ADS 468x60

29 May 2022

நம்ம ஊரு நல்ல ஊரு இப்ப ரொம்பக் கெட்டுப்போச்சுங்க

 குடியிருப்பு என்பது தேத்தாத்தீவின் ஜீவநாடி. மட்டக்களப்புக்கே உரிய வனப்பினையும், இதன் அருகே வளைந்தோடும் மட்டு வாவி வளம்சேர்க்க அதனருகே மருத மண்ணையும், தமிழ் பண்பாடையும் பறைசாற்றும் பண்புடைய கிராமம். தேத்தாத்தீவின் தாய் எனச் சொல்லுமளவுக்கு அதன் வயது பழமைவாய்தது. அங்கு கிட்டத்தட்ட 50 க்கும் மேல் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் அதிகம்பேர் வயல் மற்றும் மீன்பிடியில் ஈடுபட்டு தமது ஜீவனோபாயத்தினை நடாத்தி வருகின்றனர். இவர்கள் பாடசாலைகள், ஆலயங்கள், ஏனைய அரச சேவைகளைப் பெற இக்கிராமம் இருந்து கிட்டத்தட்ட 2 கி.மீ பயணம் செய்து பிரதான வீதியை அடைய ஒரே பாதையினையே பயன்படுத்துகின்றனர். இப்பாதையூடாகவே சிறியவர் தொடங்கி முதியவர் வரை பயன்படுத்தி வருகின்றனர். 

அந்தப் பாதையினையே நீங்கள் இங்கு காண்கின்றீர்கள். 

ஆந்த மக்கள் மாத்திரமல்ல, இதனால் விவசாயிகள், மீன்பிடித் தொழிலாளர்கள், ஆலயத்துக்கு செல்லுகின்றவர்கள் என பலர் இதனைப் பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த ஒரே ஒரு பாதையில் ஒரு தடவையாவது சென்று பாருங்கள் அப்போது புரியும். கண்ட கண்ட இடமெல்லாம் கழிவுப் பொட்கள், உண்ட மிச்சமும் உருக்குலைந்த மிருங்களின் உடலும், கோழிக் கழிவும் குப்பைப் பையும் என ஒரே நரகலோகப் பாதைபோல நாத்தம் எடுக்கின்றது. தவிரவும், மரக்குத்திகளும், மலக்கழிவுகளும், மண்ணாகாப் பிளாஸ்ட்டிக்கும் பீங்கானும் இங்கு செருப்பில்லாமல் நடக்கும் பலரை சிரமத்துக்குள்ளாகியுள்ளது.

இந்தப் பாதையின் ஆரம்பத்தில் குப்பைகளை கொட்டவேண்டாம் என விசாலமாக அறிவித்தல் பதாதை தொங்கவிடப்பட்டும், கண்கெட்டவர்கள் போலும், மற்ற மனிதர்களை மதிக்காத மதிகெட்டவர்கள் போலும், சுயநலத்தின் முழுவடிவமாக, மனிதாபிமான் இல்லாத மரக்கட்டைகள், ஊர், மண், மக்களை நேசிக்காத சுத்த கேவலம் கெட்டவர்களே இதனை செய்ய வல்லவர்கள். ஊங்க வீட்டு முற்றத்தில் இவற்றைக் கொண்டு கொட்டுவீர்களோ! இந்தப் பாதையைப் பயன்படுத்திப் பாடசாலைக்குச் செல்லும் குழந்தைகளையாவது நீங்கள் நினைத்துப் பார்க்கவில்லையா?

வீட்டுக்கு வீடு கோயில்கள், கழகங்கள், சங்கங்கள் இருந்தும் இந்த அசிங்கத்தைத் தட்டிக்கேட்க யாரும் இல்லை, ஏன் குடியிருப்பு மக்கள் என்பதனாலா?

குப்பை போடவேண்டாம் என்ற அரச அதிகாரிகள் குப்பை போட்ட சட்டத்துக்கு மதிப்பளிக்காதவர்களை சட்டத்தின் முன்நிறுத்தாமல் இருப்பதற்கா சம்பளம் பெறுகின்றீர்கள்!

சிங்கப்பூரில் ஒரு சிறிய தூசியை வீசினாலும் தண்டப்பணம் கட்டவேண்டும் என்ற ஒழுக்கமே அந்த நாடு இன்று அபிவிருத்தியடைந்த நாடுகளின் பட்டியலில் இருப்பதற்குக் காரணம் என்பதனை ஞாபகத்தில் வையுங்கள்!

இருக்கின்ற மரத்தை அழிப்பதற்கும், இருக்கின்ற குளத்தைக் கிழிப்பதற்கும் நல்ல மண்ணையெல்லாம் நாசமாக்கவும் உங்களுக்கெல்லாம் யாரடா அதிகாரம் தந்தது. இவ்வாறான சீர்கேடுகளை வைத்துக்கொண்டு சிறப்படைய முடியாது. அனைவரும் இதற்குப் பதிலளிக்க வேண்டும்.

இங்கு வீதிகளில் வீசி எறியப்படும் குப்பைகளால் தொற்று நோய் அபாயம் சுகாதார சீர்கேடுகள் மற்றும் துர்நாற்றத்தால் அசௌகரியங்கள் என்பன இந்த மக்களுக்கு ஏற்படுகின்றன.

மழைகாலத்தில் இலையான்களின் பெருக்கம் அதிகளவில் காணப்படும். அந்த நிலையில் வீதிகளில் வீசப்படும் குப்பைகளில் இருந்து பெருகும் இளையான்களால் அருகில் உள்ள இக்கிராம வீடுகளில் இலையான்களின் பெருக்கம் அதிகமாக காணப்படுகின்றது. இதனால் தொற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகம் உண்டு. இங்கு குறிப்பாக இப்பாதையைப் பயன்படுத்தும் கர்ப்பிணி தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளை தொற்று நோய் மிக விரைவில் தொற்றிக்கொள்ளும் அபாயம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இளைஞர்கள் ஒருதடவை சென்று பாருங்கள் முடியுமானால் அவற்றை துப்பரவு செய்து இந்தக் குடிமக்களுக்கு உதவுங்கள். குடியிருப்பு மக்கள் இதில் விழிப்பாக இருக்க அவர்களை விழிப்படையச் செய்யுங்கள், அவர்களிடையே ஒரு குழுவை ஸ்த்தாபித்து அதன் மூலம் கண்காணிப்பினை மேற்கொள்ளுங்கள். 

ஒழுக்கம் மிக்க குடிகள் வீட்டில், கிராமத்தில் இருந்து உருவாகனும், அதுதான் அந்த மாவட்டத்துக்கு அழகு, அப்போதுதான் அந்த நாட்டுக்கே அது நிலைபேறான அபிவிருத்தி மற்றும் வளர்சியைக் கொண்டு வரும்.


0 comments:

Post a Comment