ADS 468x60

20 September 2025

தன்மன்பிள்ளை கனகசபை ஐயா! வெறும் அரசியல்வாதி மட்டுமல்ல, மண்ணின் உயிர்நாடியாய் இருந்த ஒரு விவசாய அறிஞர்.

 
தமிழ் ஈழத்தின் தென்னகமான மீன் பாடும் தேனாடாம் மட்டக்களப்பதனின் கம வாசமும் ஆன்மீகமும் ஒருங்கே சேர்ந்து மிளிர்கின்ற களுதாவளை எனும் பழம்பெரும் கிராமத்தில் இருந்து கிளம்பிய ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக அமரர் தன்மன்பிள்ளை கனகசபை ஐயா அவர்களைத் தமிழ் சமூகம் உற்று நோக்கிக் பார்க்கின்றது. அவர் ஒரு சமூக சேவகன், ஆன்மீகத் தொண்டன், அரசியல்வாதி, விவசாய அறிஞன், இளைஞர்களுக்கான வழிகாட்டி, பின்தங்கியவர்களுக்கான உதவியாளன், தமிழினத்தின் காவலன், தமிழ் மொழியின் வளர்ச்சியாளன் எனப் பன்முகத்தன்மை கொண்டவராக வாழ்ந்தார். இவர் இழப்பு அந்த ஊருக்கு மாத்திரம் அல்ல, ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் ஒரு பெரும் இழப்பாகவே பார்க்கப்படுகின்றது.

அன்று மாலை வேளை. சூரியன் தன் உக்கிரத்தைக் குறைத்து, செம்மஞ்சள் நிறத்தைப் பரப்பத் தொடங்கியிருந்தான். நான் எங்கள் குடும்பத்துக்குச் சொந்தமான வெங்காயத் தோட்டத்தில் நின்று, பிடுங்கிய குண்டு வெங்காயக் கட்டுகளை அடுக்கிக் கொண்டிருந்தேன். மண்ணின் வாசனையும், மாலைக் காற்றின் ஈரப்பதமும் ஒரு சேரக் கலந்த அந்த அமைதியான நேரம்.

திடீரென, என் அப்பா, சற்றுத் தொலைவில் வயல் வரப்பில் நின்று கொண்டிருந்தவர், ஒருவிதமான மகிழ்ச்சி கலந்த மரியாதையுடன், "அண்ணன் வாங்க என்ன இந்தப்பக்கம்!" என்று உற்சாகமாகக் கூறினார். அப்பாவுடைய குரலில் இருந்த மரியாதை, ஒரு நேசத்துக்குரியவரைப் பார்த்ததற்கான உண்மையான அன்பை வெளிப்படுத்தியது.

நான் திரும்பிப் பார்த்தபோது, அந்தக் கம்பீரமான உருவம், ஒரு வெள்ளை சேட்டும் வேட்டியுடனும், தோளில் ஒரு பையுடனும் எங்கள் தோட்டத்து வரப்பை நோக்கி வந்து கொண்டிருந்தது. அவர், தடித்த புன்னகையுடன், முடியை அழகாக ஒரு பக்கத்துக்கு வகுந்து, நெற்றியில் ஜொலிக்கும் சந்தனப் பொட்டுடன் இருந்தார்.

அது வேறு யாருமில்லை; ஆரம்பத்தில் விவசாயத் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தவரும், அதன் பிறகு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராக உயர்ந்த அமரர் தன்மன்பிள்ளை கனகசபை ஐயா அவர்கள்தான். அன்றைக்கு என் அப்பாவின் முகத்தில் தெரிந்த அதே அன்பு, அதே மரியாதை, இன்றும் என் நினைவுகளில் பசுமையாய் விரவிக் கிடக்கின்றது.

சிறு வயதில், கனகசபை ஐயா எங்கள் வெங்காயத் தோட்டம் உட்பட, அவர் அதிகாரியாக இருந்த 'ரேஞ்சில்' உள்ள அனைத்துப் பயிர்காலைக்கும் அடிக்கடி வருவார். அப்பா அவரை அன்போடு ‘அண்ணன்’ என்றுதான் அழைப்பார். எங்கள் இரு கிராமங்களும் விவசாயக் கிராமங்கள். அந்தத் துறை அவர்களுக்கு வெறும் பணி அல்ல, அதுவே அவர்களது உயிர்மூச்சாக இருந்தது என்பதை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.

