ADS 468x60

17 June 2025

கிராமத்து கோயில் சடங்கும்: கலாசார மீறலும் !

அன்றைக்குக் சாயுங்காலம் இலங்கை நேரப்படி, என் நண்பர் ரவியோடு பேசிக்கொண்டிருந்தேன். அவர் இப்போ அவுஸ்திரேலியாவில இருக்காரு. அவரோட இன்னொரு அண்ணா, அவர் பேரும் ரவிதான், இருவரும் அங்கே இருந்துகொண்டு என்னைப் பற்றி நினைத்து எனக்கு அழைப்பு எடுத்தார்கள். நாங்க பேசியதில் அதிகமான விடயங்கள் எங்கட கிராமம், எங்கட மண் வாசனை, எங்கட கலாச்சாரம், எங்கட ஆலய விழாக்கள், எங்கட நிகழ்வுகள் பற்றித்தான். இது எல்லாமே ஒரு தூய்மையான, பண்பாடு மாறாத விழுமியங்களை தூக்கி நிறுத்துற செயல்பாடுகளா இருந்தது. அதிலும் குறிப்பாக, எங்கட ஆலயத்தில் நடக்கும் பள்ளியங்கட்டுச் சடங்கு பற்றிப் பேசினோம்.

ஏழு தெருவும் கூடி, இந்த விழாவை ஏழு நாட்கள் கொண்டாடுவோம். கிராமம் முழுவதும் அலங்காரத் தோரணங்கள் கட்டி, ஊரை வலம் வந்து கண்ணகி அம்மனுக்குச் சடங்கு விழா நடத்துவார்கள். அது ஒரு காலம்… எப்படி இருந்தோம்? ஒரு இல்லத்தில தோரணம் கட்டி, பிள்ளைகள் காவடிகளைத் தோளில் தாங்கி, பக்திப் பாடல்களை உழவு இயந்திரத்தில கட்டி, தோரணங்களை அண்ணன்மார் முன்னே தூக்கிச் செல்ல ஊரைச் சுற்றி வருவோம். சுத்தி வருகின்ற இடமெல்லாம் குத்துவிளக்கும், நிறைகுடமும் வைத்திருப்பார்கள். பெற்றோல்மட்ச்சை பிடித்துக்காண்டு, ஜெனரேட்டரில் மின்விளக்குகளை தோரணத்தில் அலங்கரித்து வீடு வீடாய் வைத்திருக்கும் அந்தத் தேங்காய் எல்லாம் உடைத்து, கடைசியாக ஆலயத்துக்கு வந்து சேர்வோம். வரும் வழியெல்லாம் அந்தந்த தெருமக்கள் ஆரவத்துடன் வரவேற்று வணங்கி நிற்பார்கள் அதுவெல்லாம் அழகிய ஞாபகங்கள்! இன்று நினைத்தாலும் மனசுக்கு ஒரு இதம்.

அன்றைய நாட்களில், எங்கள் கிராமம் ஒரு தனி உலகம். அதிகாலை பொழுது, மாட்டு வண்டிகளின் சத்தம், தூரத்தில் கேட்கும் ஆலய மணிகளின் ஓசை, வீடுகளிலிருந்து வரும் சுவையான பலகாரங்களின் மணம் – இவையெல்லாம் என் ஆழ்மனதில் இன்னும் அப்படியே பதிந்திருக்கின்றன. வீதியெங்கும் பிள்ளைகள் கிட்டிப்பொல்லு, நொண்டி, கிளித்தட்டு என்று விளையாடினார்கள். மாலையில், வீட்டின் முற்றத்தில் பெரியவர்கள் அமர்ந்து கதை பேசுவார்கள். அந்தப் பேச்சுக்கள்தான் அன்றைய செய்தித்தாள். உலக ஞானம் மொத்தமும் அங்கிருந்துதான் எங்களுக்குக் கிடைத்தது. “கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு” என்று அடிக்கடி சொல்வார்கள். அந்த வார்த்தைகளின் ஆழத்தை அன்றைக்கு நான் முழுமையாக உணரவில்லை. இப்போ திரும்பிப் பார்க்கும்போது, எவ்வளவு உண்மை அதுன்னு புரியுது.

எங்கட கிராமத்தில, ஒவ்வொரு விழாவும் ஒரு பெரிய குடும்ப நிகழ்வு மாதிரிதான். பொங்கலுக்கு ஒரு வீட்டுல கூட்டம்னா, அடுத்த வீட்டுல அதைவிடப் பெரிய கூட்டம் கூடும். வாழை இலையில பரிமாறப்படும் உணவும், குவ சத்தமும், சிரிப்பொலியும் காதை நிறைக்கும். யாரு வந்தாலும், “வாங்கோ பிள்ளைகள், சாப்பிடுங்கோ” என்று உரிமையோட கூப்பிடுவார்கள். பசிக்குதுன்னு சொன்னால், “போங்க தம்பி, எடுத்துச் சாப்பிடுங்கோ” என்பார்கள். ஒருத்தருக்கு ஒரு கஷ்டம்னா, கிராமமே ஒன்று சேர்ந்து நிற்கும். சண்டைகள் வருவதுண்டு, ஆனால் சூரியன் மறைவதற்கு முன் மறந்து போய்விடும். “பொரித்த மீனும், ஊர் சண்டையும் நாளைக்கு ஆகாது” என்று சொல்வார்கள். இந்த சிறுசிறு பழமொழிகள் எல்லாம் வாழ்க்கையின் பெரிய பாடங்களைச் சொல்லிக்கொடுத்தன.

