ADS 468x60

23 February 2026

பெண் உழைப்பாளர் பங்களிப்பின் புதிய தர்க்கம்

இலங்கை (Sri Lanka) வர்த்தகக் கூட்டறைகளிலும், ஆட்சேர்ப்பு அதிகாரிகளுடனான கலந்துரையாடல்களிலும், அனுபவமிக்க பெண்கள் ஏன் பணியிலிருந்து மாயமாகிறார்கள் என்பதற்கான விளக்கம் மிகவும் அமைதியான உறுதியுடன் முன்வைக்கப்படுகின்றது. அது அவர்களின் தனிப்பட்ட தெரிவு என்றும், குடும்ப முன்னுரிமைகள் மாறிவிட்டன என்றும் ஒரு நேர்த்தியான கதை புனையப்படுகின்றது. ஆனால், புள்ளிவிவர யதார்த்தங்களுக்கு மத்தியில் இந்தக் கதை தனது நம்பகத்தன்மையை இழக்கின்றது. பல்கலைக்கழகங்களில் பல துறைகளிலும் பெண்களின் சேர்க்கை அதிக சதவிகிதம் (Percentage) காணப்படுகின்ற போதிலும், பெண்களின் தொழிலாளர் படைப் பங்களிப்பு (Female Labour Force Participation - FLFP) பல ஆண்டுகளாக முப்பதுகளின் கீழ்ப்பகுதியிலேயே தேங்கிக் கிடக்கின்றது. 

இது தனிமைப்படுத்தப்பட்ட தனிப்பட்ட தெரிவு அல்ல; மாறாக, இது ஒரு வடிவமைக்கப்பட்ட கட்டமைப்பு ரீதியான வெளியேற்றமாகும் (Patterned exit). ஒரு தொடர்ச்சியான வெளியேற்றம் என்பது எப்பொழுதும் கட்டமைப்பின் வடிவமைப்பில் உள்ள பிழையையே சுட்டிக்காட்டுகின்றது. நவீன முகாமைத்துவத்தின் (Management) தந்தை பீட்டர் ட்ரக்கர் (Peter Drucker), "முகாமைத்துவம் என்பது மனிதர்களைச் சிறப்பாகச் செயல்பட வைப்பதே" என்றார். ஆனால், தற்போதைய கட்டமைப்பு மனிதர்களைச் சிறப்பாகச் செயல்பட வைக்கிறதா அல்லது அவர்களை வெளியேற்றுகிறதா என்பது ஆழமாகச் சிந்திக்க வேண்டிய வினா.

கொழும்பு மற்றும் அதனைத் தாண்டிய பகுதிகளில் உள்ள நடுத்தர தொழில்நிலை (Mid-career) பெண்களின் நிலைப்பாட்டை ஆராயும் போது, ஒரு நிலையான சித்திரம் வெளிப்படுகின்றது. நீண்ட பயண நேரங்களைக் கொண்ட நெரிசலான வீதி (Road) அமைப்பு, அலுவலக நேரங்களுடன் முரண்படும் பாடசாலை (School) நேர அட்டவணைகள், நம்பகமான குழந்தை பராமரிப்பு வசதிகளின் பற்றாக்குறை மற்றும் குடும்பப் பராமரிப்பு என்பது பிரதானமாகப் பெண்களுக்கானது என்ற கலாச்சார எதிர்பார்ப்பு ஆகிய அனைத்தும் ஒரு பெண்ணின் தொழில் வாழ்க்கை உச்சத்தை அடைய வேண்டிய கட்டத்திலேயே ஒன்றிணைகின்றன. இத்தகைய சூழலில், கட்டணத்துடன் கூடிய வேலைவாய்ப்பிலிருந்து பின்வாங்குவது மட்டுமே குடும்ப கட்டமைப்பைப் பாதுகாப்பதற்கான ஒரே சாத்தியமான முடிவாக மாறுகின்றது. ஆயினும், பல நிறுவனங்கள் ஒரு பாரிய முரண்பாட்டை அமைதியாகப் பேணி வருகின்றன. பெண்கள் தமது தொழில் மற்றும் குடும்பப் பராமரிப்பு ஆகிய இரு பெரும் சுமைகளையும் எவ்வித நெகிழ்வுத்தன்மையுமின்றிச் சுமக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த இரட்டைச் சுமையைத் தாங்க முடியாமல் அவர்கள் வெளியேறும் போது, அது அவர்களின் தொழில் இடைவெளியாகக் (Career gap) கருதப்பட்டு, மீண்டும் அவர்கள் தொழிலுக்குத் திரும்ப முனையும் போது அது ஒரு தகுதியீனமாகப் பார்க்கப்படுகின்றது.