கனகசபை ஐயாவின் வாழ்க்கை, அவர் இந்த மண்ணின் மீது கொண்ட ஆழமான காதலைப் பிரதிபலித்தது. அவர் வெறும் அலுவலராக இருக்கவில்லை; அவர் ஒரு விவசாய அறிஞர்.

காலை வேளைகளில், வயல் வரப்புகளிலும், பயிர்த் தோட்டங்களிலும் நடை நடையாய் செல்வார். அவர் வீசும் கால்கள் சாதாரணமாக மண்ணைத் தொட்டதில்லை; அது, மண்ணின் வளத்தை, பயிரின் ஆரோக்கியத்தை ஆராய்ந்த அடிகள்.

அவர் ஒவ்வொரு செடியையும் தன் குழந்தை போல ஆராய்வார். அந்தச் செடிகளிடம் பேசிய ஒரு அர்ப்பணிப்பை நான் அதிகம் கண்டிருக்கிறேன்.

அவர் விவசாயிகளுக்கு அதிகம் அறிவுறுத்துவார். "இந்தக் கதிரில் நோய்த்தொற்று ஆரம்பித்திருக்கிறது, கவனம்," "இந்த நிலத்திற்கு இந்த உரம் கூடுதலாகத் தேவை," "அடுத்த போகத்திற்கு இந்த விதையை நடுவது அதிக விளைச்சல் தரும்" என்று அவரது வார்த்தைகளில் விவசாயத்தின் மீதான அக்கறை கொட்டிக் கிடக்கும்.

இந்தப் பிராந்தியத்தின் விவசாய வளர்ச்சிக்கு அவர் ஒரு முன்னோடியாக இருந்தார் என்பதை யாரும் மறுக்க முடியாது. குறுகியகாலப் பயிர்கள் முதல் நெடுங்காலப் பயிர்கள் வரை, அவற்றின் வளர்ச்சிக்கு அவரும் அவரது குடும்பத்தினருமே அதிகம் பங்களிப்பு வழங்கியுள்ளனர். எனக்குத் தெரிந்தவரை, எங்கள் மண்ணில் இன்று செழித்து நிற்கும் 'விலாட்டு மாமரம்' இவரால்தான் அதிகமாக அறிமுகப்படுத்தப்பட்டது. அதை ஒட்டுவது எப்படி, அதன் புதிய ஒட்டு ரகங்களை அறிமுகப்படுத்துவது எப்படி என்று அனைத்தையும் இந்தக் காலத்தில் தீவிரப்படுத்தி, செழிக்கச் செய்த ஒரு புரட்சியாளனை நாம் இப்போது இழந்து நிற்கிறோம்.

மக்கள் பிரதிநிதி: தமிழ் இனத்தின் காவலன்

அவர் விவசாய அறிஞராக ஆற்றிய பணிக்கு பிறகு, அரசியல் களம் ஒரு புதிய பரிமாணத்தைக் கொடுத்தது. அவர் ஒரு பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு, பல சேவைகளைச் செய்தார். அவரது குரல், கிராமத்து வரப்புகளைத் தாண்டி, பாராளுமன்றத்தின் அரங்கில் தமிழுக்காகவும், இனத்துக்காகவும் ஓங்கி ஒலித்த ஒரு தீர்க்கமான குரல் ஆனது.

இன்றும் எனக்கு ஞாபகம் இருக்கின்றது, தேற்றாத்தீவு கொம்புச் சந்திப் பிள்ளையார் ஆலய முன்றலில் நடந்த ஒரு தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசினார். அவர் சொன்ன வார்த்தைகள், அவர் சமூகத்தின் மீதும் கொண்டிருந்த ஆழமான பற்றை வெளிப்படுத்தியது:

"தேற்றாத்தீவும் களுதாவளையும் நெருங்கிய சகோதரக் கிராமங்கள். அவர்கள் எப்போதும் பிட்டும் தேங்காய்ப்பூவும் போல சேர்ந்திருப்பார்கள்."

