ADS 468x60

28 December 2020

மாரிகாலமும் மாணவக் குழந்தைகளும்... கவனம்!

அடடா மழைடா அட மழைடா.... ஏனச் சிறுவர்கள் இந்தக் காலத்தில் கொரோணாவையும் பொருட்படுத்தாமல் கொண்டாடியும் அதே நேரம் பலர் திண்டாடியும் வருகின்றனர். கடந்த சில நாட்களாக எமது கிழக்கு மாகாணம் எங்கும் அடை மழை பொழிந்து கொண்டிருக்கிறது. மழை என்றாலே சிறுவர்களுக்குக் கொண்டாட்டம்தான். அதேபோல் மழையை நாம் எவ்வளவுக்கு அதிகம் ரசிக்கின்றோமோ, அந்த அளவு அதில் ஆபத்தும் உள்ளது. இந்த காலத்தில் பொதுவாக பல நோய்கள் வரும் வாய்ப்புக்கள் அதிகம். ஆகவே குழந்தைகளே மழை நீர் நமக்கும் பூமிக்கும் எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு மழைக் காலத்தில் எச்சரிக்கையாக செயல்பட வேண்டியதும் அவசியம் அன்பு மாணவர்களே!

இந்த மழைகாலத்தில் மிக மிக ஸ்தம்பிதமாகும் ஒன்று போக்குவரத்து. அது நகரமானாலும் கிராமமானாலும் அபிவிருத்தியை சரியாக செய்யாத நமக்கு ஏற்படும் ஒன்றுதான். ஆதனால் பல கிராமங்களுக்கான போக்குவரத்து இயந்திரப்படகுகள் மூலம் மிக ஆபத்தான சூழலில் நடைபெற்று வருவதை நாம் அவதானித்து வருகின்றோம். 

சாதாரணமாகவே போக்குவரத்து நெரிசல் நிறைந்த தெருக்களில் கவனமாகப் பயணம் செல்ல வேண்டும். அதிலும் மழை நேரத்தில் பாதையில் உள்ள மேடு, பள்ளம், திறந்து கிடக்கும் சாக்கடைகள் கண்ணுக்குத் தெரியாது. ஆங்காங்கே மரக் கிளைகள் கொப்பாக முறிந்து விழுந்துகொண்டிருக்கின்றன. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகையால், வீட்டை விட்டு வெளியே செல்லும்போது பெரியவர்களின் துணையோடு மாணவர்கள் பாதுகாப்பாக செல்லுங்கள். வயது முதிர்ந்தவர்கள் வாகனம் ஓட்டும்போது கட்டாயம் தலை கவசம் அணிந்துகொண்டு செல்லுங்கள். பாதசாரிகள் என்றால் கூடுமானவரை நடை பாதையில்; மட்டும் நடந்து செல்லுங்கள்.

மழைக்காலத்தில் கொதிக்கவைத்த சுத்தமான குடிநீரை நிறைய பருக வேண்டும். தண்ணீர் மூலம் பரவும் நோய்களுக்கு எதிரான எதிர்ப்புச் சக்தியை இது உங்களுக்குத் தரும். நகம் கடித்தல், கண்களை கசக்குதல் போன்றவை அறவே செய்யக்கூடாதவை. இப்படி கவனமாகச் சிலவற்றை கடைப்பிடித்து மழையை ரசிக்கலாம்.

மழைகாலங்களில் பரவும் அபாயமான நோய்கள்

மழைகாலமே ஒரு ஆபத்து அதிலும் இவ்வாறு தொடர்ந்து அடைமழை பெய்தால் நிச்சயம் நோய் ஆபத்துக்கள் வர அதிக வாய்ப்புக்கள் உள்ளது. நாம் கொவிட்டினால் பலவகையிலும் ஆட்டம் கண்டுள்ளோம் அந்த நிலையில் ஆஸ்பத்திரி போய் குணப்படுத்த அச்சமாக இருக்குமல்லவா! ஆதனால் மிகக் கவனமாக நடந்துகொள்ளுதல் வேண்டும். அதிலும் சில நோய்களை விரைவில் குணப்படுத்தலாம் மற்றும் சில நோய்கள் உயிருக்கே ஆபத்தாகக் கூட கொண்டு செல்லும். ஆகவே மழைக்காலத்தில் வரும் பொதுவான நோய்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில் அந்த நோய்களைப் பற்றி முன்பே தெரிந்து கொண்டால், அதிலிருந்து எளிதில் தப்பிக்கக்கூட முடியும்.

