சமீபத்திய
ஆண்டுகளில் மிகவும் சவாலான மனிதாபிமான நெருக்கடிகளில் ஒன்றை நாடு எதிர்கொள்ளும்
இந்த நேரத்தில், அரசியல் தலையீடு
என்பது வெறும் அறமற்ற செயல் அல்ல,
அது
ஆபத்தானது. இப்போது முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியது, அரசியல் பிம்பத்தை உருவாக்குவதோ, பிரச்சாரமோ அல்லது கட்சியின் தெரிவு நிலையோ
அல்ல. மாறாக, அவர்களின்
வாழ்வு சீர்குலைந்துள்ள இலட்சக்கணக்கான இலங்கையர்களின் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் மீண்டெழும் வாழ்வுதான்
தலையாயது.
கிராம உத்தியோகத்தர்களின் முக்கியத்துவம்
கிராம
உத்தியோகத்தர்கள், அடித்தள
மட்டத்தில் மிக நெருக்கமாகப் பணிபுரியும் அரச அதிகாரிகளில் முக்கியமானவர்கள்.
இவர்களுக்கு கிராமத்தின் ஒவ்வொரு குடிமகனைப் பற்றியும், நிலப்பரப்பையும், தரைமட்டத்தில் உள்ள உண்மையான நிலைமைகளையும், எந்தவொரு வருகை தரும் அரசியல்வாதியை விடவும்
மிக நன்றாகத் தெரியும். இவர்கள் தான் பல சமூகங்களுக்கு முதல் தொடர்புப் புள்ளியாக
இருந்து, தேவைகளை
மதிப்பிடுவதிலும், நிவாரணங்களை
ஒருங்கிணைப்பதிலும், துல்லியமான
பதிவுகளைப் பராமரிப்பதிலும் ஒரு முக்கியமான பங்கை வகிக்கின்றனர். இந்த
காரணத்தினால்தான், அவர்கள்
எந்தவொரு அழுத்தமும் இன்றித் தமது கடமைகளைச் செய்வதற்கு நியாயமான சுதந்திரம், அதிகாரம் மற்றும் வளங்கள் வழங்கப்பட
வேண்டும்.
அனர்த்தச்
சூழ்நிலைகளில் அரசியல்வாதிகளுக்கும் ஒரு பங்கு உண்டு என்பது மறுக்க முடியாத
உண்மைதான். ஆனால், அந்தப் பங்கு, களத்தில் முன்னணியில் உள்ள செயல்பாடுகளை
நுணுக்கமாக நிர்வகிப்பதோ அல்லது தலையிடுவதோ அல்ல. தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள்
தடையை ஏற்படுத்தக் கூடாது; மாறாக அவர்கள்
நிவாரணப் பணிகளைச் சுலபமாக்க வேண்டும். கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் பிற
அதிகாரிகளுக்குப் போதுமான நிதி, சரியான தளவாட
ஆதரவு, நம்பகமான போக்குவரத்து
மற்றும் ஒருங்கிணைப்பு, மற்றும் அத்தியாவசிய
சேவைகளுக்கான அணுகல் ஆகியவற்றை உறுதி செய்வதே அவர்களின் பங்களிப்பாக இருக்க
வேண்டும். இது வேலையைச் செய்து முடிப்பதற்கான தருணம், எந்தவொரு தனிநபரோ அல்லது கட்சியோ அதைச்
செய்வதில் அதிகத் தெரிவு நிலையில் இருக்கிறார்கள் என்பதைக் காட்ட வேண்டிய தருணம்
அல்ல.
ஏதாவது
ஒரு கிராம உத்தியோகத்தர் மீது முறைகேடு அல்லது தவறான நடத்தை குறித்த முறையான
கவலைகள் இருந்தால், அதற்கென உரிய
ஒழுங்குமுறை நடைமுறைகள் ஏற்கனவே உள்ளன. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு
அத்தியாவசிய சேவைகளை வழங்குவதைத் தாமதப்படுத்தாமல், அந்தச் சேனல்கள் பயன்படுத்தப்பட வேண்டும். எந்தவொரு
அமைப்பிலும் கண்காணிப்பு அவசியம் தான்,
ஆனால்
நிவாரணத்தை தாமதப்படுத்தும் தலையீடு,
இந்த
அரசியல்வாதிகள் தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் மக்களை மட்டுமே
காயப்படுத்தும்.
அரசியல் தலைமைத்துவத்தின் பொறுப்பு
உண்மையில், உதவி விநியோகத்தில் செல்வாக்கு
செலுத்துவதற்குப் பதிலாக, அரசியல்வாதிகள்
இன்னும் அர்த்தமுள்ள பங்களிப்புகளைச் செய்ய முடியும். நாடு முழுவதும், தனிநபர்களும் அமைப்புகளும் பொருட்கள், நிதி மற்றும் பிற வகையான உதவிகளைச்
சேகரித்துக் கொண்டிருக்கின்றன. இருப்பினும்,
ஆதரவை
வழங்குபவர்களுக்கும், அதை மிகவும்
அவசரமாகத் தேவைப்படுபவர்களுக்கும் இடையில் பொருத்தமான ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட
பொறிமுறை இலங்கையில் இன்னும் இல்லை. இந்த முயற்சிகளை வலுப்படுத்த அரசியல்வாதிகள்
உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இந்த
அனர்த்தம் கொள்கை வகுப்பாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய ஆழமான பலவீனங்களையும்
வெளிப்படுத்தியுள்ளது. பல பாடசாலைகள் சேதமடைந்துள்ள அல்லது தற்காலிகத்
தங்குமிடங்களாக மாற்றப்பட்டுள்ள நிலையில்,
குழந்தைகளின்
கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. குடும்பங்கள் அதிர்ச்சி, நிச்சயமற்ற தன்மை மற்றும் இழப்புடன் போராடுவதால், பொதுமக்களின் மன ஆரோக்கியம் பெரும் அடியைச்
சந்தித்துள்ளது. முகாம்களின் நெரிசல் ஒரு பெரிய சவாலாக உள்ளது. இது பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் தனியுரிமைக்கு ஆபத்துகளை
உருவாக்குகிறது. கூடுதலாக, அடையாள அட்டைகள், பிறப்புச் சான்றிதழ்கள், வங்கிக் கணக்குப் புத்தகங்கள், காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் அடமான, குத்தகை ஆவணங்கள் போன்ற அத்தியாவசிய
ஆவணங்களை பலர் இழந்துள்ளனர். இதனால் அவர்கள் சேவைகளைப் பெறவோ அல்லது உரிமையை
நிரூபிக்கவோ முடியாமல் தவிக்கின்றனர்.
