இந்து சமுத்திரத்தின் மையப்பகுதியில் ஒரு முத்து என வர்ணிக்கப்படும் இலங்கை, அதன் அமைவிடத்தினால் வரத்தைப் பெற்றுள்ளதா அல்லது சாபத்தைப் பெற்றுள்ளதா என்ற விவாதம் அண்மைக்காலமாக பொதுவெளியில் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, தொடர்ச்சியாக நிகழும் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு மற்றும் காலநிலை மாற்றத்தின் தீவிர விளைவுகள் இந்த விவாதத்தைத் தூண்டிவிட்டுள்ளன. ஆனால், ஒரு நாட்டின் புவியியல் அமைவிடம் (Geographical location) என்பது தானாகவே வரமாகவோ அல்லது சாபமாகவோ அமைவதில்லை. அது அந்த நிலப்பரப்பில் வாழும் மக்கள் மற்றும் அதனை நிர்வகிக்கும் ஆட்சியாளர்களின் தீர்மானங்களிலேயே தங்கியுள்ளது. இலங்கை ஒரு காலநிலை பாதிப்புக்குள்ளாகக்கூடிய (Climate-vulnerable) நாடு என்பது உண்மைதான். ஆனால், இன்று நாம் அனுபவிக்கும் அனர்த்தங்கள் இயற்கையின் சீற்றம் என்பதை விட, கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக நாம் இழைத்த வரலாற்றுத் தவறுகளின் விளைச்சலே என்பதுதான் கசப்பான உண்மையாகும்.
வரலாற்று ரீதியாகப் பார்க்கையில், இலங்கை பல்லாயிரம்
ஆண்டுகளாக இயற்கையோடு இயைந்த ஒரு வாழ்வியலைக் கொண்டிருந்தது. தீவின் மத்திய
மலைநாடு (Central Highlands) ஐந்து முதல் ஏழு அடுக்குகளைக்
கொண்ட அடர்ந்த மழைக்காடுகளால் (Rainforests) சூழப்பட்டிருந்தது.
இந்த இயற்கை அரண் வெறும் அழகிற்கானது மட்டுமல்ல; அது ஒரு
மாபெரும் பொறியியல் கட்டமைப்பாகச் செயற்பட்டது. இந்தியப் பெருங்கடலில் இருந்து
வீசும் ஈரப்பதம் மிக்க காற்றினால் உருவாகும் கனமழையை இந்த காடுகள் உள்வாங்கின. அவை
மண்ணின் ஈரப்பதத்தைத் தக்கவைத்து, நிலத்தடி நீரை (Groundwater)
மீள்நிரப்பியதுடன், ஆறுகள் வழியாக மேலதிக நீரை
மிக நிதானமாகவே விடுவித்தன. இதன் காரணமாக, அக்காலகட்டத்தில்
மழைவீழ்ச்சி என்பது ஒருபோதும் பேரழிவாக (Catastrophe) மாறியதில்லை.
மாறாக, அது விவசாயம் (Agriculture) மற்றும்
குடிநீருக்கான வரமாகவே பார்க்கப்பட்டது.
இருப்பினும், 1815 ஆம் ஆண்டுக்குப்
பிந்தைய காலப்பகுதி இலங்கையின் சூழலியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் கீழ், பெருந்தோட்டப்
பொருளாதாரம் (Plantation economy) அறிமுகப்படுத்தப்பட்டபோது,
மத்திய மலைநாட்டின் கன்னிப் போர்வை போன்ற மழைக்காடுகள்
கண்மூடித்தனமாக அழிக்கப்பட்டன. முதலில் கோப்பி பயிர்ச்செய்கைக்காகவும், பின்னர் தேயிலைக்காகவும் மலைச்சரிவுகள் மொட்டையடிக்கப்பட்டன. மண்ணைப்
பிடித்து வைத்திருந்த வேர்கள் பிடுங்கப்பட்டு, நீரை
உள்வாங்கும் காடுகளின் தன்மை சிதைக்கப்பட்டது. இது ஒரு நீண்டகால சாபத்தின் (Long-term
curse) தொடக்கமாக அமைந்தது. இன்றைய நிலச்சரிவுகளும், திடீர் வெள்ளப்பெருக்குகளும் (Flash floods) அன்றே
விதைக்கப்பட்டவை.