மலேரியா

பருவக்காலத்தில் வரும் நோய்களின் பட்டியலில் முதல் இடத்தை பிடிப்பது மலேரியா தான். மலேரியா என்னும் நோயானது பெண் அனாஃபிலிஸ் நுளம்புகளால்; ஏற்படுகிறது. இவ்வகை நுளம்புகள் தண்ணீர் தேங்கியிருக்கும் இடத்தில் இனப்பெருக்கமாகும்.

எனவே மலேரியாவின் இடர்பாட்டை தடுக்க, வீட்டின் தண்ணீர் தொட்டியை அடிக்கடி கழுவ வேண்டும். காய்ச்சல், நடுக்கம், தசை வலி மற்றும் சோர்வு ஆகியவைகள் தான் மலேரியாவின் அறிகுறிகளாகும்.

வயிற்றுப் போக்கு

மழைக்காலத்தில் எளிதில் தாக்கும் நோய்களில் வயிற்று போக்கும் ஒன்று. சுத்தமில்லாத உணவை உண்பதாலும், தண்ணீரை பருகுவதாலும் ஏற்படும். பொதுவாக வயிற்றுப் போக்கில் இரண்டு வகைகள் உண்டு.

அவை கடுமையான வயிற்றுப் போக்கு (அக்யூட்டையரியா) மற்றும் தீவிரமான வயிற்றுப் போக்கு (குரோனிக் டையரியா). இவை இரண்டையுமே வரும் முன் தடுத்து நிறுத்தலாம். அப்படியே வந்தாலும் கூட உரிய சிகிச்சை கொண்டும் குணமாக்கலாம்.

அதற்கு முதலில் செய்ய வேண்டியது சுத்தத்தைக் கடைப்பிடிப்பது தான். அதில் உண்ணும் முன் கையை கழுவுவது, எப்போதும் வெந்நீரைக் குடிப்பது போன்றவை அடங்கும்.

டெங்கு காய்ச்சல்

மழைக்காலத்தில் நுளம்புகளால் ஏற்படுவது. இந்த காய்ச்சல் வந்தால், காய்ச்சலுடன் உடல் வலி, மூட்டு வலி மற்றும் தடிப்புகள் போன்றவை உண்டாகும். இந்த நோய் வருவதற்கான முக்கிய காரணம் டைகர் நுளம்புகள் தான். இந்த கொசுக்கள் வராமல் தடுப்பதற்கு பூச்சி விலக்கிகளைப் பயன்படுத்த வேண்டும். மேலும் நல்ல உடையை அணிந்து, முழுமையாக உடலை மூடிக் கொள்ள வேண்டும்.

சிக்கன்குனியா

ஏய்டெஸ் அல்போபிக்டஸ் நுளம்புகள் கடிப்பதால் வருவது தான் சிக்கன்குனியா. இந்த நுளம்புகளானது தேங்கிய நீரில் தான் அதிகம் இனப்பெருக்கமாகும். மேலும் இது பகல் நேரத்தில் தான் கடிக்கும்.

திடீரென வரும் காய்ச்சலோடு சேர்ந்து வரும் மூட்டு வலி தான் இதற்கான முக்கிய அறிகுறி. இதனை தடுக்க தண்ணீர் தொட்டிகளை சீரான முறையில் சுத்தப்படுத்தி, கொசுக்களை அழிக்கும் பூச்சி மருத்துகளைப் பயன்படுத்த வேண்டும்.

டைபாய்டு

டைபாய்டு என்ற நோய், தண்ணீரினால் வரும் நோயாகும். இது அதிகமாக பரவுவது மழைக்காலத்தில் தான். டைபாய்டு வர காரணமாக இருப்பது எஸ்.டைஃபி என்ற பாக்டீரியா. அசுத்தமான உணவு மற்றும் தண்ணீரை உபயோகிப்பதால், இந்த நோய் நம்முள் வந்து விடும். மேலும் இந்த நோய் சுகாதாரமற்ற சுற்றுப்புற சூழலை உருவாக்குவதாலும் பரவும்.

