ADS 468x60

26 April 2025

உலகில் நட்புதான் பெரிய சொத்து அது எல்லோருக்கும் கிடைப்பதில்லை

பொதுவாக என் வலைப்பக்கத்தில் தனிப்பட்டவர்களின் விஷயங்களைப் பற்றி எழுதுவது குறைவு. ஆனால் சில நினைவுகள் அப்படி... அவை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கலாம், ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் என்று தோன்றும்போது, என் மனதைத் திறக்கத் தயங்குவதில்லை. இன்று நான் உங்களோடு பகிர்ந்து கொள்ளப் போவது, என் பால்ய நண்பன் ஜெயசிங்கம் ஜெயராஜசூரியன் - சுதன் - உடனான என் நட்பைப் பற்றிய ஒரு சிறு நினைவுக் குறிப்பு.

நாங்கள் அரிவரி வகுப்பில் இருந்து நண்பர்கள். சுதன்... அவனை நினைக்கும்போதே என் உதட்டில் ஒரு புன்னகை தவழும். அவன் எப்போதும் மற்றவர்களை மகிழ்வித்து மகிழ்வதில் ஒரு தனி திறமைசாலி. அதுதான் அவனை எனக்கு அவ்வளவு பிடித்ததற்கும் காரணம். சிறு வயதில் இருந்து உயர்தரம் வரைக்கும் நாங்க ஒன்றாகத்தான் படித்தோம். இப்பொழுது அவன் நான் படித்த அதே தேத்தாத்தீவு மகா வித்தியாலயத்தின் பிரதி அதிபராக கடமை புரிகிறான் என்பதை நினைக்கும்போது எனக்குள் ஒரு பெருமிதம் பொங்குகிறது. கல்வி, வாழ்க்கை, தொழில் என்று என் கண் முன்னே அவன் அடைந்திருக்கும் வளர்ச்சி எனக்கு எல்லையில்லா மகிழ்ச்சியைத் தருகிறது.

குறிப்பாக அவனை நான் "சுதன்" என்று தான் அழைப்பேன். அவன் பேசும்போது உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத் தெரியாதவன். எந்த ஒரு நிகழ்வானாலும், என்னை அழைத்து கௌரவிப்பதில் அவன் முதலில் பெருமிதம் அடைவான். இன்று, என் முகநூலில் பழைய நினைவுகளைப் புரட்டிக் கொண்டிருந்தபோது, அவனுடன் நான் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தைப் பார்த்தேன். அந்த நொடிதான் இந்த நினைவுகளைப் பதிவு செய்யத் தோன்றியது.


எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது, அவன் 40-ம் கொலனி என்று நினைக்கிறேன், அங்கு ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, நானும் அவனும் சேர்ந்து அந்தப் பின்தங்கிய பாடசாலைக்கு ஒரு வாசிப்பு சாலை உருவாக்கிக் கொடுத்தோம். அதற்காக நாங்கள் இருவரும் அல்லும் பகலும் களப்பணி செய்து பாடுபட்டோம். அந்த நிகழ்வை எனக்காகவும், அந்த மக்களுக்காகவும் அவன் மிகச் சிறப்பாக ஒழுங்கமைத்திருந்தான். அது என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு தருணம். தன்னுடைய பணியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்த ஒரு நண்பன் வாழ்க்கையில் இன்னும் பல உயரங்களைத் தொட வேண்டும் என்பது என் ஆசை.

இன்று நாங்கள் ஒன்றாகப் படித்தவர்களில் பலரைக் காணவில்லை. பலருடன் தொடர்புகொள்வதில்லை. சிலர் வளர்ந்த நாடுகளுக்குச் சென்றுவிட்டால், பெரிய பதவிகளுக்குப் போய்விட்டால் பழைய நண்பர்களை மறந்துவிடுகிறார்கள். இப்படிப்பட்ட பலரை நான் இன்றும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். அது உண்மையான நட்பா என்று என் மனம் கேள்வி கேட்கிறது. அப்படியானவர்கள் பல கால நண்பர்களைக் காணும்போது யாரோ எவரோ என்று கடந்து போவதையும் நான் பார்த்திருக்கிறேன். ஆனால் சுதன் அதற்கு முற்றிலும் மாறானவன். அவன் ஒரு மிகப்பெரிய தலைமைத்துவப் பண்பாளன்.