நவீன ஆட்சேர்ப்பு முறைமைகளில் பயன்படுத்தப்படும் விண்ணப்பக் கண்காணிப்பு அமைப்புகள் (Application Tracking Systems - ATS), தொழில் இடைவெளிகளை நிராகரிக்கும் வகையிலும், தடையற்ற தொழில் வரலாற்றை அங்கீகரிக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இது ஒரு இரட்டைத் தண்டனையாகும். கலாச்சாரக் கடமைகளுக்கும் வேலைக்குமான அழுத்தத்தில் சிக்கித் தவிக்கும் பெண்களை நிறுவனம் சார்ந்த கட்டமைப்பு வெளியேற்றுகின்றது; பின்னர், அதே பெண்கள் மீள இணைய முற்படும் போது இந்தக் கண்காணிப்பு அமைப்புகள் அவர்களைத் தடுத்து நிறுத்துகின்றன. இது ஒரு முகாமைத்துவத் தோல்வி மட்டுமல்ல, ஒட்டுமொத்தப் பொருளாதாரத்திற்கும் பாரிய இழப்பாகும். வெளியேறும் ஒவ்வொரு அனுபவமிக்க தொழில்முறையாளரும், மனித வளப் புள்ளிவிவரங்களில் (HR dashboards) அரிதாகவே தோன்றும் திரட்டப்பட்ட தீர்ப்புத் திறன் (Accumulated judgement), வாடிக்கையாளர் பரிச்சயம் மற்றும் நிறுவன உள்நிலை அறிவாற்றல் ஆகியவற்றையும் தன்னுடனேயே எடுத்துச் செல்கின்றார்.

இலங்கை ஏற்கனவே வயதாகும் தொழிலாளர் படையையும், திறமையான இளைஞர் ஆற்றல் (Youth Energy) வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்வதையும் எதிர்கொண்டுள்ளது. இந்த நிலையில், நடுத்தர தொழில்நிலைப் பெண்களை அமைப்பிலிருந்து கசிய விடுவதும், அவர்கள் மீள நுழைவதைத் தடுப்பதும் பொருளாதார அழுத்தத்தை மேலும் அதிகரிக்கவே செய்யும். தற்போதைய பூகோள அரசியல் செல்வாக்கு (Geopolitics influence) மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில், நாடு டொலர் (Dollar) வருவாயை அதிகரிக்கவும் உலகளாவிய சந்தையில் போட்டியிடவும் வேண்டியுள்ளது. "பொருளாதார வளர்ச்சி என்பது மனித சுதந்திரத்தை விரிவுபடுத்துவதற்கான ஒரு கருவியாகவே அமைய வேண்டும்" என்ற அமர்த்தியா சென்னின் (Amartya Sen) தத்துவத்திற்கமைய, பெண்களைத் தொழிலாளர் படையிலிருந்து அந்நியப்படுத்தும் எந்தவொரு கட்டமைப்பும் உண்மையான அபிவிருத்தியைத் தரப் போவதில்லை. விவசாயம் (Agriculture) செய்யும் ஒரு உழவியல் ஆய்வாளன், நிலத்தின் தன்மைக்கேற்ப விதைகளைத் தூவி, இடைத்தரகர்கள் (Middlemen) இன்றி விளைச்சலைப் பாதுகாப்பதைப் போல, நிறுவனங்களும் தமது மனித வளத்தின் தன்மைக்கேற்பச் சூழலை உருவாக்கி, தடையின்றித் திறன்களை அறுவடை செய்ய வேண்டும். ஆதி சங்ராச்சாரியார் (Adi Shankaracharya) கூறுவது போல, "அறியாமையே அனைத்துத் துன்பங்களுக்கும் ஆணிவேர்." பெண்களின் தொழில் இடைவெளியைத் திறமையின்மையாகக் கருதும் அறியாமையை நிறுவனங்கள் முதலில் களைய வேண்டும்.

