அண்மைக் காலமாக
நேபாளத்தில் பற்றி எரிந்து கொண்டிருக்கும் ஆர்ப்பாட்டங்கள் இதற்கு நல்ல உதாரணம்.
இந்த ஆர்ப்பாட்டங்கள் சரியானவை என்று சொல்பவர்களும், தவறானவை என்று வாதிடுபவர்களும் உள்ளனர்.
இவர்களுக்கிடையில், இரண்டு பக்கமும் சேராமல், விமர்சனங்களை மட்டும் முன்வைப்பவர்களும் இருக்கின்றனர். தற்போது நேபாளத்தில்
உத்தியோகபூர்வமான அரசாங்கம் இல்லை. தலைநகர் காத்மாண்டுவில் கூடிய “Gen-Z” என அழைக்கப்படும் இளம் தலைமுறையினரின் ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார்
துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 22 பேர் கொல்லப்பட்டதாக
செய்திகள் வெளியாகின. இது உண்மையான எண்ணிக்கையாக இருக்காது. இது இலங்கையின் காலி
முகத்திடலில் நடந்த போராட்டத்தின் மற்றொரு வடிவம்தான். "ரணில் இல்லாமல்
இருந்திருந்தால், இலங்கையிலும் பாரிய அழிவுகள்
ஏற்பட்டிருக்கும்" என்பது ஒரு வாதம். ஆனால், "அங்கும்
மழை பெய்கிறது, இங்கும் மழை பெய்கிறது" என்று ஒரு
சிக்கலான விடயத்தை அலசலாமா?
இந்த
ஆர்ப்பாட்டங்கள் அனைத்தும் அமெரிக்க சதித்திட்டங்களின் விளைவு என்று கூறுபவர்களும்
இருக்கின்றனர். எப்போதாவது ஒரு சம்பவம் தானாகவே உருவாகுமா? ஆரம்பத்தில் அமைதியான
முறையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், பல்கலைக்கழக
மாணவர்களும் பாடசாலை மாணவர்களும் கலந்து கொண்டதை நேபாள ஊடகங்கள் வெளிப்படுத்தின.
எனினும், ஆர்ப்பாட்டம் பாராளுமன்றத்தை நோக்கி நகர
ஆரம்பித்ததும், பொலிஸாருடன் ஏற்பட்ட மோதலில் பொலிஸார்
துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அதன் பின்னரே நிலைமை
மோசமடைந்ததாகவும் அறியக்கிடைத்தது.
அமைதியான
போராட்டத்தில் ஒரு மூன்றாவது தரப்பினர் உள்நுழைந்தது இங்குதான். இலங்கையில் நடந்த
போராட்டமும் பல வடிவங்களை எடுத்து, பல நிறங்களைப் பூசிக்கொண்டபோது, கோட்டாவை விரட்டியடித்த நாளில் பல தரப்பினர் இணைந்து கொண்டார்கள் என்பது
இரகசியமல்ல. அமைதி குலைந்து போவது இத்தகைய தருணங்களில்தான். நோக்கங்கள் வன்முறையாக
மாறும்போது, அரசாங்கத்தின் கட்டுப்பாடு தளர்ந்து போகிறது.
எந்தப் பிரச்சினைக்கும் அரசியல் முடிவு இப்படித்தான் அமைகிறது.
ஒரு பேருந்தில்
ஒரு பெண்ணுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், அது சரியா, தவறா
என்று பார்க்காமல், ஆர்ப்பாட்டங்கள் வெடிக்கும்போது, மற்றவர்கள் உடனடியாக தங்கள் கைகளில் நீதியை எடுத்துக்கொள்கிறார்கள். ஒரு
வாகனம் மோதி ஒருவர் காயமடைந்தால் அல்லது இறந்தால், சுற்றி
இருப்பவர்கள் தாறுமாறாக நடந்துகொள்கிறார்கள். சரியா தவறா என்பதை உடனடியாக அவர்களே
தீர்மானித்து விடுகிறார்கள். எந்தவொரு ஆர்ப்பாட்டம் நடந்தாலும், அதற்கும் சம்பந்தமில்லாத தரப்பினரின் தலையீட்டால் தான் அதிகளவு சேதம்
ஏற்படுகிறது. ஆரம்பத்தில் ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்தவர்களுக்கு, பின்னர் அதனை கையாள்வது கடினமாகிறது. அதன்பின் ஆர்ப்பாட்டத்தை
ஆரம்பித்தவர்களும் அதே படகில் ஏறி, குற்றமிழைக்க ஆரம்பிக்கிறார்கள்.
