நிர்மாணிக்கப்பட்ட ஒவ்வொரு வீடும் 10 பேர்ச் காணியில், 550 சதுர அடி பரப்பளவில், இரண்டு படுக்கையறைகள், வரவேற்பறை, சமையலறை, குளியலறை என்ற
அடிப்படை வசதிகளுடன் சுமார் 32 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இதனுடன், தளபாடங்கள் மற்றும் சமையலறை உபகரணங்கள்
உள்ளிட்ட 175,000 ரூபா பெறுமதியான அத்தியாவசியப் பொருட்களும்
ஒவ்வொரு குடும்பத்துக்கும் வழங்கப்படவுள்ளன. இத்திட்டத்தை நிர்மாணிப்பதில்
காணிச் செப்பனிடல் முதல் இறுதிக் கட்டுமானம் வரை, இலங்கை இராணுவ
பொறியியல் சேவைகள் படையணி ஆற்றிய பங்களிப்பும் இந்நிகழ்வில் பாராட்டப்பட்டது.
பத்து பயனாளிகளுக்கு அடையாள ரீதியாக வீட்டுத் திறவுகோல்களும் உரிமைப்
பத்திரங்களும் ஜனாதிபதி நேரடியாக வழங்கிய நிகழ்வும் இந்த வைபவத்தில் இடம்பெற்றது.
இவ்வீடமைப்புத் திட்டம், வெறும் தனிப்பட்ட நிவாரண நடவடிக்கை
மட்டுமல்ல; அது மலையக சமூகத்தின் நீண்டகால உரிமைப் பிரச்சினையுடன்
நேரடியாக இணைந்துள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் தேயிலை மற்றும்
இறப்பர் தோட்டத் தொழிலுக்காக இந்தியாவிலிருந்து அழைத்துவரப்பட்ட மலையக மக்கள்,
தலைமுறை தலைமுறையாக தோட்ட வரிசை வீடுகளில் (Line Rooms) காணி உரிமையின்றி வாழவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். சுதந்திரத்திற்குப் பின்னரும் குடியுரிமை நிர்ணயம், வாக்குரிமை,
காணி உரிமை ஆகிய அடிப்படைத் தேவைகளில் அவர்கள் நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்ட
நிலையிலேயே வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், சொந்த வீடும் காணியும் என்பது வெறும் வசதி அல்ல; அது
ஒரு சமூகத்தின் அடையாள அங்கீகாரத்தையும் பொருளாதார சுயமரியாதையையும் குறிக்கும் அடிப்படை
உரிமையாகும்.
இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் சில முக்கிய அறிவிப்புகளையும்
முன்வைத்தார். யுத்தகாலத்தில்
நாட்டைவிட்டு இந்தியாவுக்குச் சென்று வசிக்கும் மக்கள் மீளத் திரும்புவதற்கு இருந்த
தடைகளை நீக்குவதற்கு கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாகவும்,
எதிர்வரும் வரவு-செலவுத் திட்டத்தில் வீட்டுத்
திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், எதிர்காலத்தில் பெருந்தோட்ட நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்படும்
ஒப்பந்தங்களில் மலையக மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் பிரிவுகளைச் சேர்க்கவும்,
நாட்டின் இதயமாகக் கருதப்படும் மத்திய மலைநாட்டைப் பாதுகாக்க பொறுப்புள்ள
அனைத்து நிறுவனங்களினதும் திணைக்களங்களினதும் அதிகாரங்களை ஒருங்கிணைத்து முழுமையான
அதிகாரம் கொண்ட மத்திய மலைநாட்டுப் பாதுகாப்பு அதிகாரசபையை
(Central Hill Country Protection Authority) அமைப்பதற்கான சட்டமூலத்தை
இவ்வருட இறுதியில் அல்லது அடுத்த வருட ஆரம்பத்தில் பாராளுமன்றில் சமர்ப்பிக்க நடவடிக்கை
எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இத்தகைய அறிவிப்புகள் எதிர்பார்ப்புகளை உருவாக்கியிருந்த
போதிலும், அவற்றின் மீதான சந்தேகங்களும் இல்லாமலில்லை.