பெண்கள் மீண்டும் தொழிலுக்குத் திரும்புவதை ஒரு ஒற்றைப் பாதையாகவே நிறுவனங்கள் கருதுவது ஒரு பாரிய மூலோபாயத் தவறாகும். தொழிலாளர் படைக்கு மீளத் திரும்புவது ஒரு பல அடுக்கு முறையாகப் (Tiered system) புரிந்துகொள்ளப்பட வேண்டும். மாறுபட்ட திறன்களையும் சூழ்நிலைகளையும் கொண்ட பெண்கள் வெவ்வேறு நிலைகளில் மீள இணைவார்கள்; ஒரு புத்திசாலித்தனமான தொழிலாளர் சந்தை அவர்களை அதற்கேற்ப உள்வாங்கிக் கொள்ளும். இந்த யதார்த்தத்தைப் பின்வரும் தரவு அட்டவணை (Data Table) தெளிவாக விளக்குகின்றது:

மீள்நுழைவுப் பாதை (Re-entry Pathway)

செயற்பாட்டு மாதிரி (Operational Model)

பொருத்தமான துறைகள் (Suitable Sectors)

நிறுவன நன்மைகள் (Corporate Benefits)

அடுக்கு 1: முழுமையான தொலைநிலை (Fully Remote)

வீட்டிலிருந்தபடியான வேலை (Home-based Delivery)

வாடிக்கையாளர் சேவை, தரவுப் பகுப்பாய்வு, டிஜிட்டல் சந்தைப்படுத்தல்

குறைந்தளவிலான உட்கட்டமைப்புச் செலவு, தொடர்ச்சியான வெளியீடு

அடுக்கு 2: கலப்பு முறை (Hybrid Work)

சுழற்சி முறையிலான அலுவலக மற்றும் தொலைநிலை வேலை

திட்ட முகாமைத்துவம், நிதி ஆய்வுகள், மனித வள மேம்பாடு

அணிகளின் ஒருங்கிணைப்பு மற்றும் மீண்டெழு திறன் (Resilience)

அடுக்கு 3: சுழற்சி மற்றும் ஒப்பந்தம் (Rotational/Contract)

குறுகிய காலத் திட்டங்கள், ஆலோசனைச் சேவைகள்

இ கொமர்ஸ், சட்டம், ஆராய்ச்சி, தணிக்கை

குறிப்பிட்ட நிபுணத்துவம், குறைவான ஆட்சேர்ப்பு அபாயம்

அடுக்கு 4: முழுநேரப் பணி (Full-Time Permanent)

வழமையான அலுவலக வேலை நேரம்

மூலோபாயத் தலைமைத்துவம், வணிக வளர்ச்சிப் பிரிவுகள்

நீண்டகால நிறுவன நிலைத்தன்மை

 

இந்த அடுக்கில், முதலாவதும் உடனடியாக அளவிடக்கூடியதுமான தளம் முழுமையான தொலைநிலை வேலையாகும் (Fully remote work). பெளதீக இருப்பு அவசியமில்லாத சேவைத் துறைகளில் நாடு ஏற்கனவே சிறந்த நிலையில் உள்ளது. அழைப்பு மையங்கள், உள்ளடக்க உருவாக்கம், மனித வளச் செயலாக்கம் மற்றும் மெய்நிகர் நிர்வாகச் சேவைகள் போன்றவற்றை ஒண்லைன் (Online) ஊடாக எவ்விதத் தரக்குறைபாடுமின்றி முன்னெடுக்க முடியும். கல்வி நிறுவனங்கள் மற்றும் சுகாதாரச் சேவை வழங்குநர்களும் தகுதிவாய்ந்த பெண்களைத் தொலைதூர ஆற்றுப்படுத்துநர்களாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும். நாட்டை ஒரு ஒற்றை டிஜிட்டல் வலயம் (Zone) ஆக மாற்றுவதன் மூலம், இந்தக் குறைந்தபட்ச வளத்தைப் பயன்படுத்தி உச்சப் பலனை அடைய முடியும்.

இரண்டாவது அடுக்கு கலப்பு முறைப் பணியாகும் (Hybrid work). இது பல தொழில்முறைப் பெண்களுக்கு மிகவும் யதார்த்தமான ஒரு பாலமாக அமைகின்றது. அலுவலக இருப்பையும் தொலைநிலைச் செயலாக்கத்தையும் இணைக்கும் இந்தப் பாத்திரங்கள், நெகிழ்வுத்தன்மையையும் குழு ஒருங்கிணைப்பையும் பாதுகாக்கின்றன. விற்பனை ஆதரவு, வாடிக்கையாளர் சேவை மற்றும் ஆராய்ச்சிப் பணிகளுக்கு இது மிகவும் பொருத்தமானது. பெருந்தொற்றுக் காலத்தில் பல நிறுவனங்கள் இந்த முறையின் பயனைக் கண்டறிந்த போதிலும், பின்னர் தேவையைக் காட்டிலும் பழக்கத்தின் காரணமாகவே மீண்டும் பழைய கடினமான முறைமைகளுக்குத் திரும்பியுள்ளன. கலப்பு முறை என்பது ஒரு சமரசச் செயலல்ல; அது ஒரு தூய உற்பத்தி மேம்படுத்தியாகும். அது நிறுவனங்களுக்கு ஒரு வலுவான மீண்டெழு (Resilience) தன்மையை வழங்குகின்றது. "மாற்றமே நிலையானது" என்ற தத்துவத்தின் அடிப்படையில், இந்த மாற்றத்தை நிறுவனங்கள் முழுமனதுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

