அதேபோன்று, அரசியல் தலைவர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளிட்டோரையும் சந்தித்து கலந்துரையாடினார். கொழும்பில் மாத்திரம் அன்றி, கண்டி, திருகோணமலை, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்கும் விஜயங்களை மேற்கொண்ட உயர்ஸ்தானிகர், அங்கும் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து நிலைமைகளை நேரடியாக அவதானித்தார். அவரது இந்த விஜயம், இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கப் பயணம் குறித்த சர்வதேச சமூகத்தின் தொடர்ச்சியான கரிசனையை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் மற்றும்
திருகோணமலைப் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்கள் தமது நியாயமான கோரிக்கைகளை
முன்வைத்து உயர்ஸ்தானிகரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டங்களை
நடத்தியிருந்தனர். யாழ்ப்பாணத்தில் செம்மணிப் புதைகுழிகளைப் பார்வையிட்ட
உயர்ஸ்தானிகர், அங்கு
ஏற்றப்பட்டிருந்த அணையா தீபத்திற்கும் அஞ்சலி செலுத்தினார். இந்தச் செயல், கடந்த காலக் காயங்கள் மக்கள் மத்தியில் இன்னும் ஆறாமல் இருக்கின்றன என்பதை ஆழமாக உணர்த்துவதாகவே அமைந்தது. அதேபோன்று, திருகோணமலையில்
பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக வீதியில் சந்தித்து உயர்ஸ்தானிகர் கலந்துரையாடியதும்,
மக்களின் நேரடி அனுபவங்களை அவர் கேட்டறிந்துகொண்டதன்
முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.
இவ்வாறு பல்வேறு
தரப்பினரையும் சந்தித்து, பல பகுதிகளுக்கும் விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்ததன் பின்னர், ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் தனது மதிப்பீடுகளை வெளியிட்டுள்ளார்.
அதன் பிரகாரம், கொழும்பில் வெளியிட்ட தனது மதிப்பீடுகளில்,
கடந்த காலப் பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்குவது அரசுக்குச்
சவாலான விடயமாக அமையும் எனவும், பாதிப்பு இடம்பெற்றுள்ளது என்பதை ஏற்பதும், உண்மைகளை
வெளிப்படுத்துவதுமே காயங்களை ஆற்றுவதற்கும், நல்லிணக்கத்தைக்
கட்டியெழுப்புவதற்குமான ஒரே வழி என்றும் அவர்
அறிவித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
மேலும், வலிந்து
காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களுக்கான உண்மையையும், நீதியையும்
பெற்றுக்கொடுக்கக்கூடிய சுயாதீன மற்றும் தடயவியல் நிபுணர்களின் பங்குபற்றுதலுடன்
மனிதப் புதைகுழிகள் தொடர்பில் முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும்
உயர்ஸ்தானிகர் வலியுறுத்தியுள்ளார். சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் மீதான
கண்காணிப்புகள் தொடர்வதாகவும், சமூகத்தின் முக்கிய
பங்காளித்தன்மை கொண்ட சிவில் செயற்பாட்டாளர்கள் மீதான கண்காணிப்பு முடிவுக்குக்
கொண்டுவரப்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். பயங்கரவாதத்
தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற எமது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றோம்
எனவும், அச்சட்டம் நீக்கப்படும் வரை அதன் பிரயோகம்
இடைநிறுத்தப்பட வேண்டும் எனவும், பயங்கரவாதத்
தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பவர்கள்
உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் விஜயம் குறித்த ஆரம்பகட்டக் கரிசனைகள் சில தரப்பினரிடையே நிலவின. இலங்கை தொடர்பாக தற்போது நடைமுறையில் இருக்கும் பிரேரணை இவ்வருடம் செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைகிறது. அதன் பின்னர், செப்டம்பர் மாத அமர்வில் ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக மற்றுமொரு புதிய பிரேரணை நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் வடக்கில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் சுமந்திரனைச் சந்தித்த இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ரூ பெட்ரிக், செப்டம்பர் மாதம் இலங்கை தொடர்பாக ஜெனிவா மனித உரிமை பேரவையில் பிரேரணை ஒன்று முன்வைக்கப்படும் எனக் கூறியிருந்தார்.
இந்த அடிப்படையில், செப்டம்பர் மாத அமர்வில்
இலங்கை குறித்த பிரேரணை நிறைவேற்றப்பட்டதன் பின்னர் ஐ.நா. மனித உரிமைகள்
உயர்ஸ்தானிகர் இலங்கைக்கு விஜயம் செய்ய வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட மக்களும்
சிவில் சமூகத் தலைவர்களும் கோரிக்கை விடுத்திருந்தனர். எனினும், அந்தக் கரிசனைகளையும் தாண்டி வற்புத் தேர்க் அரசாங்கத்தின் அழைப்பின்
பேரில் இலங்கைக்கு விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்கள்
மற்றும் சிவில் சமூகத்தினர் மத்தியில் எழுந்த இந்த நியாயமான கேள்விகள், கடந்த கால அனுபவங்களில் இருந்து உருவான நம்பிக்கையின்மையின்
பிரதிபலிப்பாகும். சர்வதேசப் பொறிமுறைகளின் நடைமுறைத் தாக்கம் குறித்த அவர்களின்
சந்தேகங்கள் முற்றிலும் புரிந்துகொள்ளக்கூடியவை.