ஒட்டுமொத்த செயற்பாடும் வெறித்தனமாக மாறுகிறது. இறுதியில், போராட்டத்தை
ஆரம்பித்தவர்களே சிறைக்கும் செல்கிறார்கள். உடனடியாக வந்து கலவரம் செய்பவர்கள்
உடனடியாகவே ஓடிவிடுகிறார்கள். இதனால் ஏற்படும் அழிவுகள் பாரதூரமானவை. இதன் விளைவு
மிக அதிகம். நேபாளம் மட்டுமல்ல, வேறு எந்த நாட்டிலும் நிலைமை
இதுதான். இது சரியா தவறா என்பது பற்றியதல்ல, விடயங்கள்
நடக்கும் விதம் பற்றியது.
இலங்கை, பங்களாதேஷ், இப்போது நேபாளம் ஆகிய நாடுகள் இந்த அனுபவங்களை அண்மைக் காலத்தில்
சந்தித்துள்ளன. பங்களாதேஷில், சலுகை முறையை நீக்குமாறு கோரி
ஆரம்பித்த ஆர்ப்பாட்டம், பங்களாதேஷை நாதியற்றதாக மாற்றி
முடிந்தது. இலங்கையின் கோட்டா எதிர்ப்பு போராட்டமும் ரணில் ஜனாதிபதியாக வருவதிலும்,
அதன் முடிவில் ஜேவிபிக்கு அதிகாரம் கிடைப்பதிலும் முடிந்தது.
நேபாளத்தில் சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்பட்டன. இறுதியில் பாராளுமன்றம், ஹில்டன் ஹொட்டல் உட்பட பல இடங்களிலும், பல மக்களின்
உயிரிழப்புகளிலும் முடிந்தது. இலங்கையை விட பங்களாதேஷின் நிலை மோசமாக இருந்தது.
நேபாளத்தின் நிலை அதனை விடவும் மோசமானது. இந்த நிலைமை இந்தியா அல்லது சீனாவில்
ஏற்பட்டால் என்ன ஆகும்?
தற்போது
நேபாளத்தின் ஆட்சி தற்காலிகமாக இராணுவ ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
சிலவேளைகளில் இராணுவத்திற்கு அதிகாரம் பிடிபட்டு, அது தொடர்ந்து நீடிக்கவும் கூடும்.
அதிகாரத்திற்கான ஆசை ஒரு இலகுவான நோயல்ல. அரசாங்கம் கட்டளையிடும் வரை பிரச்சினைகளை
வளரவிடும் இராணுவம், அரசாங்கம் இல்லாதபோது அதிகாரத்தை
கைப்பற்ற விரும்புகிறது. பிறரின் கட்டளைக்கு பணிந்தவர்கள், தமது
கட்டளைக்கு மற்றவர்களை கட்டுப்படுத்த வல்லவர்கள். அதன் விகாரம் சிறிது காலத்தின்
பின்னர் வெளிப்படும்.