அந்த வார்த்தைகள் வெறும் மேடைப் பேச்சு அல்ல, அது எங்கள் சமூகத்தின் மீதும், மக்களின் மீதும் அவர் கொண்டிருந்த ஆழமான பற்றின் வெளிப்பாடு. அவர் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த ஒரு தலைவனாக இருந்தார்.

அவரது திட்டங்களும், சேவைகளும் பின்தங்கிய சமூகத்தின் மீது கவனம் செலுத்தின. என்னவெனில், தேற்றாத்தீவு ஆயுர்வேத வைத்தியசாலைக்கான ஆரம்பப் புள்ளியாக அவர் இருந்தார். அதன் பிறகு, கிழக்கு பல்கலைக்கழகத்தின் விவசாயப் பீடத்திற்கான ஆலோசனைச் சபை அங்கத்தவராகவும் செயல்பட்டு, எமது பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு வழிகாட்டினார். மேலும், தொழில் வாய்ப்பைப் பெறுகின்ற இளைஞர்கள் திறனோடு கூடிய தொழிலினை பெறுவதற்காக, தொழிற்பயிற்சி நிலையம் ஒன்றை அமைப்பதற்கு ஆரயம்பதி பிரதேச செயலகப் பிரிவுக்குள் பெருந்தொகை நிதியைப் பெற்றுக் கொடுத்து, அந்தச் செயல்பாட்டிற்கு வித்திட்டவர் அவரே. இந்தச் செயல்பாடுகள், அவர் தமிழ் சமூகத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக மிளிரக் காரணம்.

அன்றைக்கு விவசாய நிலங்களில் கண்ட அவரது அர்ப்பணிப்பும், பிற்காலத்தில் பாராளுமன்றத்தில் தமிழ் இனத்திற்காக ஒலித்த அவரது தீர்க்கமான குரலும் எனக்கு ஒரு அசைக்க முடியாத பாடத்தைப் புகட்டிவிட்டது.

"ஒரு மனிதன் தான் வாழும் சமூகத்திற்கு எவ்வாறு பங்களிப்பு செய்ய வேண்டும் என்பதற்கான ஒரு அசைக்க முடியாத பாடமாக எனக்குள் பதிந்துவிட்டது."

சாதாரண விவசாயி முதல், மக்கள் பிரதிநிதி வரை, எந்தப் பொறுப்பிலும் அவர் தன் கடமையைச் செவ்வனே செய்தார். அவரது வாழ்க்கை, 'தான் சார்ந்துள்ள துறையிலும், தான் சார்ந்த சமூகத்திலும் ஒருவர் ஆழமான ஈடுபாட்டுடன் பணியாற்றினால், அது எப்படி ஒரு புரட்சியை ஏற்படுத்தும்' என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. விவசாயத் துறைக்கு அவர் ஆற்றிய பணி, அரசியல் அரங்கில் அவர் எழுப்பிய குரல், இவை யாவும் காலத்தால் அழியாத பொக்கிஷங்கள்.

இவ்வாறான ஒரு பெருந்தகை (19.09.2023) அன்று எம்மைவிட்டுப் பிரிந்து சென்றமை, மீளாத்துயரை ஏற்படுத்தியுள்ளது. அவர் இறைவனடி சேர்ந்துள்ள செய்தி கேட்டதும், ஒரு கணம் மனம் கனத்துப் போனது. ஆனாலும், அவரது நினைவுகள் காலத்தைத் கடந்தும், எங்கள் மண்ணில், எங்கள் மனங்களில் பசுமையாய் வாழும் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை. அவர் விதைத்த விதைகள், நாற்றுக்களாய் வளர்ந்து, செழித்து, இந்த மண்ணுக்கு மேலும் மேலும் வளமை சேர்க்கும்.

அவர் ஆத்மா சாந்தியடைய வேண்டுவதோடு, அன்னாரின் குடும்ப உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கின்றேன். காலம் பல காயங்களை ஆற்றினாலும், சில நினைவுகள் என்றும் பசுமையாகவே இருக்கும். கனகசபை ஐயா அத்தகைய ஒரு பசுமையான நினைவாய் எங்கள் மனங்களில் வாழ்வார்.

திரு.சிவகுரு.தணிகசீலன்

தேற்றாத்தீவு

0 comments:

Post a Comment