத்த நீண்ட கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இலங்கை உயர் நடுத்தர வருமான நாடாக மாறியதால் அனைத்து சலுகைக் கடன்களும் இழந்தன. பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுத்த காரணிகளில் அதுவும் ஒன்று.

இலங்கையில் சர்வதேச கடன், நிதியுதவி திட்டங்கள் உன்னிப்பாகக்  கண்காணிக்கப்படுகின்றன. இருப்பினும், இந்த வசதியான சூழலை இழந்ததால், நாங்கள் ஒரு புதிய சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. புதிய உயர் நடுத்தர வருமான நாடாக மாறுவதற்கு முன்பு, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு சாதகமான சூழ்நிலையில் எங்களது உள்நாட்டுத் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்ய மேலைத்தேய வளர்சியடைந்த நாடுகள் எல்லாம் உடன்பட்டிருந்தன. ஆனால் புதிய உயர் நடுத்தர வருமான நாடான பின்னர் உள்ள சூழ்நிலையில் அந்த நிவாரணங்கள் எல்லாம் இழக்கப்பட்டன. இவை அனைத்தும் எமது ஏற்றுமதி உற்பத்திச் செலவினை அதிகரிக்க வழிவகுத்தது. இதன் விளைவாக இலங்கைக்கு அதிக ஏற்றுமதி வருவாயைத் தேடித்தரும் ஆடைத் தொழிற்சாலைகள் பங்களாதேஸ், கம்போடியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு வாய்ப்பினை அதிகரித்தன. இவை அனைத்தும் நாட்டுக்கு டொலர்களைப் பெறுவதற்கான வழியைத் தடுத்துவிட்டன.

இந்தப் பின்னணியில் நாட்டின் வருவாய் படிப்படியாகக் குறைந்து நமது வருவாயை விட செலவு அதிகமாகிவிட்டது. இதனால் வருமானத்தை விட நாட்டுக்கான செலவு அதிகரித்து பட்ஜெட் இடைவெளியும் அதிகரித்தது. இது நாடு எதிர்கொள்ளும் பாரிய சவாலாகும். உள்நாட்டில் அல்லது சர்வதேச அளவில் கடன் வாங்குவதன் மூலம் இந்த இடைவெளியைக் குறைக்க முடியும். நாடு உயர் நடுத்தர வருமானம் பெறும் நாடாக மாறியதால், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றில் சலுகைக் கடன் பெற முடியாததால், புதிய கடன் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. 

சர்வதேச இறையாண்மை பத்திரங்கள்

சர்வதேச இறையாண்மை பத்திரங்கள் மூலம் கடன் வாங்குவதற்கான வழி அன்று இலகுவானதொன்றாகும். இந்தக் கடன்கள் அதிக வட்டி விகிதங்களைக் கொண்டுள்ளன. மேலும், கடன் வாங்கியவர் எதற்காக கடன் வாங்குகிறார், கடனை திருப்பி செலுத்த முடியுமா என்பதில் கடன்வழங்குபவர்கள் கவனம் செலத்துவதில்லை அதுபோல் அரசும் கவனம் செலுத்தத் தவறிவிட்டது அது அவர்களுக்கு அவசியப்படவும் இல்லை. இதன் விளைவாக, அவர்கள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கடன் வாங்கினர். பட்ஜெட் பற்றாக்குறையைக் குறைக்கவும், பல்வேறு திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காகவும் கடன் வாங்குவதை இந்த அமைப்பு எளிதாக்கியது. இந்த காரணி நாட்டின் கடன் சுமை வேகமாக அதிகரிப்பதற்கு பங்களித்துள்ளது என்பது தெளிவாகிறது. இந்நிலைமை இன்று நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிக்கு மூலகாரணமாக அங்கீகரிப்பதில் தவறில்லை.

சர்வதேச நாணய நிதியம்

அண்மையில் இலங்கையின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொண்ட ஆரம்பக் கலந்துரையாடலில், நாட்டின் வருமானத்தை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதன்படி, வருமான வரியை உயர்த்தி அரசு வருவாயை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. 2015 மற்றும் 2019 க்கு இடையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை உதாரணமாகக் குறிப்பிடலாம். 