மூன்றாவது பாதை சுழற்சி மற்றும் ஆலோசனை அடிப்படையிலான ஈடுபாடாகும் (Rotational and consultancy-based engagement). ஐக்கிய நாடுகள் சபை (Council), சர்வதேசத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் சிந்தனை மையங்கள் ஆகியவை ஏற்கனவே குறிப்பிட்ட கால, சிறப்புக் கடமைகளுக்காக நிபுணர்களின் தரவுத்தளங்களைப் பேணி வருகின்றன. இ கொமர்ஸ் (E-commerce), தணிக்கை, சட்ட மறுஆய்வு மற்றும் பயிற்சி போன்ற துறைகளில் அனுபவமிக்க பெண்களை இதே போன்ற முறைமைகளில் இலங்கையின் வர்த்தக நிறுவனங்களும் ஏன் உள்வாங்கக் கூடாது? இது 'ரீடர்ன்ஷிப்' (Returnships) போன்ற கட்டமைக்கப்பட்ட ஒப்பந்த முறைமைகளை ஒத்ததாகும். ஒரு குறிப்பிட்ட திணைக்களம் (Department) சார்ந்த திட்டங்களுக்கு இவ்வாறு அவர்களை இணைப்பது, நிறுவனங்களின் உடனடித் திறன் இடைவெளிகளை நிரப்புவதுடன், பெண்கள் தமது தொழில்முறை நாணயத்தை மீண்டும் கட்டியெழுப்பவும் உதவுகின்றது.

இறுதியாக, முழுநேர நிரந்தரப் பாத்திரங்கள். இவை வணிக வளர்ச்சி மற்றும் சந்தை விரிவாக்கத்தோடு தொடர்புடையவை. ஆனால், முதல் மூன்று அடுக்குகளின் அமுலாக்கம் (Implementation) வெற்றிகரமாக நிகழும் போது மட்டுமே, நிறுவனங்கள் முழுநேர வேலைகளுக்கான ஒரு திறமையான படையாக இந்தப் பெண்களை மாற்ற முடியும். தோமஸ் (Thomas) ஜெபர்சன் ஒருமுறை குறிப்பிட்டார், "மனித மனம் முன்னேறும்போது, சட்டங்களும் நிறுவனங்களும் அதனுடன் இணைந்து முன்னேற வேண்டும்." பொருளாதார யதார்த்தம் மாறிவிட்ட நிலையில், பழைய முகாமைத்துவச் சிந்தனைகளை வைத்துக்கொண்டு புதிய உலகத்தை வெல்ல முடியாது. பெண்கள் அமைதியாக வெளியேறவில்லை; மாறாக, பொருளாதார யதார்த்தத்திற்கு இன்னும் ஈடுகொடுக்காத பழைய அமைப்புகளுக்கே அவர்கள் எதிர்வினையாற்றுகிறார்கள்.

ஆகவே, கடினமான நிறுவனக் கட்டமைப்புகளால் திறமையான தொழில்முறைப் பெண்களைத் தொழிலாளர் படையிலிருந்து அந்நியப்படுத்துவது இனிமேலும் சாத்தியமற்றது என்பதை உணர்ந்து, அவர்களுக்கு வர்த்தக ரீதியாகச் சாத்தியமான, பல அடுக்கு மீள்நுழைவுப் பாதைகளை வடிவமைக்கும் முகாமைத்துவங்களே நாளைய உலகத்தின் உற்பத்தித் திறன் சிக்கல்களைத் தீர்க்கப் போகின்றன; இதுவே இலங்கையின் தேசியத் தொழிலாளர் கொள்கையையும் அந்நிய நேரடி முதலீட்டு வியூகங்களையும் அறிவுபூர்வமாக இணைத்து, ஒரு சமத்துவமான மற்றும் மீண்டெழு திறன் கொண்ட பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான தவிர்க்க முடியாத பரிணாம வளர்ச்சியாகும்.

 

0 comments:

Post a Comment