எவ்வாறாயினும், இலங்கை மற்றும்
பங்களாதேஷ் போராட்டங்களில் காணப்படாத ஒரு விடயம் நேபாளத்தில் காணப்பட்டது. அதாவது,
"Gen-Z" தலைமுறையினர் சமூகத்திற்கு ஒரு சீர்கேடா? அல்லது எதிர்காலத்தின் பாதுகாவலர்களா? என்ற கேள்வி
நேபாளத்துக்கு மட்டுமல்ல, உலகிலுள்ள எல்லா நாடுகளுக்கும்
எழுகிறது. இலங்கை மற்றும் பங்களாதேஷிலும் இந்த தலைமுறையினர் முன்னணியில்
இருந்தனர். இறுதியில் பல தலைமுறைகள் கலந்து, விகாரம்
நடந்தாலும், இந்த மூன்று நாடுகளிலும் போராட்டத்தை
ஆரம்பித்தது இந்த "Gen-Z" தலைமுறையினர்தான். இது
ஒரு தலைமுறையை அடையாளம் காண பயன்படுத்தப்படும் ஒரு சொல்லாகும். இது இலகுவாக
பயன்படுத்தும் ஒரு பிரயோகமாகும்.
அமெரிக்காவிலிருந்து
வந்த இந்த முறையின்படி, ஒரு குறிப்பிட்ட தலைமுறையை அடையாளம் காண ஆங்கில எழுத்து
பயன்படுத்தப்படுகிறது. 60களின் பிற்பகுதியில் இருந்து 80களின் ஆரம்பம் வரை பிறந்த தலைமுறையினர் “Gen-X” என்று
அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் தொழில்நுட்பம் இல்லாதவர்கள். அடுத்த தலைமுறை “Millennials”
என்று அழைக்கப்பட்டது. 80களின் ஆரம்பம் முதல் 90களின் பிற்பகுதி வரை (1980-1995) “Gen-Y” என்று
அழைக்கப்பட்டது. அவர்கள் ஒரு குறிப்பிட்ட அளவு தொழில்நுட்ப அறிவைக் கொண்டவர்கள்,
ஒரு வகையில் அரை தொழில்நுட்பவாதிகள். ஆனால் நேபாள போராட்டங்கள்
மூலம் வெளிப்பட்டது “Gen-Z” தலைமுறையினர்தான். அவர்கள் இணைய
இணைப்புடன் முழுமையாக தொழில்நுட்ப வாழ்க்கைக்கு அடிமையான தலைமுறையினர். 90களின் பிற்பகுதி முதல் புதிய ஆயிரவாண்டின் முதல் தசாப்தம் முடியும் வரை
பிறந்து வளர்ந்த தலைமுறையினர். அவர்களின் அனைத்து செயற்பாடுகளும்
தொழில்நுட்பத்துடன் பிணைந்துள்ளன. அது அவர்களின் மொபைல் ஃபோன் மூலமே நடக்கிறது.
கல்வி கற்பது, தகவல்களை அறிவது, விளையாடுவது
முதல் காதலிப்பது வரை அனைத்தும் தொலைபேசியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அனைத்து
மனநிறைவும், அதேபோல அழிவுகளும் தொலைபேசியின் ஊடாகவே பரவி
விடுகிறது.
இன்று, அந்த தலைமுறையினருக்கு
அது இல்லாதது என்பது, அனைத்தும் இல்லாதது போல. தான் என
ஒருவன் இல்லை என்று உணருகிறார்கள். இலங்கையிலும், பங்களாதேஷிலும்
காணாத ஒரு எதிர்கால அழிவு நேபாளத்தில் காணப்பட்டது இதுதான். இது எந்த நாட்டிலும்
எந்த நேரத்திலும் நிகழக்கூடிய ஒரு நிலைமை. மக்கள் இன்றும் தண்ணீர் மற்றும்
மின்சாரம் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். ஆனால், இன்று
மின்சாரம் இல்லாதபோது பிரச்சினை இருள் அல்ல, தொலைபேசியை
சார்ஜ் செய்ய முடியாத பிரச்சினைதான். தண்ணீர் மற்றும் மின்சாரத்தை விட டேட்டா
சக்திவாய்ந்த ஒரு சமூகம் உருவாகியுள்ளது. அவர்கள் எல்லாவற்றையும் தொலைபேசி
மூலமாகவும், அதில் உள்ள சமூக ஊடகங்கள் மூலமாகவும்
சிந்திக்கிறார்கள். எல்லோரும் எல்லாவற்றையும் அறிந்த, தனிமையில்லாத,
எல்லாம் தமக்கு உள்ளது என்று நம்பும் கதாபாத்திரங்களாக
மாறிவிட்டார்கள். இந்த டேட்டா இல்லாதபோது, அவர்கள் அனைத்தும்
இழந்தவர்களாகிவிடுகிறார்கள்.