இந்தத்
துறைகளில் அரசியல் தலைமைத்துவம் தலையிட முடியும்; தலையிடவும் வேண்டும். நடமாடும் ஆவணப்படுத்தல் பிரிவுகளை
நிறுவுதல், உளவியல் சமூக
ஆதரவை வலுப்படுத்துதல், தற்காலிக கற்றல்
இடங்களுக்கு வசதி செய்தல் மற்றும் தங்குமிட நிர்வாகத்தை மேம்படுத்துதல் போன்ற
பொறுப்புகள் சட்டமியற்றுபவர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களின் களத்திற்குள்
வருகின்றன.
மீளக்கட்டியெழுப்பும் பணியும், அரசியல் முதிர்ச்சியின் தேவையும்
அதே
நேரத்தில், உலர் உணவுப்
பொருட்கள், உடைகள், மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசியப்
பொருட்களின் விநியோகத்தின் அவசர நிவாரண கட்டம் விரைவில் முடிவுக்கு வரும். அடுத்து
வரவிருப்பது, மீளக்கட்டியெழுப்புதல்
முன்னுரிமையாக மாறும் ஒரு சவாலான கட்டமாகும். இங்கே தான் அரசியல் தலைமைத்துவம்
இன்றியமையாததாக இருக்கும். மீளக்கட்டியெழுப்புதலை கிராம உத்தியோகத்தர்களால்
மட்டும் செய்ய முடியாது. சமூகங்களுக்கு வீடுகள், பாடசாலைகள்,
சாலைகள்
மற்றும் வாழ்வாதாரங்களை மீண்டும் கட்டியெழுப்ப ஆதரவு தேவைப்படும். தொழில்கள்
புத்துயிர் பெற வேண்டும், வேலைகள்
மீட்கப்பட வேண்டும், மற்றும்
உள்கட்டமைப்புக்கள் மீட்டெடுக்கப்பட வேண்டும். ஒரு விரிவான மீட்புத் திட்டம்
குறுகிய காலத் திருத்தங்களை மட்டும் அல்லாமல், நீண்ட கால மீண்டெழும் தன்மையைத் தான் மிக முக்கியமாக
முன்னிலைப்படுத்த வேண்டும். அரசியல்வாதிகள் இப்போதிருந்தே இந்தக் கட்டத்திற்குத்
தயாராக வேண்டும்.
இந்த
நெருக்கடி, அரசியல்
பிளவுகளை ஆழப்படுத்துவதற்கான தருணம் அல்ல. மாறாக, பொதுவான ஒரு மனிதாபிமான நோக்குடன் தேசம் ஒன்றிணைவதற்கான
அழைப்பு. கிராம உத்தியோகத்தர்களின் கரங்களில் உள்ள நிவாரணப் பணிகளில் தலையிடுவது, நேரடியாகத் துன்பப்படும் மக்களுக்குத்
தீங்கு விளைவிப்பதாகும். நிவாரணப் பணியாளர்களின் பணியில் கண்ணியம் மற்றும்
தொழில்முறையை உறுதி செய்வதன் மூலம்,
அரசியல்வாதிகள்
தமது சொந்தச் செல்வாக்கைப் பெருக்குவதைக் காட்டிலும், தாம் உண்மையில் மக்களுக்குச் சேவை
செய்கிறார்கள் என்பதை நிரூபிக்க முடியும்.
சமூக
நல்லிணக்கம் மற்றும் தேசியக் கண்ணியம் இந்த நேரத்தில் கேள்விக்குறியாக உள்ளன. நாம்
அனைவரும் நமது அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும்
முதலிடம் கொடுக்க வேண்டும். மீண்டெழத் துடிக்கும் தேசத்தின் அடித்தளத்தைச்
சிதைக்காமல், பலப்படுத்துவதே
அரசியல் தலைவர்களின் கடமையாகும். இந்த அனர்த்தம் எமது நிறுவன மற்றும் அரசியல்
பலவீனங்களைக் காட்டிக் கொடுத்திருக்கிறது. இந்த வெளிப்படையான அனுபவத்திலிருந்து
நாம் கற்றுக் கொள்ள வேண்டும். உறுதியான அரசியல் தலைமைத்துவமும், உன்னதமான அரச சேவையாளர்களின் சுதந்திரமான
பணியும் இணைந்தால் மட்டுமே, இந்தப்
பேரழிவின் வடுக்களிலிருந்து ஒரு வலிமையான,
மீண்டெழும்
தேசமாக நாம் வெளிவர முடியும். இந்தத் தேசியக் கடமையை நாம் அனைவரும் உணர்ந்து, தேசத்தைக் கட்டியெழுப்ப ஒன்றிணைவோம்.


0 comments:
Post a Comment