அதனால், பட்ஜெட் பற்றாக்குறை படிப்படியாகக் குறைந்தது. அதுபோலவே நமது பொருளாதாரம் சீரமைக்கப்பட வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் பலமுறை கூறியுள்ளது. இதற்கு இரண்டு முறைகள் உள்ளன. முதலாவது வருமானத்தை அதிகரிப்பது. இரண்டாவது தேவையற்ற செலவு குறைப்பு. கடந்த ஆட்சியின் போது இந்த வழிமுறை பின்பற்றப்பட்டாலும், அதன் பின்னர் ஆட்சிக்கு வந்தவர்களினால் அது கணக்கெடுக்கப்படவில்லை. அவர்கள் மாறாக வரி விலக்கு தேவை என்று கூறி வரி குறைப்பு கொள்கையை கடைபிடித்தனர். வட் வரியை 8 சதவீதமாகக் குறைத்தது அதற்கான ஒரு உதாரணம். இதனால் 500 முதல் 600 மில்லியன் ரூபாய் வரையிலான அரசாங்க வருமானம் இழக்கப்பட்டது. இந்நிலை நாடு எதிர்நோக்கும் நிதி நெருக்கடியை மேலும் அதிகப்படுத்தியது.

விலைச் சூத்திரம்

அந்த நேரத்தில் சர்வதேச நாணய நிதியம் உடனான விவாதங்களில் எரிபொருள், எரிவாயு போன்றவற்றுக்கான விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்துவதையும் அவர்கள் வலியுறுத்தினர். இதனால் அது செயல்படுத்தப்பட்டது. செலவை ஈடுகட்ட நியாயமான விலை நிர்ணயம் செய்யப்பட்டது. ஒரு பொருள் விற்பனையின் போது நஸ்டம் அல்லது மானியம் பெறும் நிலை ஏற்படாத சூழ்நிலையை உருவாக்குவதே இதன் நோக்கம். விலைச்சூத்திரம் மாதம் ஒருமுறை அமுல்படுத்தப்பட்டதால், குறைந்த சதவீதமே விலை உயர்வு இருந்தது. 

அவ்வப்போது விலை குறைப்பும் ஏற்பட்டது. இதனால், இன்று போல் விலைவாசி அழுத்தத்தை மக்கள் அன்று சந்திக்கவில்லை. ஆனால் தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்து விலைச்சூத்திரத்தை ரத்து செய்தது. அதன் விளைவுகளை இன்று அனைவரும் அனுபவிக்க வேண்டியுள்ளது. விலை நிர்ணயம் பற்றி பேசப்பட்டாலும், அதனை நடைமுறை செய்வதில் இன்னும் அரசு கணக்கெடுக்கவில்லை. அதனால், மக்கள் பட்ஜெட்டில்; கணிசமான சுமையை சுமக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

திரும்பச் செலுத்தவேண்டிய கடன்தொகை

2020 க்குப் பிறகு கடன் திருப்பிச் செலுத்துதல் எப்போதும் இல்லாத அளவுக்கு அதன் நெருக்கடி இருந்து வருகின்றது. ஆனால் அவைகள் கவனத்தில் கொள்ளப்பட்டு உரிய முறையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சரியான திட்டத்தை பின்பற்றாததன் விளைவுதான் இன்று இந்த நிலை ஏற்பட்டுள்ளது. நிதி நிறுவனங்களின் சரிவு சில காலத்திற்கு முன்பு இந்த நாட்டில் நடந்தது. இந்த நிலை அமெரிக்காவில் கூட 'பொன்சி' முறையில் அறிமுகப்படுத்தப்பட்டது. வைப்புத்தொகைக்கு அதிக வட்டி விகிதங்கள் இருப்பதால் இது பொன்சி என்று அழைக்கப்பட்டது. இவ்வளவு அதிக வட்டி விகிதமும் வைப்பிலிடல் மூலம் செலுத்தப்பட்டது. ஆனால் இறுதியில் அவை அனைத்தும் ஒன்றுமில்லாமற் போனது. இவ்வாறானதொரு நிலை இந்நாட்டிலும் ஏற்பட்டுள்ளது. கடனை அடைப்பதற்காக மற்றுமொரு கடன் வாங்கும் நிலை இந்நாட்டில் இடம்பெற்று வருகின்றது. 

அந்நிய கையிருப்பு நெருக்கடிகள்

அந்நிய கையிருப்பு நெருக்கடி நாட்டை மிகவும் மோசமான நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. இதனால் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மட்டுமின்றி, உற்பத்தித் தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப் பொருட்களையும் இறக்குமதி செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. எனவே சரியான திட்டமிடலுடன் நாடு இந்த சவாலை எதிர்கொள்ள வேண்டும்.

நாட்டில் இன்னும் பொருட்களுக்கான நீண்ட வரிசைகள் உள்ளன. சந்தையில் இத்தகைய பொருட்களின் பற்றாக்குறையே இதற்குக் காரணம். எனவே, இந்த நிலைமையை சரியான கட்டுப்பாட்டின் மூலம் குறைக்க வேண்டும். அந்தப் பொருட்களின் விலையை உயர்த்துவது அதற்கு ஒரு வழியாகும். தற்போது அதற்கான ஆதாரமும் உள்ளது. இறக்குமதி செய்யப்படும் எரிபொருள், எரிவாயு போன்றவற்றின் விலை அதிகரிப்பு இதற்கு உதாரணமாகும். 