கடந்த பல தசாப்தங்களாக, 1964ஆம் ஆண்டு சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தம் முதல் 2003ஆம் ஆண்டு குடியுரிமைச்
சட்டம் வரை, தொடர்ச்சியான அரசாங்கங்கள் மலையக மக்களுக்கு காணி
உரிமை, சம்பள உயர்வு, வாழ்விட வசதி ஆகியவற்றில்
பல வாக்குறுதிகளை வழங்கியிருந்த போதிலும், அவற்றில் பெரும்பாலானவை
முழுமையாக நிறைவேற்றப்படாமலேயே இருந்துவந்துள்ளன. நிர்வாக ரீதியாக
பல திணைக்களங்களுக்கிடையே பரவிக்கிடக்கும் அதிகாரங்களை ஒரு அதிகாரசபையின் கீழ் ஒருங்கிணைப்பது
எளிதான பணியல்ல என்றும், நிதி நெருக்கடி நிலவும் சூழலில் புதிய
வரவு-செலவுத் திட்ட முன்னுரிமைகள் நடைமுறைச் சாத்தியமற்றவையாக
அமையக்கூடும் என்றும் சில கண்ணோட்டங்கள் முன்வைக்கப்படுகின்றன. தோட்டக் கம்பனிகளுடனான ஒப்பந்தங்களில் தொழிலாளர் உரிமைப் பிரிவுகளைச் சேர்ப்பது,
முதலீட்டாளர் நலன்களுடன் முரண்படக்கூடும் என்ற எச்சரிக்கையும் சில தரப்புகளால்
முன்வைக்கப்படுகின்றது.
எனினும்,
இம்முறை முன்வைக்கப்பட்டுள்ள அறிவிப்புகள் வெறும் வாய்மொழி உறுதிமொழிகளாக
மட்டும் இல்லாமல், அளவிடக்கூடிய செயற்பாடுகளுடன் இணைந்துள்ளமை
குறிப்பிடத்தக்கது. ஐம்பது வீடுகளின் முழுமையான நிர்மாணமும்,
163 குடும்பங்களுக்கான காணி உறுதிப் பத்திரங்களும் ஏற்கனவே கையளிக்கப்பட்டுவிட்ட
நிலையில், இவை எதிர்கால வாக்குறுதிகள் அல்ல, நடைமுறைப்படுத்தப்பட்ட உண்மைகள். இந்தியாவில் வசிப்பவர்கள்
மீளத் திரும்புவதற்கான தடைகளை நீக்குவதற்கான தீர்மானமும் ஏற்கனவே அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
முதலீட்டாளர் நலன் தொடர்பான அச்சத்திற்கும் அடிப்படையில்லை; தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாக்கும் தெளிவான ஒப்பந்த விதிமுறைகள், நீண்டகாலத்தில் தொழிலாளர் வருகைப்பாட்டையும் உற்பத்தித்திறனையும் மேம்படுத்தி,
தோட்டத் துறையின் நிலைத்தன்மைக்கே பங்களிக்கும். இவ்வாறான உறுதியான, சரிபார்க்கக்கூடிய நடவடிக்கைகள்,
முந்தைய அறிவிப்புகளுக்கும் தற்போதைய நடவடிக்கைகளுக்கும் இடையிலான வேறுபாட்டைத்
தெளிவுபடுத்துகின்றன. அதேவேளை, மத்திய மலைநாட்டுப்
பாதுகாப்பு அதிகாரசபை தொடர்பான சட்டமூலம் இன்னும் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படாத
நிலையில் இருப்பதால், அதன் நடைமுறைச் செயலாக்கம் தொடர்ந்து கண்காணிக்கப்பட
வேண்டிய ஒரு விடயமாகவே உள்ளது. அத்துடன், 4000 இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகளில்
வாழும் குடும்பங்களுக்கு காணி உறுதிப் பத்திரங்களை படிப்படியாக வழங்கிவரும் நடைமுறையும்,
அரசாங்கத்தின் நோக்கத்தை உறுதிப்படுத்தும் ஒரு தொடர்ச்சியான செயற்பாடாக
அமைந்துள்ளது.