காலனித்துவ ஆட்சியாளர்களைச் சூழலியல்
ரீதியாக நாம் விமர்சித்தாலும்,
அவர்கள் கையாண்ட ஒரு முக்கியமான விடயத்தை நாம் கவனிக்கத்
தவறிவிடுகிறோம். அவர்கள் இயற்கையைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றிய போதும், அதனைத் தரவுகளின் அடிப்படையிலேயே அணுகினார்கள். மழைவீழ்ச்சித் தரவுகள் (Rainfall
data) மிகத் துல்லியமாகக் கணக்கிடப்பட்டன, நிலத்தின்
ஸ்திரத்தன்மை பரிசோதிக்கப்பட்டது, மேலும் தேயிலைத்
தோட்டங்களில் மிக நேர்த்தியான வடிகால் அமைப்புகள் (Drainage systems) சட்டபூர்வமாகவே கட்டாயமாக்கப்பட்டன. இதனை ‘இயற்கையோடு இணைந்த பொறியியல்’ (Engineering
with nature) என்று அழைக்கலாம். அவர்கள் வளங்களைச் சுரண்டினாலும்,
அதன் விளைவுகளைத் தடுப்பதற்கான தொழில்நுட்ப முறைகளையும்
கையாண்டார்கள்.
சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கையின்
நிலைமை முற்றிலும் வேறானது. கொள்கை வகுப்பாளர்களும் ஆட்சியாளர்களும் தரவுகளை
விடவும் அரசியல் இலாபங்களுக்கே முன்னுரிமை அளித்தனர். திட்டமிடப்படாத
குடியேற்றங்கள், காடழிப்பு மற்றும் அறிவியல் எச்சரிக்கைகளை (Scientific warnings) உதாசீனம் செய்தமை ஆகியவை இன்றைய நெருக்கடிக்கு முக்கிய காரணங்களாகும்.
குறிப்பாக, நிலப் பயன்பாட்டுத் திட்டமிடல் (Land use
planning) என்பது குறுகிய கால பொருளாதார நோக்கங்களுக்காக
சிதைக்கப்பட்டது. மலைச்சரிவுகளில் முறையான வடிகால் வசதிகளின்றி கட்டடங்கள்
எழுப்பப்பட்டன. ஒரு காலத்தில் நீரை உறிஞ்சிய நிலம், இன்று
கொன்கிரீட் காடுகளாக மாறியுள்ளதால், நீர் ஓடுவதற்கு
வழியின்றி குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்து பேரழிவை ஏற்படுத்துகிறது.
இந்த விவாதத்தில் முன்வைக்கப்படும் ஒரு
பிரதான மாற்றுக் கருத்து என்னவென்றால்,
காலநிலை மாற்றம் என்பது உலகளாவிய ஒரு பிரச்சினை (Global
phenomenon) என்பதாகும். வளர்ந்த நாடுகள் வெளியிடும் கரியமில
வாயுவினால் ஏற்படும் புவி வெப்பமடைதலுக்கு இலங்கை போன்ற வளரும் நாடுகள் பலியாவதாக
வாதிடப்படுகிறது. இது ஒருவகையில் உண்மையே. ஆனால், இந்த
வாதத்தை ஒரு சாக்காகப் பயன்படுத்திக்கொண்டு நமது உள்ளூர் நிர்வாகத் தோல்விகளை (Administrative
failures) நாம் மறைக்க முடியாது. உலகளாவிய ரீதியில் காலநிலை
மாறினாலும், அதன் தாக்கத்தைத் தாங்கக்கூடிய மீளெழும் திறனை (Resilience)
ஒரு நாடு தனது உள்ளூர் முகாமைத்துவத்தின் மூலமே கட்டியெழுப்ப
முடியும். ஜப்பான் அல்லது நெதர்லாந்து போன்ற நாடுகள் புவியியல் ரீதியாகக் கடும்
சவால்களைக் கொண்டிருந்தாலும், சரியான பொறியியல் மற்றும்
திட்டமிடல் மூலம் அவற்றை வரமாக மாற்றியுள்ளன.