இந்த சுமையை மக்கள் தான் சுமக்க வேண்டும். இது ஒரு சுழற்சி வடிவில் இருக்கும். ஆனால் இந்த முறைகளை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தினால், ஓரளவு கட்டுப்பாட்டை அடையலாம். எரிபொருள் பாவனையில் பொதுச்சேவையில்; அத்தியாவசிய நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படலாம். 

சிங்கப்பூரில், நகரத்திற்குள் நுழையும் போது ஒரு காரில் குறைந்தது நான்கு பேர் இருக்க வேண்டும் என்பது காட்டமான சட்டம். இது மேம்பட்ட பொது போக்குவரத்து அமைப்பை சுட்டிக்காட்டுகின்றது. இவற்றின் மூலம் அங்கு தேவையற்ற தனியார் வாகனங்களின் பயன்பாடு குறைந்துள்ளது. இத்தகைய முறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் செலவுக் குறைப்பை மிகத் தெளிவாகக் கொண்டுவரலாம்;. இவ்வாறான உதாரணங்களுடன் இந்த நாட்டுக்குத் தேவையான செல்வத்தை உருவாக்குவது எமக்கு சவாலா? ஏன்பது எனது கேள்வி.

தேவையற்ற செலுலவுக் குறைப்பும் டிஜிட்டல் பயன்பாடும்

நம் நாடு நாட்டின் தேவையற்ற செலவுகள் பற்றி அதிகம் பேசுவதில்லை. குறிப்பாக தேவையற்ற நிவாரணம், நாட்டிற்கான ஆடம்பரச் செலவு அல்லது பிற அத்தியாவசிய செலவுகள் எனக் குறிப்பிடலாம். இதனால்தான் இவை சமூகச் செலவுகள் எனக் குறிப்பிடப்படுகின்றன. ஆனால் இந்த சமூக செலவுகள் உட்பட அனைத்து சுமைகளும் இறுதியில் மக்கள் மீது விழுகிறது. 

விலைவாசி உயர்வுக்கு மக்கள்தான் காரணம். ஏனெனில் நமது செலவுகள் அதிகரித்தாலும் வருமானம் அதிகரிக்காது. எனவே முடிந்தவரை செலவுகளைக் குறைக்க புதிய வழிகளைத் தேட வேண்டும். உற்பத்தித்திறனை அதிகரிப்பது அத்தகைய ஒரு முறையாகும். சமீப காலமாக கொரோனாவுடன் எல்லாவகையிலும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதனால் டிஜிட்டல் முறைக்கு ஏற்ப செலவுகளை குறைத்து உற்பத்தியை அதிகரிக்கலாம். 

அரச ஊழியர்களுக்கான அதிகரித்த செலவு

கடந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தைப் பார்க்கும் போது, அதில் பெரும்பகுதி அரச ஊழியர்களின் சம்பளத்துக்கே செலவிடப்பட்டுள்ளது. அதற்கேற்ப அரசின் வருவாய் எங்கே போகிறது என்பதை நினைத்துப் பார்க்க முடிகிறது. இந்த நிலையில் மற்ற அரசு செலவினங்களும் கடுமையாக உயர்ந்துள்ளன. ஆனாலும் அந்தச் செலவுகளுடன் ஒப்பிடுகையில் இச்சேவைகளின் மூலமான வருவாய் வளர்ச்சி அடைந்திருக்கவில்லை. இதனால், பட்ஜெட் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இதுவும் அதிக கடன் வாங்க வழிவகுத்தது. 

அரச பொதுச்செலவில்; வழங்கப்படும் நிதியை செலவழிப்பதற்கு பதிலாக, பல்வேறு துறைகள், பெருநிறுவனங்கள், சில வருவாய் ஆதாரங்களுக்கு திரும்புவதற்கு இது ஒரு வாய்ப்பாக பயன்படுத்தப்படலாம். குறைந்தபட்சம் 25 சதவிகிதம் செலவைக் குறைப்பது அவசியம். அந்த நிறுவனங்கள் அதிகமாக தேவையில்லாமல் வெட்டப்படும் பணத்தை கண்டுபிடிக்க திட்டங்களை உருவாக்க வேண்டும். இந்த நிலைக்கு அரச நிறுவனங்களை வழிநடத்துவது நாடு பெருமளவு பணத்தை சேமிக்க வழி வகுக்கும்.