ஆனால், இன்றைக்கு அந்தப் பக்தி மாறி, அந்தக் கலாச்சாரம் மாறி, அந்த விழுமியம் மாறி… நெஞ்சை நெகிழ வைக்கும் ஒரு மாற்றம் நடந்திருக்கிறது. குடித்துவிட்டு, குத்துப்பாட்டுப்போட்டு தமிழ் கலாச்சார ஆடைகளை அணியாமல், மிகக் கேவலமாக எங்களுடைய அந்தத் தூய்மையான கலாச்சாரத்தை யாரோ இடையில் புகுந்து அழித்துக் கொண்டிருக்கின்றார்கள். இதையெல்லாம் நினைத்துப் பார்க்க அருவருப்பாக இருக்கின்றது. நல்ல ஞாபகங்கள் மட்டுமே எப்பொழுதும் மனதில் நிற்கின்றன.

நான் ரவியுடன் பேசும்போது, இந்த மாற்றங்கள் பற்றித்தான் அதிகம் பேசினோம். அவர் ஆஸ்திரேலியாவில் இருந்தாலும், எங்கள் மண் மீது அவருக்கு இருந்த அதே பற்றும், மரியாதையும் எனக்கு ஆச்சரியத்தை அளித்தன. தூர தேசத்தில் இருந்தாலும், தன் வேர்களை மறக்காத ஒரு மனிதனைப் பார்ப்பது மனசுக்கு ஒரு நிம்மதியைத் தரும். “மண்ணை மறந்தால், வாழ்க்கையே வெற்று” என்பார்கள். அது எவ்வளவு உண்மை!

இந்த மாற்றங்களை நாம் எப்படி எதிர்கொள்வது? இது ஒரு பெரிய கேள்வி. கலாச்சாரம் என்பது வெறும் சடங்குகள் மட்டுமல்ல. அது நமது அடையாளம். நமது வாழ்வியல். நமது முன்னோர்களின் உழைப்பு, அவர்களின் தியாகம், அவர்களின் அறிவு அனைத்தையும் உள்ளடக்கியது. அதை இழப்பது என்பது நம்மையே இழப்பதற்குச் சமம். நாம் நம்முடைய பிள்ளைகளுக்கு என்ன கற்றுக் கொடுக்கப் போகிறோம்? டிஜிட்டல் உலகில் வாழும் அவர்களுக்கு, இந்த மண் வாசனையும், இந்த உறவுகளின் அருமையும் எப்படிப் புரியவைப்பது?

ஒவ்வொரு குடும்பமும் ஒரு சிறிய சமூகம்தான். அங்கிருந்துதான் மாற்றங்கள் தொடங்க வேண்டும். வீட்டில் நமது கலாச்சாரத்தைப் பற்றிப் பேசுவது, நமது மரபுகளைப் பின்பற்றுவது, பிள்ளைகளுக்கு அவற்றின் முக்கியத்துவத்தைச் சொல்லிக்கொடுப்பது – இவைதான் முதல் படிகள். ஆலய விழாக்களை வெறுமனே ஒரு பொழுதுபோக்காகப் பார்க்காமல், அதன் பின்னால் இருக்கும் அர்த்தங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். மூத்தவர்களின் அனுபவங்களுக்குக் காது கொடுக்க வேண்டும். அவர்கள் சொல்வது வெறும் பழைய கதைகள் அல்ல, அவை பொக்கிஷங்கள்.

வாழ்வின் ஒவ்வொரு கணமும் ஒரு பாடம். நாம் எதையெல்லாம் கடந்து வந்தோமோ, அதெல்லாம் நமக்கு ஒரு அனுபவம். நல்லதோ, கெட்டதோ – ஒவ்வொரு அனுபவமும் நம்மைச் செதுக்குகிறது. அந்தக் கிராமத்து நினைவுகள் எனக்கு கற்றுக்கொடுத்த பாடங்கள் ஏராளம். எளிமை, அன்பு, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, கூட்டு வாழ்க்கை – இவையெல்லாம் புத்தகங்களில் படிக்கக் கிடைக்காத அரிய பாடங்கள்.

நாம் வாழும் இந்த நவீன உலகத்தில், நாம் தொலைத்துவிட்ட அருமையான சில விடயங்கள் இருக்கின்றன. அதைத் திரும்பப் பெற முடியுமா என்று தெரியவில்லை. ஆனால், அதைப் பாதுகாக்க முடியும். நாம் ஒரு சிறு துளியாவது நம் குழந்தைகளுக்குக் கடத்த முடியும். நமது பாரம்பரியத்தைப் போற்றும்போதுதான், நாம் யார் என்பதற்கான தெளிவான ஒரு பிம்பம் உருவாகிறது.

நினைவலைகள் எப்பொழுதும் நம்மைத் தாலாட்டுகின்றன. அவை ஒரு நீரூற்று போல, நம் மனதுக்குத் தெம்பூட்டுகின்றன. அவை எவ்வளவுக்கு உண்மையான விடயம் என்பதை, இந்த மாற்றங்களைப் பார்க்கும்போதுதான் உணர முடிகிறது. நாம் நம் வேர்களை மறக்காமல் வாழ்வோமேயானால், எந்தப் புயலும் நம்மை அசைக்க முடியாது. இதுதான் நான் என் கிராமத்து வாழ்க்கையிலிருந்தும், என் நண்பர் ரவியுடனான அந்த உரையாடலிலிருந்தும் கற்றுக்கொண்ட பெரிய பாடம்.

இந்த எண்ணங்கள் உங்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் உந்துதலாக இருந்ததா? அல்லது உங்கள் மனதிலும் இப்படிப்பட்ட நினைவுகள் எழுகின்றனவா?

 

0 comments:

Post a Comment