இலங்கையின் தற்போதைய நிலையைச் சீர்செய்ய
வேண்டுமாயின், நாம் வெறும் விமர்சனங்களைக் கடந்து ஆக்கபூர்வமான தீர்வுகளை நோக்கி நகர
வேண்டும். முதலாவதாக, மத்திய மலைநாட்டின் எஞ்சியுள்ள
காடுகளைப் பாதுகாப்பதுடன், சாத்தியமான இடங்களில் மீண்டும்
காடாக்கல் (Reforestation) திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
இது வெறும் மரங்களை நடுவதல்ல; அது ஒரு நீர் முகாமைத்துவக்
கட்டமைப்பை (Water management system) மீண்டும் உருவாக்குவதாகும்.
இரண்டாவதாக, எமது வடிகால் மற்றும் நீர்ப்பாசனக்
கட்டமைப்புகளை நவீன தொழில்நுட்பங்களுடன் மறுசீரமைக்க வேண்டும். அனர்த்த
முகாமைத்துவத் திணைக்களம் (Disaster Management Center) போன்ற
நிறுவனங்கள் வெறும் எச்சரிக்கை விடுக்கும் அமைப்புகளாக மாத்திரமன்றி, தரவு சார்ந்து இயங்கும் வலுவான அமைப்புகளாக மாற்றப்பட வேண்டும்.
பொருளாதார ரீதியாகப் பார்த்தால், ஒவ்வொரு முறையும்
அனர்த்தங்கள் நிகழும்போது நாம் கோடிக்கணக்கான டொடாலர் (Dollar) பெறுமதியான சொத்துக்களையும் உயிர்களையும் இழக்கிறோம். மீள்நிர்மாணப்
பணிகளுக்காகச் செலவிடப்படும் இந்தத் தொகையை, அனர்த்தத்
தடுப்பு மற்றும் திட்டமிடப்பட்ட அபிவிருத்திப் பணிகளில் முதலீடு செய்வது
புத்திசாலித்தனமானது. சூழலியல் பொறியியல் (Ecological engineering) பாடத்திட்டங்களை எமது பல்கலைக்கழகங்களில் ஊக்குவிப்பதன் மூலம், உள்ளூர் சூழலுக்குப் பொருத்தமான தீர்வுகளை நாம் கண்டறிய முடியும்.
புவிசார் அரசியல் (Geopolitics) ரீதியாக இலங்கை ஒரு கேந்திர
மையத்தில் அமைந்திருப்பதை வர்த்தக ரீதியான வரமாகப் பயன்படுத்த முனையும் அதேவேளை,
சூழலியல் ரீதியாக அதனைப் பாதுகாப்பது ஒரு தேசிய கடமையாகும்.
முடிவாக, இலங்கை என்பது இயற்கையால் சபிக்கப்பட்ட
நாடல்ல. மாறாக, இயற்கையின் கொடையை எவ்வாறு கையாள வேண்டும்
என்பதில் நாம் தோற்றுப்போயுள்ளோம். நமது புவியியல் அமைப்பு என்பது ஒரு
வெற்றுத்தாள் போன்றது; அதில் எதனை எழுதப்போகிறோம் என்பதை
எமது செயல்களே தீர்மானிக்கின்றன. அரசியல் மேடைகளில் பேசப்படும் வெற்றுக் கோஷங்களை
விடுத்து, தரவுகள் மற்றும் அறிவியல் ரீதியான அணுகுமுறையை (Data-driven
and scientific approach) முன்னிலைப்படுத்த வேண்டிய தருணம் இது.
இயற்கையோடு இயைந்து வாழ்வது என்பது பழமைவாதமல்ல, அதுவே நவீன
காலத்தின் மிகச்சிறந்த வாழ்வாதாரப் பொறியியல் ஆகும். எமது முகாமைத்துவச்
சீர்கேடுகளை மறைக்க இயற்கையைத் தண்டிப்பதை நிறுத்திவிட்டு, பொறுப்புணர்வுடன்
செயலாற்றினால் மட்டுமே, எதிர்காலச் சந்ததியினருக்கு இந்தத்
தீவை ஒரு வரமாக கையளிக்க முடியும்.



0 comments:
Post a Comment