தற்போதைய சூழ்நிலையில், எதிர்காலத்தில் கடன் பெறுவது மிகவும் கடினமாக இருக்கும். சர்வதேச இறையாண்மை பத்திரங்கள் மூலம் கடன் வாங்குவது மிகவும் கடினம் என்பது தெளிவாகிறது. கடனை செலுத்தாததற்காக சர்வதேச கடன் தர நிர்ணய நிறுவனங்களால் இலங்கை வங்குரோத்தான நாடாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது நாடு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது என்பதனைக் காட்டுகின்றது. 

நாட்டின் வருமானம் கணிசமாகக் குறைந்துள்ளது, அதற்கேற்ப செலவுகளை சரிசெய்யத் தவறியதன் விளைவாக நாடு இந்த வலையில் விழுந்துள்ளது. அரச ஊழியர்களின் எண்ணிக்கை 800,000 இலிருந்து 1.5 மில்லியனாக அதிகரித்துள்ளது. செலவினம் எந்த அளவிற்கு அதிகரித்துள்ளது என்பதை இது உணர்த்துகிறது. இந்த அதிகரித்த செலவுகளுடன் ஒப்பிடுகையில் அவர்கள் ஒரு சிறப்பு சேவையைப் பெற்றுள்ளனர் என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும் உற்பத்தி அதிகரித்திருந்தால் பிரச்சனை இல்லை. ஆனால் என்ன நடக்கிறது என்றால் சமூக செலவுகள் அதிகரித்து கடுமையான நெருக்கடிகள் எழுகின்றன. இன்று, இத்தகைய நெருக்கடிகள் முழு வீச்சில் உள்ளன. இதற்கு சரியான கட்டுப்பாடு நடைமுறை அரசாங்கத்திடம் இல்லாததே காரணம்.

அரச வளங்களின் அநாவசியப் பயன்பாடு

அரச வளங்கள் தம்மிடம் இருப்பதால் அவற்றை வீணடிக்க யாருக்கும் உரிமை இல்லை. லீ குவான் ஜீ அன்று தனி நபர் சலுகைகளை தரமாட்டேன் என்றும் பதிலாக கணிசமான சம்பளம் தருவதாகவும் தெரிவித்திருந்தார். இதன்படி, சம்பளம், இதர கொடுப்பனவுகள், வாகனங்கள், தொலைபேசிகள், ஏனைய சலுகைகள் அரசியலை நடாத்தும் அமைச்சர்களுக்கோ பா.ம உறுப்பினர்களுக்கோ வழங்கப்படவில்லை. 

நாட்டை அபிவிருத்தி செய்வதில் லீ குவான் ஜீ அத்தகைய நடவடிக்கையை எடுத்தார். அவர்களிடம் ஏதாவது வளம் இருந்தால், அதை சிக்கனமாக பயன்படுத்துவார்கள். ஆனால், இங்கு அரச வளங்களைப் பயன்படுத்துவதில், பலர் தங்களுக்கு சொந்தமானவை நினைத்து, கவனக்குறைவாகவோ, சிக்கனமில்லாமலோதான் பயன்படுத்துகின்றனர். அதற்குக் காரணம், அவர்கள் செலவுகளைப் பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை. 

அதனால்; சரியான திட்டமிடல் இருந்தால், கழிவு மற்றும் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தலாம். இது உற்பத்தித்திறன் மற்றும் செயல்திறனை அதிகரித்து ஆற்றலை அளிக்கிறது. இன்று நாம் எதிர்கொள்ளும் நெருக்கடியை சமாளிக்க, இதுபோன்ற துறைகளிலும் கவனம் செலுத்த வேண்டும்.

தொழில்துறை உலகம் நான்காவது புரட்சிக்கு செல்ல வேண்டும் என்று பலர் நினைக்கிறார்கள். அந்த தொழில்நுட்பக் கல்வியை வழங்குவதற்கு இந்த நாட்டில் உள்ள நிறுவனங்கள் போதுமானதாக இல்லை. இந்தியாவில் புது டெல்லி, பெங்களூர் போன்ற பகுதிகள் தொழில்நுட்பத்தால் வளர்ச்சியடைந்துள்ளன. 

முதலீட்டு ஓட்டம் தொழில்நுட்பத்தால் ஏற்படுகிறது. இவற்றில் அதிக கவனம் இல்லாமல் இவற்றை உருவாக்க முடியாது. தற்போதைய சூழ்நிலையில், செலவினங்களைக் குறைக்கவும், அரசின் சிரமங்களை சமாளிக்கவும் அரசு-தனியார் கூட்டாண்மை மாதிரியை பின்பற்ற வேண்டும். அதன் மூலம், லாபம், செயல்திறன், பொது சேவை போன்ற அனைத்தையும் சமநிலைப்படுத்த முடியும். எனவே, சரியாக என்ன செய்ய வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம். அது காலத்தின் கட்டாயமும் கூட.

0 comments:

Post a Comment