இந்த நோய்க்கான அறிகுறிகளாவன காய்ச்சல், தலைவலி, சோர்வு, வலி மற்றும் தொண்டை புண் ஆகியவைகள் தான். டைபாய்டு வராமல் தடுக்க கைகளை அடிக்கடி கழுவ வேண்டும். தெருவோரம் விற்கும் உணவுகளை சாப்பிடக்கூடாது மற்றும் சத்தான பானங்களை அதிகமாக குடிக்க வேண்டும்.

வைரஸ் காய்ச்சல்

பொதுவாக வைரஸ் காய்ச்சல் அனைத்து காலங்களிலும் வருவதுண்டு. மிதமான முதல் அதிகமான காய்ச்சல் தான் இதற்கான அறிகுறி. இந்த காய்ச்சல் 37 நாட்கள் வரை நீடிக்கும். மேலும் இதனுடன் சளியும் இருமலும் சேர்ந்து இருக்கும்.

கொலரா

பருவக்காலத்தில் வரும் ஆபத்தான வியாதி தான் கொலரா. இது அசுத்தமான உணவு மற்றும் தண்ணீரை பயன்படுத்துவதால் வரும். மேலும் சுத்தமில்லாமல் இருப்பதாலும் உண்டாகும். இந்த காலரா இருந்தால், கடுமையான வயிற்றுப் போக்குடன் பேதியும் சேர்ந்து இருக்கும். ஆகவே சுத்தமான தண்ணீரை குடிப்பதாலும், சுத்தமான சுற்றுசூழலில் இருப்பதாலும் காலராவை தடுக்கலாம்.

லெப்டோஸ் பிரோசிஸ்

லெப்டோஸ் பிரோசிஸை வீல்'ஸ் சிண்ட்ரோம் என்றும் அழைக்கலாம். இந்த நோய் அசுத்தமான தண்ணீரை பயன்படுத்துவதாலும், குடிப்பதாலும் வருவதுண்டு.

தலை வலி, தசை வலி, காய்ச்சல், நடுக்கம் மற்றும் சுழற்சிகள் போன்றவைகள் தான் இதற்கான அறிகுறிகள். இந்த நோய் வராமல் தடுக்க வேண்டுமானால், வெளியில் செல்லும் போது பாதங்களை நன்றாக மூடிக்கொண்டு செல்ல வேண்டும். குறிப்பாக உடலில் ஏதேனும் வெட்டு காயங்கள் ஏற்பட்டிருந்தால், கவனமாக இருக்க வேண்டும்.

மஞ்சள் காமாலை

மஞ்சள் காமாலையை ஏற்படுத்தும் கிருமிகள், சுத்தமில்லாத உணவுகள் மற்றும் தண்ணீரின் மூலம் வருகிறது. சோர்வு, மஞ்சள் நிற சிறுநீர், வாந்தி மற்றும் ஈரல் செயல் பிறழ்ச்சி ஆகிவைகள் தான் இதன் அறிகுறிகள்.

இதற்கு கொதிக்க வைத்த தண்ணீரை குடித்து, தெருவில் விற்கும் உணவை சாப்பிடாமல் இருந்தால், மஞ்சள் காமாலையில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம். வயிற்றில் ஏற்படும் தொற்று இந்த காலத்தில் இரைப்பை குடல் சுழற்சி போன்ற தொற்றுக்கள், வயிற்றில் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

இது வாந்தி, பேதி மற்றும் வயிற்று வலியை உண்டாக்கும். இதனை தடுக்க தெருவோரம் விற்கும் உணவுகளை தவிர்த்து, கொதிக்க வைத்த தண்ணீரையும், அதிக அளவில் சத்தான பானங்களையும் குடிக்க வேண்டும்.

ஆதாரம்: விகஸ்பீடியா, இந்து தமிழ் திசை


0 comments:

Post a Comment