இன்று
நான் உங்கள் முன் நிற்பது வெறும்
வீரவசனம் பேச அல்ல.
உங்கள் மத்தியில் இருந்து எழுந்த, உங்கள்
இதயத்தின் ஒரு துடிப்பாகவே இந்தப் உரையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
முள்ளிவாய்க்காலின் பெரும் துயரை சுமந்து நிற்கும் நம் அனைவர் சார்பாகவே, உங்கள் வலியை உணர்ந்து, என் வார்த்தைகளை இன்று இங்கு
விதைக்கிறேன்.
ஆண்டுதோறும் அந்த மே மாதத்துத் துயரம் வரும்போது, நம் நெஞ்சில் கனக்கும் பாரம், அதை நேரடியாக அனுபவித்த, உறவுகளை இழந்த, சொந்த மண்ணில் காயப்பட்டவர்களுக்குத்தான் முழுமையாகத் தெரியும். ஒவ்வொரு ஆத்மாவின் இழப்பும், நம் ஒவ்வொருவர் இதயத்திலும் ஆழமான காயம். "இலங்கைத் தமிழனாகப் பிறந்த" எவருக்கும், அந்தக் கருப்பு தினத்தை மனதில் வைத்துக்கொண்டு, கொண்டாட்டங்களில் ஈடுபட மனம் வராது. ஆனால் சில …கள் இதனை எள்ளி நகையாடுவதுபோல் சம்பவம் செய்வது மிக வேதனைதருகின்றது.
ஆம்,
இது வெறும்
சரித்திரப் பக்கம் அல்ல. இது என் தொப்புள் கொடி உறவுகளின் வலி. அங்கே ஒரு காயம்
பட்டால், என்
கண்ணிலும் நீர் வழியும். அந்த வலியை, அந்தத் துயரத்தை, அந்த இழப்பை உணராதவர்களைப் பாருங்கள்; அவர்கள் பெரும்பாலும் நம் உறவுப்
பிணைப்புகளிலிருந்து விலகியே நிற்பார்கள். இந்த மண்ணின் ஈரத்தை, இந்த மக்களின் கண்ணீரை அவர்கள்
அறிந்திருக்க மாட்டார்கள்.
ஆனால்,
வெறும் வலியோடு
நின்றுவிட்டால் போதாது! அந்த வலி நமக்கு ஒரு பாடத்தைக் கற்பிக்கிறது. வாழ்க்கை
என்பது வீழ்ந்தாலும் எழுவதுதான். ஒவ்வொரு வீழ்ச்சியும் ஒரு புதிய பாடத்திற்கான
ஆரம்பம். ஆம், கடந்த
காலம் கசப்பானது; ஆனால்
வருங்காலம் நம் கைகளில் உள்ளது. நமக்கான நீதி, அது பழிவாங்கலால் பிறப்பதல்ல. உண்மையான,
நடுநிலையான
விசாரணைகளாலும், வருங்கால
சந்ததிக்கு ஏற்படும் காயம் தவிர்க்கப்படுவதிலுமே தங்கியுள்ளது.
நீதி
நிலைக்கும், அநீதி
அழியும்; பொறுமை
வெல்லும், அவசரம்
வீழும். மனங்கள்
இணைந்தால், மௌனமும்
பேசும்; கரங்கள் கோர்த்தால்,
சவால்களும் சாயும்.
நாம்
பலம் பெற வேண்டும். நமது பலம் பணத்திலோ, பதவியிலோ இல்லை; அது நமது ஒற்றுமையிலும், நேர்மையிலும், ஒருவருக்கொருவர் காட்டும் அன்பிலுமே தங்கியுள்ளது.
உலகப்
புகழ்பெற்ற தலைவர் வின்ஸ்டன் சேர்ச்சில் ஒருமுறை கூறினார், "வெற்றி என்பது இறுதி அல்ல, தோல்வி என்பது ஆபத்தானதும் அல்ல;
தொடரும்
தைரியமே முக்கியமானது." ஆம், நமது பயணத்திலும், இந்தத் தொடரும் தைரியமே நம்மை வழிநடத்த
வேண்டும். நமது வலிகளை உரமாக்கி, நமது
கனவுகளை விதையாக்கி, நமது
எதிர்காலத்தைப் பயிர் செய்வோம்.
நான்
உங்கள் முன் நின்று கூறுவது
வெறும் வார்த்தைகளை
அல்ல; உங்களின்
நம்பிக்கைகளையும், உங்களின்
அச்சங்களையும், உங்களின்
எதிர்பார்ப்புகளையும் பேசுகிறேன். ஒரு தேர்ந்த தலைவர், வழிகாட்டி என்பவர், மக்கள் பேசத் தயங்கும் இடங்களில்
மக்களின் குரலாக ஒலிக்க வேண்டும். நீதிக்காய், நடுநிலைமைக்காய், நமது வருங்கால சந்ததியின் வாழ்வுக்காய்
குரல் கொடுக்க வேண்டும்.
வருங்காலங்களில்
நாம் இன்னும் பல சவால்களை சந்திக்க நேரிடலாம். பொருளாதார நெருக்கடிகள், சமூகப் பிளவுகள், அரசியல் சூழ்ச்சிகள்... இவை அனைத்தையும்
அன்பாலும், அறிவாலும்,
ஒற்றுமையாலும் நாம்
எதிர்கொள்ள வேண்டும். கடந்த காலத்தின் கசப்பான பாடங்களை மறவாமல், வருங்காலத்தின் விடியலுக்காய்
உழைப்போம். பிரிந்து நின்று பலவீனமாவதை விட, ஒருமைப்பட்டு வலிமையாவோம்.
நமது
எதிர்காலம் நம் கைகளில்தான் உள்ளது. கல்விக்கு முக்கியத்துவம் கொடுங்கள், தொழிலில் நேர்மையாய் இருங்கள், சக மனிதனை நேசியுங்கள். நமது அடுத்த
தலைமுறை நிம்மதியாய், மரியாதையாய்
வாழ ஒரு தேசத்தைக் கட்டியெழுப்புவோம்.
வாருங்கள்
என் உறவுகளே, கடந்த
காலத்தின் வலியை நினைவில் கொண்டு, ஒருமைப்பாட்டின்
வலிமையோடு, வருங்காலத்தின்
நம்பிக்கையை நோக்கிப் பயணிப்போம். இது என் தனிப்பட்ட அழைப்பு மட்டுமல்ல, நம் ஒவ்வொருவரின் பொறுப்பு! உங்கள்
நம்பிக்கைதான் என் பலம். உங்கள் குரலே என் பேச்சு.
நீதிக்காய்,
நிம்மதிக்காய்,
நமது வருங்கால
சந்ததியின் வாழ்வுக்காய் இணைந்து பயணிப்போம்.
0 comments:
Post a Comment