எப்படியிருப்பினும், உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்
முன்வைத்திருக்கும் விடயங்கள் தாக்கம் செலுத்தக்கூடியவையாகவே இருக்கின்றன. அதாவது,
கடந்த காலங்களில் தவறுகள் இடம்பெற்றுள்ளன என்பதை ஏற்றுக்கொள்ள
வேண்டும் என்றும், உண்மைகளை
வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருப்பது
ஒரு முக்கியமான விடயமாகும். காரணம், கடந்த காலத் தவறுகளை
ஆராய்ந்து உண்மைகளை வெளிப்படுத்துமாறு பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து கோரிக்கை
விடுக்கின்றனர். அதுமட்டுமன்றி, சர்வதேச சமூகமும் கடந்த கால
மீறல்கள், தவறுகள் தொடர்பாகவே தொடர்ந்து வலியுறுத்தி
வருகின்றது. தமிழ் பேசும் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு சகலரும் ஏற்றுக்கொண்ட
வகையில் ஒரு தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். அதேபோன்று, யுத்தம்
காரணமாக ஏற்பட்டிருக்கும் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டியது
அவசியமாகும். பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையை மேற்கொண்டு
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்ட வேண்டும் என்பதுடன், அவர்களது காயங்கள் ஆற்றப்படுவது அவசியமாகும்.
எனவே, இந்த விடயங்களில் அரசாங்கம்
உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும். தற்போது இலங்கை வந்து சென்றுள்ள ஐ.நா. மனித
உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், எதிர்வரும்
செப்டம்பர் மாதம் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது
அமர்வில் இலங்கை தொடர்பான விரிவான நீண்ட அறிக்கையை வெளியிடுவார் என
எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோன்று, எதிர்வரும் செப்டம்பர் மாதம்
ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ள இலங்கை தொடர்பான புதிய
பிரேரணையில் உயர்ஸ்தானிகரின் இலங்கை விஜயத்தின் மதிப்பீடுகள் தாக்கம் செலுத்தும்
எனத் தெரிவிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட மக்கள் கடந்த 16 வருடங்களாகத்
தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதைத் தெரிந்துகொள்ள முடியாமல்
வேதனையுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இதனை இந்த முறை ஐ.நா. மனித உரிமை
உயர்ஸ்தானிகர் நேரடியாகக் கண்டிருக்கிறார். எனவே, இந்தப்
பிரச்சினைக்கு விரைவில் ஒரு சுயாதீனமான பொறிமுறையில் தீர்வுகள் எட்டப்பட வேண்டும்.
பாதிக்கப்பட்ட மக்களைப் பொறுத்தவரையில், யாரையும்
தண்டிக்குமாறு அவர்கள் போராட்டம் நடத்தவில்லை. மாறாக, தமது
உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்துமாறும், யுத்தத்தின்போது
இடம்பெற்றதாகக் கூறப்படும் மீறல்கள் தொடர்பில் பதிலளிக்குமாறும், உண்மைகளை வெளிப்படுத்துமாறும் கோரிக்கை விடுக்கின்றனர்.
ஒரே இரவில் பாதிக்கப்பட்ட
மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்கவோ,
காயங்களை ஆற்றவோ முடியாது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால்,
தற்போது யுத்தம் நிறைவடைந்து 16 வருடங்கள்
கடந்துவிட்டன. இனியும் பாதிக்கப்பட்ட மக்களினால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.
"நீதி கிடைப்பதற்கு முன்பதாக அல்லது உண்மையைக் கண்டறிவதற்கு முன்பதாக நாங்கள்
மரித்து விடுவோமா?" என்று பாதிக்கப்பட்ட மக்கள் கவலை
அடையத் தொடங்கிவிட்டனர். இந்த விடயத்தை அவர்கள் ஐ.நா. மனித உரிமை
உயர்ஸ்தானிகரிடமும் வெளிப்படுத்தியிருக்கின்றனர். எனவே, இந்த
விடயங்கள் உணர்வுபூர்வமான மற்றும் ஆழமான அணுகுமுறைக்கு உட்படுத்தப்பட
வேண்டியுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களின் நியாயமான கோரிக்கைகள், கரிசனைகள், நம்பிக்கைகள் மற்றும் அவர்கள்
எதிர்கொள்கின்ற வேதனை குறித்து அரசாங்கம் மற்றும் சகல தரப்பினரும் ஆழமான முறையில்
கவனம் செலுத்த வேண்டும். அத்துடன், உண்மைகளை வெளிக்கொண்டு
வரவும், மீறல்களை ஆராயவும் இதயசுத்தியுடன் செயற்பட வேண்டும்.
இதுவே இலங்கையில் நீடித்த அமைதியையும், நல்லிணக்கத்தையும்
கட்டியெழுப்புவதற்கான அடிப்படையாக அமையும்.
0 comments:
Post a Comment