மின்னல் வெட்டிய ஒவ்வொரு கணமும், அறைக்குள் திகிலூட்டும் வெளிச்சம் பரவி, மீண்டும் இருள் கவ்வியது. இடியின் ஓலம், செத்தவனின் அழுகை போல் என் காதுகளைத் துளைத்தது. இரண்டு மணி நேரம் அந்த நரக மழை விடாமல் கொட்டியது. எட்டு மணியளவில் ஒரு மௌனமான அமைதி நிலவியது, ஆனால் அந்த அமைதிக்குள்ளும் ஒருவித அபாயகரமான நிசப்தம் குடிகொண்டிருந்தது.
அன்று எங்கள் வீட்டுக்கு முன்னே, எங்கள் ஊரின் பிரபலமான இளைஞன், ஒரு கோர விபத்தில் தன் உயிரை விட்டிருந்தான். "பாவம், எத்தனை கனவுகளோட இருந்திருப்பான்... இப்படிப் போயிட்டானே" என்று மக்கள் முணுமுணுத்தார்கள். இள வயதில் இறந்தவர்களின் ஆத்மாக்கள் அலைந்து திரியும் என்ற மூடநம்பிக்கை ஊரெங்கும் பரவியிருந்தது.
இரவு உணவு தொண்டைக்குள் இறங்க மறுத்தது. ஒன்பது மணியிருக்கும், எப்படியோ படுக்கைக்குச் சென்றேன். ஆனால் நித்திரை என்னை நெருங்க மறுத்தது. ஜன்னலுக்கு வெளியே, எங்கள் வீட்டு முற்றத்தில் இருந்த பெரிய மாமரத்தில், ஒரு ஆந்தை தன் மரண ஓலத்தை எழுப்பிக் கொண்டிருந்தது. அதன் குரல், இருண்ட ஆகாயத்தை பிளந்தது.
ஒவ்வொரு அலறலும், என் எலும்புகளையே உலுக்கும் ஒரு சில்லிட்ட நடுக்கத்தை ஏற்படுத்தியது. நேரம் மெல்ல நகர்ந்து, நள்ளிரவு பதினொரு மணியைத் தொட்டது. நான் இன்னும் விழித்திருந்தேன். அம்மா, அப்பா, அண்ணா எல்லாரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள். அந்த ஆந்தையின் அலறலும், பக்கத்து வீட்டு நாய் வெறி பிடித்தது போல் யாரையோ பார்த்து குரைப்பதும் என் இதயத்தை திக்திக் என்று அடிக்க வைத்தது.
அந்த நாய் குரைத்த விதம்... அது வெறுமனே குரைப்பது போல் தெரியவில்லை. ஏதோ ஒரு உருவமற்ற, கண்ணுக்குத் தெரியாத பயங்கரத்தை உணர்ந்து, அதன் உயிர் பயத்தில் உறைந்து குரைப்பது போலிருந்தது. எங்கள் வீட்டு எல்லை வரை யாரையோ அல்லது ஏதோ ஒன்றை துரத்தி வருவது போலிருந்தது அதன் வேகம். எங்கள் வளவு வாசலை அடைந்ததும், நாய் குரைப்பதை நிறுத்தி ஒருவித பயங்கரமான முனகலை ஆரம்பித்தது.
அந்த முனகல், என் இரத்தத்தை உறைய வைத்தது. நாய் அமைதியானதும், யாரோ நடந்து வரும் சத்தம் தெளிவாகக் கேட்டது. முதலில் தூரத்தில் கேட்ட அந்த சத்தம், இப்போது என் காதுகளுக்கு மிக அருகில் வந்துவிட்டது போல் தோன்றியது. என் உடல் முழுவதும் ஒரு குளிர்ந்த வியர்வை படர்ந்தது,
என் நாடித் துடிப்பு அதிவேகமாக எகிறியது, ரத்தம் உறைந்து என் உடம்பே மரத்துப் போனது போல் இருந்தது. முன் வீட்டு நாய் முனகுவதை நிறுத்தி, இப்போது மெல்லிய நடுக்கத்துடன் குறைத்துக் கொண்டிருந்தது. அந்த ஒலி என் பயத்தை இன்னும் அதிகமாக்கியது.
எங்கள் கேட்டின் அருகே யாரோ ஈரமான மண்ணில் சப்பாத்துகள் பதிந்து வரும் 'சளக் சளக்' சத்தம் கேட்டது. அந்த சத்தம் மெதுவாக நடந்து வந்து, எங்கள் கேட்டின் முன்பு நின்றது. பிறகு, திடீரென்று நின்றுவிட்டது. என் சுவாசம் நின்றுவிடும் போலிருந்தது. என் வாய் அடைத்துப் போனது, தொண்டையில் ஒரு முடிச்சு விழுந்தது. அம்மாவையோ அல்லது அப்பாவையோ எழுப்ப வேண்டும் என்று மனம் துடித்தாலும், என் உடல் என் கட்டுப்பாட்டில் இல்லை.
மணி பன்னிரெண்டை நெருங்கியது. அடுத்த நொடி, எங்கள் கேட்டின் துருப்பிடித்த கீல்கள் 'கீச் கீச்' என அலற, யாரோ அதை மெதுவாகத் திறப்பது போன்ற பயங்கரமான சத்தம் கேட்டது. என் இதயம் என் தொண்டைக்குள் வந்து துடிப்பது போல் உணர்ந்தேன். அந்த சத்தம் சிறிது நேரம் கழித்து மெதுவாக நகர்ந்து, முற்றிலுமாக நின்றுவிட்டது. நான் பயத்தில் அப்படியே சிலை போல் உறைந்து போயிருந்தேன். அப்போது,
தூரத்தில் இருந்தும் அருகிலிருந்தும் பல நாய்களின் ஊளைச்சத்தம் ஒன்று சேர்ந்து அந்த அமைதியைக் கிழித்தது. அவை அனைத்தும் அந்த சத்தம் கேட்ட இடத்தை நோக்கியே குரைத்துக் கொண்டிருந்தன. அந்த ஒட்டுமொத்த சத்தமும், அந்த இருளின் பயங்கரத்தை பன்மடங்கு அதிகரித்தது. நான் போர்வையை என் முகத்தோடு சேர்த்து இறுக மூடிக் கொண்டு, நடுங்கியபடி விழித்திருந்தேன்.
பொழுது விடிந்ததும், என் மனதில் அந்த கொடிய இரவின் நினைவுகள் நீங்கவில்லை. மெதுவாக, கதவைத் திறந்து எட்டிப் பார்த்தேன். அங்கே எனக்கு ஒரு திகிலூட்டும் காட்சி காத்திருந்தது. அது எங்கள் ஊரில் மங்கலம் என்று அழைக்கப்படும், மனநிலை சரியில்லாத ஒருவன், எங்கள் கேட்டின் அருகே சுருண்டு, ஒரு கருப்பு நிழல் போல் படுத்துக் கிடந்தான்.
அவன் தூங்கிக் கொண்டிருக்கவில்லை, மாறாக வானத்தைப் பார்த்தபடி தனக்குத்தானே முணுமுணுத்துக் கொண்டிருக்கிறான். அவன் வாயில் இருந்து வரும் வார்த்தைகள், "அவன்... அவன் வந்துவிட்டான்... இருள்... இருள் கவ்வியது..." போன்ற பயங்கரமான விஷயங்களாக இருந்தன. அவனுடைய கந்தலான ஆடைகளும், கலைந்த முடியும், அந்த இருண்ட இரவின் பயங்கர உருவமாக என் மனதில் பதிந்திருந்தது.
0 comments:
Post a Comment