ADS 468x60

18 April 2025

புகழின் போதை, எளிமையின் மேன்மை - ஒரு சிந்தனைப் பகிர்வு

சமீபத்தில் ஊரில் சந்தித்த இரு வேறுபட்ட மனிதர்கள் என் மனதில் ஆழமான எண்ணங்களை விதைத்தனர். ஒருவர், தான் வைத்திருக்கும் நவீன கருவிகளையும், வெளிநாட்டு தொடர்புகளையும் மிகைப்படுத்திப் பேசிக்கொண்டிருந்தார். ஏழு ஸ்மார்ட் போன்கள், பல மடிக்கணினிகள் என அடுக்கிக்கொண்டே போனார். ஆனால், உண்மையில் அவற்றின் பயன்பாடு அவருக்குத் தெரியுமா என்பது சந்தேகமே. 

எல்லோருக்கும் அது தெரிந்தும், அவரின் புகழ்ச்சியை யாரும் மறுக்கவில்லை. பார்ப்பதற்கு ஒரு "புகழரசன்" போலத் தோன்றினாலும், வேலையில்லாமல், அந்த கருவிகளைப் பயன்படுத்தவோ அல்லது பிறருக்கு உதவவோ முடியாத நிலையில் அவர் இருந்தார். ஏன் என்றால் அந்தளவுக்கு அவர் படித்தவர் இல்லை. படித்தவர்கள் இப்படியெல்லாமா இருப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் எதற்காகத் தங்களைத் தாங்களே உயர்த்திக் கொள்கிறார்கள் என்று எண்ணிப் பார்த்தேன்.

மற்றொருபுறம், என் நண்பர் ஒருவர் உலகப் புகழ்பெற்ற வைத்திய நிபுணர். ஆனால், அவரைப் பார்த்தால் ஒரு மருத்துவர் என்றே சொல்ல முடியாது. அவ்வளவு எளிமையான தோற்றம். அன்பானவர், பக்திமான், நல்ல குடும்பப் பின்னணி கொண்டவர். எனக்கான மருத்துவ ஆலோசனைகளைக்கூட மிக எளிமையாக, ஆனால் துல்லியமாகச் சொல்லித்தருவார். தேவைப்பட்டால், வெளிநாட்டில் இருந்துகூட வந்து உதவக்கூடிய உத்தமர் அவர்.  தான் அதைப்படித்தேன், இது தெரியும் என எதையும் சொல்லி பீத்தமாட்டார். ஏன் எனில் அவர் படித்தவர். இந்த இருவரையும் ஒப்பிட்டுப் பார்க்கையில், புகழின் போதைக்கும், எளிமையின் மேன்மைக்கும் உள்ள வேறுபாடு தெளிவாகப் புரிந்தது.

சரி, இப்போது விஷயத்திற்கு வருகிறேன். உங்களுக்கு 40 முதல் 50 வயதாகிவிட்டதா? அப்படியென்றால், தயவுசெய்து இதை கவனமாகப் படியுங்கள்!

உடனே மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கலாம். ஆனால், இதுதான் உண்மை. நம்மில் யாருமே இன்னும் பல ஆண்டுகள் உயிரோடு இருக்கப் போவதில்லை. போகும்போது எதையும் எடுத்துச் செல்லப் போவதில்லை. ஆகவே, சிக்கனமாக இருக்க வேண்டியதில்லை. செலவு செய்ய வேண்டிய விஷயங்களுக்கு தயங்காமல் செலவு செய்யுங்கள். மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய தருணங்களில் சந்தோஷமாக இருங்கள். உங்களால் முடிந்த தான தர்மங்களை யோசிக்காமல் செய்யுங்கள்! எதற்கும் கவலைப்படாதீர்கள். நீங்கள் கவலைப்படுவதால் எதையும் மாற்ற முடியாது. வருவது வந்தே தீரும்!

நாம் இறந்த பிறகு, நமது உடைமைகளுக்கு என்ன ஆகுமோ என்று கவலைப்படாதீர்கள். அந்த நிலையில், மற்றவர்களின் பாராட்டுக்களோ அல்லது விமர்சனங்களோ உங்களுக்குத் தெரியப் போவதில்லை. நீங்கள் கஷ்டப்பட்டு சேர்த்தவை அனைத்தும் உங்கள் வாழ்க்கையோடு முடிந்துவிடும். உங்களைக் கேட்காமலேயே அவை முடிக்கப்பட்டுவிடும். உங்கள் குழந்தைகளைப் பற்றி கவலைப்படாதீர்கள். அவர்களின் வாழ்க்கை அவர்கள் விதித்தபடிதான் அமையும். 

அதில் நீங்கள் எந்த மாற்றத்தையும் செய்ய முடியாது! சம்பாதிக்கிறேன் என்று பணத்தைத் தேடி அலையாதீர்கள். பங்குச் சந்தைகள் பக்கம் தலை வைத்துப் படுக்காதீர்கள். பணத்தைவிட உங்கள் ஆரோக்கியம் முக்கியம். பணம் ஆரோக்கியத்தை மீட்டுத் தராது! ஆயிரம் ஏக்கர் விளைநிலம் இருந்தாலும், ஒரு நாளைக்கு அரை கிலோ அரிசிக்கு மேல் உங்களால் உண்ண முடியாது. அரண்மனையாக இருந்தாலும், கண்ணை மூடி நிம்மதியாகத் தூங்க எட்டுக்கு எட்டு இடமே போதும். ஆகவே, ஓரளவு இருந்தால், இருப்பது போதுமென்று நிம்மதியாக இருங்கள்!

ஒவ்வொரு குடும்பத்திலும், ஒவ்வொரு மனிதனுக்கும் பிரச்சினைகள் இருக்கும். பிரச்சினை இல்லாத மனிதனைக் காட்டுங்கள் பார்க்கலாம்? ஆகவே, உங்களை யாரோடும் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். பணம், புகழ், சமூக அந்தஸ்து என்று மனதைப் போட்டு குழப்பிக் கொள்ளாதீர்கள். நீங்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளுடனும் இருந்து மற்றவர்களுக்கு உதாரணமாகத் திகழுங்கள்! யாரும் மாற மாட்டார்கள். யாரையும் மாற்ற முயற்சி செய்யாதீர்கள். அதனால் உங்கள் நேரமும் ஆரோக்கியமும்தான் கெடும். நீங்கள் உங்களுக்கான சூழ்நிலையை உருவாக்கி, அதன் மூலம் எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள்.

0 comments:

Post a Comment