வீடமைப்புத் திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றியது
ஒரு முக்கிய அடித்தளமாக அமையும் அதேவேளை,
மலையக மக்களின் உரிமைப் பிரச்சினையை முழுமையாகத் தீர்ப்பதற்கு கூடுதலான
கட்டமைப்பு ரீதியான நடவடிக்கைகள் அவசியமாகின்றன. முதலாவதாக,
மத்திய மலைநாட்டுப் பாதுகாப்பு அதிகாரசபை சட்டமூலத்தை பாராளுமன்றில்
சமர்ப்பிப்பதற்கான திட்டவட்டமான காலக்கெடுவை பொதுமக்கள் அறியும் வகையில் அரசாங்க வர்த்தமானி
மூலம் வெளியிடுவது அவசியம். இரண்டாவதாக, மலையக தொழிலாளர் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய ஒரு சுயாதீன கண்காணிப்புக் குழுவை
அமைத்து, வீட்டுத் திட்டங்களினதும் காணி உறுதிப் பத்திர வழங்கலினதும்
முன்னேற்றத்தை வெளிப்படையாக அறிக்கையிடச் செய்ய வேண்டும். மூன்றாவதாக, தற்போது காணியற்றிருக்கும் மலையக குடும்பங்களின்
முழுமையான எண்ணிக்கையை மதிப்பீடு செய்து, அதற்கேற்ப ஒரு பல்வருட
காணி உறுதிப் பத்திர வழங்கல் அட்டவணையை வகுக்க வேண்டும். நான்காவதாக,
பெருந்தோட்ட நிறுவனங்களுடனான எதிர்கால ஒப்பந்தங்களில் தொழிலாளர் உரிமை
பாதுகாப்புப் பிரிவுகளை வெறும் எதிர்பார்ப்புகளாக அல்லாமல், சட்டரீதியாக
அமுல்படுத்தக்கூடிய கடப்பாடுகளாக இணைக்க வேண்டும்.
இதனுடன்,
இந்தியாவிலிருந்து மீளத் திரும்பும் குடும்பங்களுக்கு கல்வித் தகுதி
அங்கீகாரம், சுகாதார சேவை அணுகல், குடிசார்
பதிவு ஆகியவற்றை எளிமைப்படுத்தும் ஒரு ஒருங்கிணைந்த மீள்குடியேற்ற முகாமைத்துவ வழிமுறையை
உருவாக்குவதும் அவசியம். வீட்டுத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை
ஒவ்வொரு வருடமும் தனித்தனியாக முடிவு செய்வதற்குப் பதிலாக, பல வருடங்களுக்கான உறுதியான வீட்டு நிதியத்தை (Housing Fund) ஸ்தாபிப்பது, திட்டமிடலிலும் தொடர்ச்சியிலும் நிலைத்தன்மையை
உறுதிசெய்யும். மலையகப் பகுதிகளில் தேயிலை விவசாயம் சார்ந்து
வாழும் குடும்பங்களுக்கு, வீட்டு உரிமையுடன் இணைந்த சிறு அளவிலான
வீட்டுத்தோட்ட காணியையும் வழங்குவது, அவர்களின் பொருளாதார சுயசார்பையும்
மேம்படுத்தக்கூடும். மேலும், தோட்டப் பகுதிகளில்
இயங்கும் பாடசாலைகள் மற்றும் சுகாதார நிலையங்களை மத்திய அரசு நிதியில் தரமுயர்த்துவதன்
மூலம், வீட்டுரிமையுடன் இணைந்த கல்வி மற்றும் சுகாதார உரிமைகளையும்
உறுதிசெய்ய வேண்டும்.
நவோதயாபுரம் வீட்டுத் திட்டமும் காணி உறுதிப் பத்திர
வழங்கலும், மலையக
மக்களுக்கு நீதி வழங்கும் நீண்ட பயணத்தின் ஒரு கட்டமே தவிர, அதன்
இறுதி இலக்கு அல்ல. நூற்றாண்டுகளாக நீடித்த பாதுகாப்பின்மையையும் அங்கீகாரமின்மையையும் ஒரு தலைமுறைக்குள்
முழுமையாக நிவர்த்தி செய்வதற்கு, தொடர்ச்சியான சட்ட, நிர்வாக, நிதி நடவடிக்கைகள் இன்றியமையாதவை. இன்று கையளிக்கப்பட்ட வீடுகளும் பத்திரங்களும் ஒரு நல்ல தொடக்கமே; அதனை நிலைநிறுத்தும் சட்டமும் நிறுவன அமைப்பும் காலந்தாழ்த்தாது நிறைவேற்றப்படுவதிலேயே
இவ்வுறுதிமொழியின் உண்மைத்தன்மை தீர்மானிக்கப்படும்.


0 comments:
Post a Comment