எந்த சூழ்நிலையிலும் உண்மையான நண்பன் நம்முடன் நிற்பான். அவன் நம் பின்னால் நம்மைப் பற்றி கிசுகிசுக்க மாட்டான். அவன் எப்போதும் நம் நலன்களில் மட்டுமே நாட்டம் கொண்டிருப்பான். அதற்கான வாழும் உதாரணம் என் சுதன். நம் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் நமது சிந்தனைகளையும், நற்குணங்களையும் பட்டை தீட்டி, நம்மை நமக்கு நன்கு உணர்த்த ஒரு உண்மையான நண்பன் தேவைப்படுகிறான். நம்முடைய சொந்த வாழ்விலும், பணியிலும் நமக்கு பிரச்சனை ஏற்படுவது இயல்பானதே. அப்போது நம்முடைய உண்மையான நண்பர்களால் ஒரு தெளிவான தீர்வை நமக்குத் தர முடியும். நல்ல நண்பனாக நம்மாலும் அவர்களின் பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல தீர்வைத் தர முடியும்.

நம் அனைவரது வாழ்விலும் இரத்தத் தொடர்பில்லாத உன்னதமான உறவு நட்பு ஆகும். ஒரு சிறந்த நட்புக்கு வயது, மொழி, இனம், நாடு, ஜாதி எதுவும் கிடையாது. இது அன்பின் அடையாளமாகக் கருதப்படுகிறது. மனித வாழ்வில் நட்பு மகத்துவம் மிக்கது.

ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்ளுதலை அடிப்படையாகக் கொண்டது நட்பு. உண்மையான நட்புக்கு இணை எதுவுமில்லை. அதனால் ஒருவரது வாழ்வில் ஏற்படும் நல்ல விளைவுகள் ஏராள மானவை. ஒருவரது வாழ்வில் திருப்பங்களுக்கும் நட்பு அடிப்படையாக அமைகிறது. நமது துக்கத்திலும் மகிழ்ச்சியிலும் பங்கு கொள்வதில் நண்பர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் நட்புக்குத் தடையாக இருப்பதில்லை. கிருஷ்ணர் - குசேலன் நட்பு அதற்கு ஓர் எடுத்துக்காட்டு. வள்ளுவர் கூட நட்பின் பெருமையைப் பற்றி அழகாகச் சொல்லியிருக்கிறார்: "செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு."

சுதனுடனான என் நட்பு எனக்கு பல பாடங்களைக் கற்றுக்கொடுத்திருக்கிறது. ஒரு உண்மையான நண்பன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அவன் ஒரு சிறந்த உதாரணம். அவனிடம் நான் கற்றுக் கொண்ட முக்கியமான விஷயம் என்னவென்றால், நாம் எந்த உயரத்தில் இருந்தாலும், நம்முடைய பழைய நண்பர்களையும், நம்முடைய வேர்களையும் மறக்கக் கூடாது என்பதுதான். அவன் இன்றும் அன்றுபோல, என்னையும் மற்ற நண்பர்களையும் மதிப்பதும், அன்பு செலுத்துவதும் எனக்குப் பெருமையாக இருக்கிறது.

வாழ்க்கையில் நல்ல நண்பர்களைப் பெறுவது ஒரு வரம். அந்த வரத்தை நாம் பேணிப் பாதுகாக்க வேண்டும். உண்மையான நட்பு காலத்தால் அழியாதது. அது நம்முடைய கஷ்ட நஷ்டங்களில் நமக்கு உறுதுணையாக இருக்கும். நம்முடைய சந்தோஷங்களை இரட்டிப்பாக்கும். சுதனுடனான என் நட்பு அப்படிப்பட்டது. அவனைப் போன்ற ஒரு நண்பன் எனக்குக் கிடைத்ததற்கு நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன்.

இந்த நினைவுகளைப் பகிர்ந்து கொள்வதன் மூலம், உங்கள் வாழ்விலும் இப்படிப்பட்ட உண்மையான நண்பர்கள் இருந்தால் அவர்களைப் போற்றுங்கள் என்று நான் சொல்ல விரும்புகிறேன். அந்த நட்பை மேலும் வலுப்படுத்துங்கள். ஏனென்றால், இந்த உலகில் உண்மையான நட்பை விட பெரிய சொத்து வேறில்லை.

நன்றி.

 

0 comments:

Post a Comment