அரை
தொழில்நுட்பவாதிகளாக இருந்தவர்கள், தங்கள் எதிர்கால குழந்தைகளை ஒரு
தொழில்நுட்பக் குழந்தையாக இருக்க வேண்டும் என்று நினைத்தனர். அதற்காக அதிகபட்ச
தியாகங்களை செய்தனர். குழந்தைகளுக்கு கல்வி, தொழில்நுட்பம்,
ஆடம்பரமான வசதிகளை வழங்குவதன் மூலம் அனைத்தும் முழுமையானது என்று
நம்பினார்கள். தாங்கள் காணாத ஒரு உலகத்தை அவர்கள் காண்பார்கள் என்று நம்பினார்கள்.
பெரும்பாலான ஆசிய நாடுகளில், இந்த கலாச்சார அமைப்பு
தொழில்நுட்ப ரோபோக்களை உருவாக்கியது.
இப்போது அந்த
மக்களுக்கு தங்கள் அவசியமான விடயங்கள் இல்லாமல் வாழ முடியாது. அம்மா, அப்பா இல்லாமல் வாழலாம்,
ஆனால் தொலைபேசி வேண்டும். சில ஊடகங்கள் அத்தியாவசியமானவை. அனைத்து
தேவைகளையும் பூர்த்தி செய்யும் ஒரு கருவியாக அது மாறியதால், அது
இல்லாதது தற்கொலைக்கு வழிவகுக்கும் ஒரு விடயமாக மாறிவிட்டது. இதுதான் நேபாளம்
மூலம் வெளிப்பட்ட உண்மை. இன்று இலங்கையில் ஒரு சிறிய குழந்தை கூட தொலைபேசியை
எடுத்தால், வீட்டைத் தலைகீழாக மாற்றிவிடுகிறது. குழந்தைக்கு
உணவு ஊட்டும்போது கூட தொலைபேசி இன்றியமையாததாகிவிட்டது. இந்த குழந்தை
எதிர்காலத்தில் இந்த தலைமுறைக்கு ஒரு புலிக்குட்டியாக மாறும். நாம் இன்று ஒரு
தற்கொலை தொழில்நுட்ப உலகில் இருக்கிறோம். அதன் படைப்பாளர்கள் உலகிற்கு அனைத்தையும்
கொடுத்தோம் என்று நினைக்கலாம். ஆனால் இறுதியில் இந்த தலைமுறையினருக்கு உலகம்
இழக்கப்பட்டுவிட்டது என்பதை இப்போது அனுபவிக்கிறோம். உலகம் நம் கையில் என்ற மாயை
விரைவில் விலகி வருகிறது. அதிக வளர்ச்சி, அதிக அழிவை
அழைக்கிறது. பள்ளத்தின் அடிமட்டம் தெரியாத அளவுக்கு வந்துவிட்டது.
மிகவும் கடினமாக
கட்டப்பட்டவை மிக இலகுவாகவும், விரைவாகவும் அழிக்கப்படலாம் என்பது இங்கு புலப்படுகிறது.
ஆனால், அவற்றை மீண்டும் உருவாக்குவது அவ்வளவு இலகுதானா?
மனிதனும் டைனோசர்கள் போல அழிந்து கொண்டிருக்கிறான். இந்த புதிய
தலைமுறைகள் குடும்பத்திலும், தமது கூட்டத்திலும், சமூகத்திலும் வன்முறை மிக்கவர்களாக இருக்கிறார்கள். ஆனால் பாரதூரமான அழிவை
ஏற்படுத்துவது இவர்களின் முந்தைய தலைமுறையினர்தான். ஏனென்றால், இந்த தலைமுறை இப்படி இருப்பதற்கு அந்த தலைமுறைதான் பொறுப்பு.
0 comments:
Post a Comment